Sunday 28 December 2008

சித்திரப்பாவை - ஒரு பார்வை

வலைப்பூவில் எழுத வேண்டும் என்கிற என்னுடைய பல நாளது விருப்பம் இன்று நிறைவேறுகிறது. ஒரு வாரம் முன்பு தான் அகிலனின் சித்திரப்பாவை படித்து முடித்தேன். முதன் முதலில் தமிழுக்கு ஞான பீட பெற்று தந்த நூல் இது. இந்த நூல் வாங்கி, நான் படிப்பதற்கு முன் என் நண்பர்கள் இருவர் படித்துவிட்டு மிக சிறப்பான நூல் என்று கூறினர். 1968 இல் எழுதப்பட்ட இந்நாவலை படித்த பின் எனக்கு ஆச்சரியமாக தோன்றியது இன்றைய சூழலுக்கும் இந்நாவல் வரிக்கு வரி பொருந்தி வருகிறது என்பதுதான் . இந்நாவலில் இந்த சமுதாயம் எந்த திசையில் போகக்கூடது என்று அகிலன் கூறுகிறாரோ சரியாக அந்த திசையில் பயணம் செய்து வந்திருக்கிறது(றோம்). இந்நூலில் ஒரு இடத்தில் சரவணன் கதாபாத்திரம் இப்படி சொல்கிறார் "இனி கோவில்கள் கட்டிக் கவர்ச்சி நடிகைகளுக்குச் சிலை வடிக்க தொடங்கினாலும் தொடங்கி விடுவார்கள் எங்கள் இளைஞர்கள் !", அன்று சொன்னதை 1990 களில் நம் இளைஞர்கள் செய்துவிட்டனர்.

இந்நாவலில் அண்ணாமலை கதாபத்திரம் தனக்கு பிடித்தமான நியாமான வாழ்க்கை வாழ எப்படி எல்லாம் இந்த சமுதாயத்தில் போராடவேண்டி இருக்கிறது என்றும் அதற்கு என்னவெல்லாம் இழக்க வேண்டி இருக்கிறது என்றும் விவரிக்கிறது. அண்ணாமலை தன் லட்சியத்தை அடைய கதிரேசன், ஆனந்தி, சரவணன் மற்றும் சாரதா கதா பாத்திரங்கள் எப்படி உதவுகிறார்கள் என்றும்; மாணிக்கம், சுந்தரி மாதிரி ஆட்கள் எப்படி தடை கற்க்களாக இருக்கிறார்கள் என்றும் விவரிக்கிறது. இன்றைய காலத்தில் அண்ணாமலைகளும் , ஆனந்திகளும் குறைந்து மாணிக்கங்களும் சுந்தரிகளும் அதிகமகிவிட்டனர். இக்கதையின் முடிவு மிக நல்ல முடிவாக இருந்தது, இந்த கதை வெளிவந்த காலத்தில் கட்டாயம் இதன் முடிவு பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கும்.இந்நூல் மிக அழகான நடையில் எழுதப்பட்டிருக்கிறது, இப்போது படிப்பதற்கும் இனிமையாக இருக்கிறது. ஒரு தெளிந்த நீரோடை போல கதை சொல்கிறார் ஆசிரியர். 1960களில் சென்னை எவ்வளவு அழகாக இருந்திருக்கிறது என்று படிப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.


நமக்கு இந்த நூல் கற்று கொடுப்பது இதுதான்:

"அழகாக வாழக் கற்றுக் கொள்;
முடிந்தால் வாழ்கையை அழகு படுத்து;
முடியாவிட்டால் அதை அசிங்கப் படுத்தாமலாவது இரு;"

- அகிலன்


இந்நூல் என்னைபொறுத்தவரையில் தமிழில் மிக முக்கியமான நூல், இந்த காலகட்டத்தில் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது, எத்தனை பேர் படிக்கிறார்கள்? இந்நூலை மக்களுக்கு எடுத்து செல்ல எனக்கு தோன்றும் இரண்டு வழிகள்:
1. குத்து பாட்டு, தனி காமெடி எல்லாம் இல்லாமல் ஒரு சிறந்த படமாக எடுக்கலாம்.
2. பள்ளி/கல்லூரிகளில் பாடமாக வைத்து மாணவர்களுக்கு இந்நூலை கொண்டு சேர்ப்பது.

என்னுடைய இந்த முதல் பதிவை படித்தமைக்கு நன்றி!