Showing posts with label லஞ்சம். Show all posts
Showing posts with label லஞ்சம். Show all posts

Wednesday, 5 August 2009

அரசு அலுவலகத்தில் அரை நாள்

கடந்த வாரம் அரசு சார் நிலை கருவூல (sub treasury) அலுவலகத்துக்கு சென்றிந்தேன் அந்த அனுபவமே இந்த பதிவு.

நான் அந்த அலுவலகம் செல்ல கரணம் தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தில் LCS ஒப்பந்தம் ஒன்றில் இருபது ரூபாய் மதிப்புள்ள முத்திரை (Stamp) பெற்று வருமாறு கூறினர். அதற்க்காக நான் தங்கி இருக்கும் இடத்திற்கு பக்கமாக இருக்கும் பனகல் மாளிகைக்கு சென்றேன், நான் சென்ற போது காலை 10 மணி அப்போதுதான் அலுவகத்திற்கு அலுவலர்கள் வந்துகொண்டிருந்தனர். அங்கு விசாரித்த போது அது மேலாண்மை அலுவலகம் என்றும் அங்கு முத்திரை இடமாட்டார்கள் என்றும் சின்ன மலை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சார் நிலை கருவூல அலுவலகத்துக்கு சென்றால் கிடைக்கும் என்றும் கூறினர். ஆகவே ஒரு M7 ஐ பிடித்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சின்ன மலை நீதிமன்ற வளாகத்திற்கு சென்றேன். அங்கு நுழைந்ததும் சில வக்கீல்கள் notaryயா என்று கேட்டுக்கொண்டு கிட்ட தட்ட ஓடிவந்தனர் நான் அவசரமாக மறுத்துவிட்டு கருவூல அலுவலகம் எங்கு இருக்கிறது என்றேன், ஒரு வக்கீல் இந்த வழியில் போனால் வரும் என்று வேண்டா வெறுப்பாக ஒரு பாதையை காட்டினார். அது வழக்கு நடக்கும் ஒரு வளாகத்தை ஒட்டி சென்றது அங்கு அடுத்த நடக்க போகும் வழகிற்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்த வளாகத்தை தாண்டியதும் இருந்த இடம் அப்பப்பா நீதி மன்றதிற்க்குள் இப்படி ஒரு இடமா? பழைய இரும்பு பொருட்கள், தகரங்கள், ரப்பர் டியுப்புகள் மற்ற கண்டதுகளும் கிடந்தன. அதை ஒட்டிய ஒரு சுவரை உடைத்து ஒரு வழி செய்திருந்தனர், அதன் வழியே சென்றேன், அந்த பாதையில் 20 நடை வைப்பதற்குள் நான் தேடிய அலுவலகம் இருந்தது. இந்த அலுவகத்திற்கு ஒரு நல்ல பாதை இருந்தது அப்போதுதான் தெரிந்தது, ஏனோ நம் வக்கீல்கள் நல்ல பாதையையே காட்டுவதில்லை.

அங்கு சென்றால் ஒரு காவலதிகாரி நாளிதழ் படித்து கொண்டிருந்தார். உள்ளே இரண்டு அலுவலர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருவரிடம் விஷயத்தை கூறினேன் அவர், நான் கூறியதை ஒரு கடிதமாக எழுதி அதில் 2 ரூபாய் மதிப்புள்ள court fees அஞ்சல் தலை ஒட்டி தர சொன்னார், அவரே அஞ்சல் தலை இவ்வலுவலக பின்புறத்தில் கிடைக்கும் என்றார். அங்கு சென்றால் 2 ரூபாய் court fees அஞ்சல் தலையை 3 ரூபாய் பெற்று கொண்டு கொடுத்தனர். பின்னர் நான் கொண்டுவந்திருந்த ஒரு வெள்ளை தாளில் ஒரு கடிதம் எழுதி கொடுத்தேன் (அரசு அலுவலகத்திற்கு செல்பவர்கள் கண்டிப்பாக சில வெள்ளை தாள்கள், பேனா, பசை போன்றவற்றை பள்ளிக்கூடத்தில் பரீட்சைக்கு எடுத்து செல்வது போல எடுத்து செல்லுங்கள் சில தலைவலிகள் குறையும்). கடிதத்தை பெற்றுக்கொண்டு ஒரு சலானை (chalan) கொடுத்து நிரப்பி தர சொன்னார் (20 ரூபாய்க்கு), அதை நிரப்பி கொடுததும் அதை கொண்டு ஒரு வங்கியில் பணம் கட்ட வேண்டும் என்றனர் நானும் ஏதோ பக்கத்தில் இருக்கிற வங்கி தான் என்று சரி கட்டிவிட்டு வருகிறேன் என்றேன், அதற்கு அவர் பக்கத்து வங்கியில் கட்டக்கூடாது என்றும் தேனாம்பேட்டையில் இருக்கும் SBI யில் தான் கட்ட வேண்டும் என்றார் அடபாவிகளா சின்ன மலையில் இருக்குற ஒரு அலுவலகத்திற்கு பணம் கட்ட தேனாம்பேட்டை போகனுமா? சரி என்று பேருந்தில் போக கடுப்பாக இருந்ததால் ஒரு auto பிடித்து 40 ரூபாய் கொடுத்து தேனாம்பேட்டை ஈ வெ ரா மாளிகையில் உள்ள SBI வங்கியில் 20 ரூபாய் கட்டிவிட்டு, திரும்பி 23C ஐ பிடித்து மறுபடியும் அந்த அலுவலகதிருக்கு சென்று பணம் கட்டிய ரசீதை கொடுத்தேன், அதை பெற்று கொண்டவர் மாலை 6 மணிக்கு வந்து முத்திரையை பெற்றுகொள்ளுமாறு கூறினார், நான் அதெல்லாம் முடியாது என்றும் உடனே வேண்டும் என்று கூறினேன் உடனே அவர் அதற்க்கு கொஞ்சம் செலவாகும் என்றும் உள்ளிருப்பவர் (உயர் அதிகாரி) எதிர்பார்ப்பார் என்றும் கூறினார். நானும் வேற வேலைகள் இருந்ததால் அவர் கேட்ட 50 ரூபாயை கொடுத்தேன், பணம் கொடுத்த இரண்டாவது நிமிடத்தில் 20 ரூபாய் முத்திரையிடப்பட்ட என்னுடைய LCS ஒப்பந்தம் கைக்கு வந்தது. நான் திரும்பி வரும் போது முதலில் பார்த்த வழக்கு நடக்கும் வளாகத்தில் இப்போது கூட்டம் அதிகமாகி பலர் பரபரப்பாக காணப்பட்டனர்.

ஆக ஒரு 20 ரூபாய் முத்திரை பெறுவதற்கு நான் செய்த செலவு 120 ரூபாயும் மூன்று மணிநேரமும். லஞ்சம் கேட்பவர்களை பற்றி புகார் செய்வதற்கு அரசாங்க லஞ்ச ஒழிப்புத்துறை இருக்கிறது, அவர்களிடம் புகார் செய்தால் உடனே அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிந்தும் அவர்களிடம் புகார் கூற தைரியம் ஏனோ வரவில்லை.