Saturday 22 January 2011

ஆடுகளம்

பொல்லாதவன் கூட்டணியின் அடுத்த படைப்பு ஆடுகளம். காணும் பொங்கலன்று நான் கண்ட திரைப்படம்.

மதுரையில் சேவல் சண்டையில் பெரிய ஆள் பேட்டைக்காரன். அவரை சேவல் சண்டையில் தோற்கடிப்பதே லட்சியமாக கொண்டிருப்பவர்  ரத்தினவேல். காவல் ஆய்வாளரான ரத்தினவேலிடம் மோதுவது தன்னுடன் இருப்பவர்களுக்கு நல்லதல்ல என்று சேவல் சண்டையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்  பேட்டைக்காரன். அவரை மீண்டும் சண்டைக்கு  இழுக்கிறார் ரத்தினவேல். ஒரு சூழ்நிலையில்  ரத்தினவேலுடன் கடைசி முறையாக "உசுருக்கு சமானம் தான் போட்டி " என்று சவால் விட்டு சேவல் சண்டையில் மோத தயாராகிறார்   பேட்டை. கருப்பு(தனுஷ்) மற்றும் துரையின்(கிஷோர்) உதவியுடன் பேட்டைக்காரன் எப்படி வெல்கிறார் என்பது முதல் பாதி.



இந்த வெற்றியில் பேட்டைக்காரன் தேறாது என்று சொன்ன சேவலை வைத்து கருப்பு ஒரு பெரிய பரிசு ஜெயித்து விட திடீர் பிரபலமாகிறார். அதன் தொடரச்சியாக நடக்கும் சம்பவங்களால் தனது மரியாதை பாதிக்கப்படுவதாக உணர்கிறார் பேட்டை, இதனால் பேட்டைக்கு ஏற்படும் வெறுப்பும், அதன் விளைவுகளும் இரண்டாவது பாதி.

சேவல் சண்டையைப் பற்றி படம் ஆரம்பிக்கும் போதே நம்மை உள்ளிழுத்து விடுகிறார் வெற்றிமாறன். யாரும் தொடாத களத்தை தொட்டு சீரிய திரைகதையில் படத்தை நகர்த்தி சென்ற வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்.    இந்நேரம் 'நிதி' குடும்பத்தினர் யாராவது  இவரை அடுத்த படத்திற்கு புக் செய்திருப்பார்கள். படத்தின் பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஜீ வியின் பின்னணி இசையும். சேவல் சண்டையை கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டியிருப்பது போல் தோன்றினாலும் அந்த கிராபிக் காட்சிகள் நன்றாகவே இருந்தன.

தனுஷின் நடிப்பு அபாரம், அந்த உடல் மொழியும், நக்கல் கலந்த மதுரை தமிழ் பேச்சும் என அவர் ராஜ்ஜியம் தான். பேட்டைக்காரன் பின்னால் சுற்றுவதும்,  காதலியிடம் மருகுவதும், அம்மாவுடன் சேவலுக்காக சண்டையிடுவதும், துரையிடம் "அண்ணே" என்று அன்பைப் பொழிவதும் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.  பல பொழுதுபோக்கு படம் நடித்து வந்தாலும் நடுநடுவே இந்த மாதிரி கதைக்கும் நடிப்பிற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தனுஷ் தேர்ந்தெடுத்து நடிப்பது ஆரோக்கியமான விஷையம்.

பேட்டைக்காரனாக கவிஞர் ஜெயபாலன் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோசம், கோபம், வெறுப்பு என  பல்வேறு உணர்வுகளை அவர் உடல் மொழியில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார், அவருக்கு மிக சிறப்பாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் ராதாரவி. கிஷோர் இயல்பாக சிறப்பாக நடித்திருக்கிறார்.  இவருக்கு ஹீரோவிடம் அடிவாங்கும் வில்லன் பாத்திரம் மட்டுமின்றி   இந்தமாதிரி பாத்திரங்களும் தொடர்ந்து கிடைத்தால் நன்று. பேட்டையின் இளம் மனைவி, கருப்பின் நண்பன், சேவல் சண்டையை நடத்துபவர் என ஒவ்வொரு பாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

மெதுவாக செல்லும் சில காட்சிகள்,  தமிழ்ப்பட சம்பரதாயமாக கடைசியில் நாயகனுடன் சேர்ந்துகொள்ளும் நாயகி , போன்ற சிறு குறைகள் இருந்தாலும் கதை களம், சிறப்பான  இயக்கம்  மற்றும் நடிப்பிற்காகவும்  கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் ஆடுகளம்.

Monday 17 January 2011

34வது சென்னை புத்தகக்காட்சி

இந்த வருட புத்தக காட்சிக்கு நேற்றுத்தான் செல்ல முடிந்தது. நான் புத்தகம் படிப்பதற்கே திட்டும் என் மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தேன். புத்தகங்களைப் பார்த்து இவ்வளோ புத்தகங்களா! என்று  ஆச்சர்யப்பட்டாள். புத்தகங்களைப் பார்பதற்கே மகிழ்வாக இருக்கிறது. சில பதிப்பகங்களை தவிர  பெரும்பாலான கடைகளில் கூட்டமாகவே இருந்தது.


இந்த முறை எப்படியும் எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்தேன், கிடைத்தது. அன்னம் பதிப்பகத்தில் திரு  மற்றும் திருமதி கி.ரா  அமர்ந்திருந்தார்கள் , இதுவரை அவருடைய புத்தகங்கள் படித்ததில்லை என்றாலும் அவரிடம் கையெழுத்திற்காக அவரின்   புத்தகம் ஒன்று வாங்கி கையெழுத்து வாங்கி வந்தேன், கனிவாக பேசினார் கி ரா, அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.  முதல் சுற்றில் உயிர்மையில் பிரபலங்கள் யாரும் இல்லை. கிளம்புவதற்கு முன் உயிர்மையில் எஸ்.ரா  இருப்பார் (உயிர்மையில் மாலை 4:30 மணிக்கு மேல் இருப்பேன் என்று அவருடைய வலைத்தளத்தில் கூறியிருந்தார்) என்று சென்றேன், எஸ். ரா இல்லை ஆனால் மனுஷ்யபுத்திரனும், சாருவும் இருந்தார்கள், அவர்களிடம் பேசவில்லை திரும்பி  வரும்போது பதிவர் எழுத்தாளர் நர்சிம் (ரொம்ப ஸ்மார்டாக) நின்றிருந்தார், அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சில வார்த்தைகள் பேசிவிட்டு வந்தேன்.

கி.ராவுடன்
மாலை 6:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்படிருந்த உரை அரங்கத்தில்  பாரதி பாஸ்கர், வைத்தியநாதன் ஆகியோர் பேசுவதாக அறிவித்திருந்தனர். நம் பண்பாட்டின் படி 45 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்தது உரை அரங்கம். நூலகர் முத்துசாமி அவர்கள் நூலகர்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார். அடுத்து பாரதி பாஸ்கர் "இத்தரை மீதினிலே தமிழ் எத்துனை உயர்ந்ததம்மா" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

இந்த முறை அதிக புத்தகங்கள் வாங்க எண்ணம் இல்லை. ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்க மட்டுமே எண்ணியிருந்தேன்.அதற்கு காரணம் போன மாதம் இதற்கு முன் வேலை செய்த அலுவலகத்தின் கடைசி நாளன்று நினைவுப் பரிசாக ஆறு புத்தகங்கள் கொடுத்திருந்தனர், மேலும் அதற்கு முன் வாங்கிய சில புத்தகங்கள் இன்னும் உறை பிரிக்கப்படாமல் இருகின்றன. அப்புத்தகங்களை கிழித்து (உறையை)    படித்து விட்டு மேலும் புத்தகங்கள் வாங்கலாம் என்றிருக்கிறேன்.

தினத் தந்தியின் "வரலாற்றுச் சுவடுகள்" 864 பக்கங்கள் ஆர்ட் காகிதத்தில் வண்ண எழுத்து, படங்களுடன்  270 ரூபாய்க்கு விற்றனர், டீ கடையில் பஜ்ஜி விற்பதுபோல்  சுடச் சுட விற்றுக் கொண்டிருந்தது. இப்புத்தகம் வெளிவந்து நான்கு மாதத்தில் இரண்டாவது பதிப்பு கண்டிருக்கிறது, amazing.  சந்தேகமில்லாமல் இந்த வருடம் அதிக விற்பனையான புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். இப்புத்தகத்தை பற்றி எனக்கு ஒரே குறை இவ்வளோ பெரிய புத்தகத்தை பயணத்தின் போது எடுத்து சென்று படிக்க முடியாது, கீதை மாதிரி வீட்டிலேயே படிக்க வேண்டும். மூன்று நான்கு வால்யுமுகளாக போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், மற்ற படி அருமையான புத்தகம்.

நான் வாங்கிய புத்தகங்கள்:
என் இனிய இயந்திரா - சுஜாதா (வாத்தியார் புத்தகம் இல்லாமலா?)
கிராமியக் கதைகள் - கி. ரா
வரலாற்றுச் சுவடுகள் - தினத் தந்தி
காந்திய நெறியில் நம் வாழ்க்கை (VCD) - நெல்லை கண்ணன் உரை .
வெரைட்டி ரைஸ் வகைகள் - கீதா பாலகிருஷ்ணன் (ஹி... ஹி... இது வீட்டம்மாவுக்கு)