Monday 26 September 2011

எங்கேயும் எப்போதும்

பெரும்பாலானோர் ஊரு விட்டு ஊரு வந்து வேலை பார்க்கும் இன்றைய வாழ்கையில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நாம் தினமும் எங்கையாவது பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அப்படி பயணம் போகும் போது நிகழும் விபத்தும் அதனால் ஏற்படும் பாதிப்பும் என்ன என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் எங்கேயும் எப்போதும்.


சென்னைக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் அனன்யாவிற்கு ஒரு நெருக்கடியில் உதவி செய்ய வருகிறார் சர்வா, அன்று முழுவதும் அவருடனேயே சர்வா இருக்க நேர்கிறது. அந்த சம்பவங்கள் ஒரு track. திருச்சியில் அமைதியான ஜெய், அதிரடியான அஞ்சலி, இடையேயான காதல் மற்றொரு track. இவர்கள் பயணம் செய்யும் பேருந்துகள் பேருந்துகள் விபத்துகுள்ளவதும் அதன் பாதிப்புமே படம்.


படத்தில் எனக்கு பிடித்த விசையங்கள், படத்தின் முதன்மை பத்திரம் முதல், சில காட்சிகளே வரும் பயணிகள் வரை  ஒவ்வொரு கதாபத்திரத்தையும் அழகாக கட்டமைத்திருக்கிறார்  இயக்குனர். மிதப்பான ஊர் தலைவர், வெளிநாட்டில் இருந்து வருடங்கள் கடந்து வரும் நபர், அந்த கல்லூரி மாணவன் மற்றும் மாணவி, சமத்து குழந்தை, அந்த மாமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும்  ஒரு வடிவம் கொடுத்திருப்பது அழகு, அதனால் படத்துடன் ஒன்ற முடிகிறது. தேவை இல்லாத பாடல்களின்றி, தேவையான அளவு நகைச்சுவை தெளித்து, எங்கும் தொய்வடையாமல் சீராக செல்லும் திரைக்கதை மற்றொரு பலம். சத்யாவின் இசையும் வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு தேவையான அளவு சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் காட்சிகளும், விபத்து காட்சியும் மிக அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.




படத்தில் எல்லா பாத்திரங்களும் சிறப்பாக இருந்தது, அதில் அஞ்சலியின் பாத்திரம் கொஞ்சம் புதிது. சர்வாவின் உதவும் குணம், விபத்தின் போது அஞ்சலியின் செயல் என எல்லா பாத்திரமும் படம் நெடுக அதன் இயல்பை விட்டு விலகாமல் இருந்தது சிறப்பு. என்னை மிகவும் கவர்ந்தது அனன்யாவின் பாத்திரம், திருமணமான புதிதில் முதல் முறை என் மனைவி சென்னை வந்த போது அவள் வெளிப்படுத்திய உணர்வுகளை அப்படியே பிரதிபலித்தது. (சென்னை சாலைகளை பார்த்து விட்டு என்னைக் கேட்டாள் "இத்தனை பெரும் எங்கதான் போறாங்க" என்று). அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருகின்றனர். அனைவருக்கும் மேலும் நல்ல படங்கள் அமைந்தால் நல்லது.


எடுத்துக்கொண்ட கதைக்கும், அவருடைய குருநாதர் கொடுத்த வாய்ப்பிற்கும்   நியாயம் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். முதல் படத்தில் அவருடைய திறமையை நிருபித்திருக்கிறார் மேலும் இது போல நல்ல படங்கள் தர வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் முருகதாஸ் அவர்களும் இப்படத்தின் வெற்றியின் மூலம் மேலும் சிலருக்கு இயக்குனர் வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.


படத்தில் சில குறைகள் இருந்தாலும், இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு கருத்தை நேர்மையாக  சொல்லியிருக்கும் இப்படத்திற்கு, சிறந்த படங்களின் வரிசையில் எங்கேயும் எப்போதும்  ஒரு இடம் உண்டு. கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள், படம் பார்த்தபின் உங்கள் வாகனத்தின் வேகத்தை நீங்கள் குறைக்கக் கூடும்.

3 comments:

Philosophy Prabhakaran said...

தல நேர்ல பார்த்தப்போ உங்களை சரியா அடையாளம் கண்டுக்க முடியல... நிறைய பேசவும் முடியல... அதற்காக வருந்துகிறேன்... அடிக்கடி எழுதுங்கள்...

Philosophy Prabhakaran said...

தமிழ்மணத்தில் இணைக்கலாம் என்று இணைத்தால் உங்களுடைய ஒரு வருடத்திய பதிவும் இணைந்துவிட்டது...

Annamalai Swamy said...

நன்றி பிரபாகர், அடுத்தமுறை நாம் கண்டிப்பாக பேசலாம். தொடர்ந்து எழுத வேண்டும் என்றே இருக்கிறேன், பார்க்கலாம்.