Monday, 26 September 2011

எங்கேயும் எப்போதும்

பெரும்பாலானோர் ஊரு விட்டு ஊரு வந்து வேலை பார்க்கும் இன்றைய வாழ்கையில் பயணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நாம் தினமும் எங்கையாவது பயணம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அப்படி பயணம் போகும் போது நிகழும் விபத்தும் அதனால் ஏற்படும் பாதிப்பும் என்ன என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் எங்கேயும் எப்போதும்.


சென்னைக்கு ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் அனன்யாவிற்கு ஒரு நெருக்கடியில் உதவி செய்ய வருகிறார் சர்வா, அன்று முழுவதும் அவருடனேயே சர்வா இருக்க நேர்கிறது. அந்த சம்பவங்கள் ஒரு track. திருச்சியில் அமைதியான ஜெய், அதிரடியான அஞ்சலி, இடையேயான காதல் மற்றொரு track. இவர்கள் பயணம் செய்யும் பேருந்துகள் பேருந்துகள் விபத்துகுள்ளவதும் அதன் பாதிப்புமே படம்.


படத்தில் எனக்கு பிடித்த விசையங்கள், படத்தின் முதன்மை பத்திரம் முதல், சில காட்சிகளே வரும் பயணிகள் வரை  ஒவ்வொரு கதாபத்திரத்தையும் அழகாக கட்டமைத்திருக்கிறார்  இயக்குனர். மிதப்பான ஊர் தலைவர், வெளிநாட்டில் இருந்து வருடங்கள் கடந்து வரும் நபர், அந்த கல்லூரி மாணவன் மற்றும் மாணவி, சமத்து குழந்தை, அந்த மாமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும்  ஒரு வடிவம் கொடுத்திருப்பது அழகு, அதனால் படத்துடன் ஒன்ற முடிகிறது. தேவை இல்லாத பாடல்களின்றி, தேவையான அளவு நகைச்சுவை தெளித்து, எங்கும் தொய்வடையாமல் சீராக செல்லும் திரைக்கதை மற்றொரு பலம். சத்யாவின் இசையும் வேல்ராஜின் ஒளிப்பதிவும் படத்திற்கு தேவையான அளவு சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக பேருந்தில் பயணம் செய்யும் காட்சிகளும், விபத்து காட்சியும் மிக அற்புதமாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.




படத்தில் எல்லா பாத்திரங்களும் சிறப்பாக இருந்தது, அதில் அஞ்சலியின் பாத்திரம் கொஞ்சம் புதிது. சர்வாவின் உதவும் குணம், விபத்தின் போது அஞ்சலியின் செயல் என எல்லா பாத்திரமும் படம் நெடுக அதன் இயல்பை விட்டு விலகாமல் இருந்தது சிறப்பு. என்னை மிகவும் கவர்ந்தது அனன்யாவின் பாத்திரம், திருமணமான புதிதில் முதல் முறை என் மனைவி சென்னை வந்த போது அவள் வெளிப்படுத்திய உணர்வுகளை அப்படியே பிரதிபலித்தது. (சென்னை சாலைகளை பார்த்து விட்டு என்னைக் கேட்டாள் "இத்தனை பெரும் எங்கதான் போறாங்க" என்று). அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருகின்றனர். அனைவருக்கும் மேலும் நல்ல படங்கள் அமைந்தால் நல்லது.


எடுத்துக்கொண்ட கதைக்கும், அவருடைய குருநாதர் கொடுத்த வாய்ப்பிற்கும்   நியாயம் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சரவணன். முதல் படத்தில் அவருடைய திறமையை நிருபித்திருக்கிறார் மேலும் இது போல நல்ல படங்கள் தர வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பாக்ஸ் ஸ்டுடியோஸ் மற்றும் முருகதாஸ் அவர்களும் இப்படத்தின் வெற்றியின் மூலம் மேலும் சிலருக்கு இயக்குனர் வாய்ப்பு வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.


படத்தில் சில குறைகள் இருந்தாலும், இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு கருத்தை நேர்மையாக  சொல்லியிருக்கும் இப்படத்திற்கு, சிறந்த படங்களின் வரிசையில் எங்கேயும் எப்போதும்  ஒரு இடம் உண்டு. கண்டிப்பாக திரையரங்கில் சென்று பாருங்கள், படம் பார்த்தபின் உங்கள் வாகனத்தின் வேகத்தை நீங்கள் குறைக்கக் கூடும்.

Monday, 18 July 2011

தெய்வத்திருமக(ன்)ள்

30 வயது உடல் வளர்ச்சி  ஐந்து வயது மன வளர்ச்சியும் உள்ள தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்குமான உறவும் பிரிவும் போராட்டமுமே தெய்வத்திருமகள்.

ஊட்டியில் ஒரு கிராமத்தில் தங்கி அங்கயே  உள்ள  சாக்லேட் பாக்டரியில் வேலை செய்பவர் கிருஷ்ணா (விக்ரம்), அவருடைய மனைவி ஒரு குழந்தை பெற்றுக்கொடுத்துவிட்டு இறந்து விடுகிறார். அந்தக் குழந்தையை குளிப்பாட்டி, உணவூட்டி, பாதுகாத்து, கதை சொல்லி  அங்கிருப்பவர்களின் உதவியுடன் வளர்க்கிறார் கிருஷ்ணா. அழகாக வாழ்ந்து வரும் தந்தையும் மகளும், ஒரு கட்டத்தில் கிருஷ்ணாவின் மாமனார் மூலம் பிரிக்கப்படுகிறார்கள், இது முதல் பாதி.

 சென்னையில் தனது மகளை தேடி அலையும் கிருஷ்ணா, தனது மகளை மீட்டுத்தருமாறு வக்கீல் அனுராதாவிடம் உதவி கேட்கிறார், அவரின் கதையை கேட்டு உதவி செய்ய முன்வருகிறார் அனுராதா. அவர் மிக மூத்த வக்கீலான பாஷ்யத்துடன் வழக்காடி கிருஷ்ணாவிற்கு அவர் குழந்தை நிலாவை மீட்டுக்கொடுத்தாரா இல்லையா என்பது உணர்ச்சிமயமான கிளைமாக்ஸ் உடன்  இரண்டாவது பாதி.


 
 
கிருஷ்ணா என்ற வளர்ந்த குழந்தையாகவே மாறியிருக்கிறார்  விக்ரம், அவருடைய உடல் மொழி அற்புதம். ஒவ்வொரு படத்திருக்கும் அவர் எடுத்து கொள்ளும் சிரத்தை வியக்கவைக்கிறது.  இதுவரை அவர் செய்த பாத்திரங்களில் மிக சிறப்பானதாக இதை சொல்லலாம்.  இப்படத்திற்காக பல  விருதுகள் அவரை தேடிவரும் என் நம்புகிறேன். விக்ரமிற்கு இணையான பாத்திரம் நிலாவாக  நடித்திற்கும் குழந்தை சாராவிற்கு. இயல்பாக நடித்து அசத்தியிருக்கிறார். சுத்திபோடுங்கப்பா சாராவிற்கு, எத்தனை கண்ணு பட்டுச்சோ.வக்கீலாக அனுஷ்கா, அழகாக அளவாக நடித்திருக்கிறார். பள்ளி நிர்வாகியாக அமலா பால், முதல் பாதியில் நகைச்சுவைக்கு எம் எஸ் பாஸ்கர், இரண்டாம் பாதியில் சந்தானம் என துணை பாத்திரங்கள் சிறப்பாக செய்திருக்கின்றனர். பாஷ்யம் என்ற அப்பாடக்கர் வக்கீலாக நாசர்,  சில காட்சிகளை தவிர சிறப்பாக செய்திருக்கிறார் .

மதராசபட்டினத்தை தொடர்ந்து ஒரு வித்யாசமான ஒரு திரைப்படத்தை அளித்திருக்கும் இயக்குனர் விஜய்க்கு வாழ்த்துக்கள். எடுத்துக்கொண்ட கதையை சிறப்பான  திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் விஜய். படத்தில் பல நெகிழ்ச்சியான காட்சிகள் இருகின்றன, ஆனால் அவைகளுக்கு இடையே நகைச்சுவையை தெளித்து  ஓவர் emotional dramaவாக ஆக்காமல் திரைக்கதை அமைத்திருப்பது அழகு. குழந்தைக்கு நிலா என்று பெயர் வைப்பது, பிடித்த பட்டாம் பூச்சி பறந்ததும் ஏமாறும் கிருஷ்ணாவை நிலா தன் இமைகளையே பட்டாம்பூச்சி போல் அசைத்து  மகிழ்ச்சிப்படுதும்  காட்சி, கதை சொல்லும் காட்சி, இறுதியில் தந்தை மகள் உரையாடும் காட்சி என பல கவிதையான காட்சிகள் அமைத்திருக்கிறார் விஜய். இசையும் (பிரகாஷ்), ஒளிப்பதிவும் (நீரவ் ஷா)  இப்படத்திற்கு தேவையான அளவு சிறப்பாக அமைந்திருக்கிறது. படதொகுப்பாளர் இன்னும் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டிருக்கலாம் என்று படுகிறது.

இரண்டாம் பாதி நீளமாக இருப்பது, "விழிகளில் ஒரு வானவில்" பாடல்,  குழந்தைக்கு தேவையான மருந்தை கிருஷ்ணா சரியாக வாங்கி வருவது, போன்ற சில குறைகள் இருந்தாலும். தெய்வத்திருமகள் தமிழில் முக்கியமான ஒரு திரைப்படம். கிருஷ்ணா நிலாவை வளர்க்கும் காட்சிகளில், ஒரு குழந்தையை இப்படிதான் வளர்க்க வேண்டுமோ என்று தோன்றுகிறது. நல்ல படம் மட்டும் தான் பார்ப்பேன் என்று அடம் பண்ணுபவர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரைப்படம்.

Friday, 18 February 2011

அன்புத் தம்பீ!

அன்புத் தம்பீ!
கழகத்திற்காக உழைத்து உழைத்து எறும்பாக தேய்ந்த தேய்ந்து கொண்டிருக்கும் தேய போகும் என் உடன் பிறப்புகளே அவரின் வாரிசுகளே! உடன் பிறப்புகள் என்ற வார்த்தை எழுதும்போது கூட என் பேனா தளுதளுக்கிறது என் கண்கள் பனிக்கின்றன, அதை எல்லாம் துடைத்துக் கொண்டு என் ரத்தத்தால் (ரத்தத்தின் ரதம் அல்ல!) இந்த மடலை வரைகிறேன்.

ஒரு ரூபாய்க்கு மேல் விற்றால அரிசி வாங்கி சாப்பிட இயலாத, இலவச பொங்கல் பொருட்கள் கொடுக்காமல்விட்டால் பொங்கல் வைக்க வக்கில்லாத என் உடன் பிறப்புகளே! அரை நாள் உன்னாவிரதத்திலேயே  ஒரு போரை நிறுத்தி தமிழர்களின் உயிர் மற்றும் மானம் காத்த உங்கள் முதல்வர் இல்லை இல்லை தலைவர் உங்களிடம் இந்த மடல் மூலம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். தேர்தல் நம்மை நோக்கி வருகிறது, என் தம்பிகள் நீங்கள் இருக்கும் வரை எனக்கு எந்த பயமும் இல்லை. நம்மை திட்டிய திட்டும் திட்டபோகும் அணைத்து கட்சிகளையும் இணைத்து பலமான ஒரு கூட்டணி அமைப்பேன் நீங்கள் உங்கள் ரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைத்து உதய சூரியனை துளிர்க்க மன்னிக்கவும் உதிக்க செய்ய வேண்டும்.

திமுக கூட்டனியில் யார் யார் இருக்கிறார்கள் என்று குழப்பம் நில்வுவதாக உளவுத்துறை மூலம்  செய்திகள் வந்தன, கவலைப்படாதீர்கள் அது எனக்கே குழப்பமகாத்தன் இருக்கிறது. என் வாரிசுகள் அனைவரின் கருத்துகளை கேட்ட போது அனைத்து கட்சிகளுடனும் (அதிமுக தவிர) கூட்டணி வாய்ப்பு இருப்பதாக கூறினார் (இன்னும் சில வாரிசுகள் பேச கட்சிகள் இல்லை) ,  இருந்தும் தமிழ் நாட்டிற்கு எது முக்கியம்,  என்ன செய்தால் இந்த நாடு செழிக்கும், என் வாழ் நாளிலே என்னை தவிர ஏழைகள் இல்லாத ஒரு நாட்டை உருவாக்க தேவையான் கூட்டணியை அமைப்போம் என்று மற்றும் உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

இப்போது நம் கூட்டணியில் திமுக இருக்கிறது காங்கிரஸ் இருக்கிறதா இல்லையா என்று அந்த ராசாவுக்கு சாரி ராகுலுக்குத்  தான் தெரியும், தவிர போக இடம் இல்லாத சில கட்சிகள் பொட்டிகள் ச்சே கொள்கைகள் அடிப்படையில்  விரைவில் நம்மிடம் சேரும்.  ஆனால் நம் கூட்டணிக்கு வலு சேர்க்க நமை கரை சேர்க்க பாமாக சாரி பாமக நம் கூட்டணியில் இணைகிறது என்று   வெக்கமோ அசிங்கமோ இன்றி மனதில் மட்டற்ற மகிழ்ச்சியில் தெரிவித்து கொள்கிறேன். பாமாக சாரி பாமக ஒரு நேர்மையான நம்பகமான கட்சி என்று நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை, அவர்கள் நமக்கு கொடுத்த பூஜ்ய மதிப்பெண்ணை நான் மறந்துவிட்டான், நீங்களும் மறந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.   டாஸ்மாக்கின் வருமானம் தான் நமக்கு முதன்மையான வருமானம் என்றாலும் டாஸ்மாக்கின் நேரத்தை ஒரு சில மணித்துளிகள் குறைத்து கொள்வதின் மூலம் பாமகவின் கொள்கைக்கு விரோதமில்லாமல் நடந்து கொண்டு சிறப்பான ஆட்சியை நம்மால் வழங்க முடியும். 


பாமக நம் கூட்டனி சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த பாமக தலைவரின் முகைத்தை பார்த்தாயா தம்பீ  அதற்கு காரணம் நாம் கொடுத்த 31 சட்டமன்ற  தொகுதியா இல்லை 1 ராஜ்ய சபா தொகுதியா  இல்லை வேறேதும் காரணமா  என்று லியோனி தலைமையிலே நாம் ஒரு பட்டி மன்றம் வைக்கலாம், அதில் காடுவெட்டி குரு என்னை புகழ்ந்தது பேசுவது கேட்கே என் மனம் துடிக்கிறது. பாமக எங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே வைத்திருகிறது எதை வேண்டுமானாலும் இலவசமாக கொடுங்கள் அனால் உப்பை மட்டும் கொடுக்காதீர்கள், அடுத்த முறை நாங்கள் எங்கும் ஜெய்க்க முடியாது என்றார், உங்கள் மேல் நம்பிக்கை வைத்து நான் கூறினேன் "உப்புக் கடலிலே சுடப்பட்டு மிதக்கும் உடல்களை பார்த்தே சொரணை வராத இவர்களை பார்த்து நாம் எதற்கும் பயப்பட தேவையில்லை  என்றேன்", என்ன கழக கண்மணிகளே உடன் பிறப்புகளே சரிதானே?

இப்படிக்கு
உங்கள் கீழ்படிந்துள்ள
ஏழை முதல்வரோ தலைவரோ

Saturday, 5 February 2011

யுத்தம் செய்

விமர்சனம் என்கிற பெயரில் இப்படத்தின் கதையை நான் கூறப்போவதில்லை,  அடுத்து மூன்று வரிக்குமேல் கதையை பற்றி ஒரு வார்த்தை இல்லை ஆக தாரளமாக நீங்கள் இதை படிக்கலாம்.

நகரத்தில் திடீரென்று ஒரு பெட்டியில் வெட்டப்பட்ட கைகள் மக்கள் அதிகம் இருக்கும் சில இடங்களில்  வைக்கப்படுகிறது. இதன் பின்னணியை விசாரிக்கும் பொறுப்பு CB CID அதிகாரி சேரனிடம் கொடுக்கப்படுகிறது, அந்த விசாரணை எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது என்பதே யுத்தம் செய்.


இப்படம் ஒரு அக்மார்க் த்ரில்லர், படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் நாம் கதையோடு ஒன்றி, சேரனின் குழுவில் நான்காவது ஆளாக இணைந்து கொள்கிறோம் (நான் கொண்டேன்).  படத்திற்கு சிறப்பான  பின்னனி இசை அமைத்து 'கே'வும், மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்து  சத்யனும் பலம் சேர்க்கின்றனர். நடிகர்கள் அனைவரும் அளவான நடிப்பை கொடுத்திருகின்றனர்.
 
திரைப்படம் என்னும் ஊடகத்தை தொடர்ந்து சிறப்பாக பயன்படுத்திவருகிறார் மிஷ்கின். காட்சிகளுக்கு முக்கியத்துவம், அளவான வசனம், தேவையில்லாத  காட்சிகள் தவிர்ப்பு என்று  எடுத்துக்கொண்ட கதைக்கு மிஷ்கின் சீரான சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார். உங்களின் அடுத்த படத்திற்கு காத்திருக்கிறேன் மிஷ்கின்.
 
படத்தில் சில குறைகளும் உண்டு, மிஷ்கின் பாணி சண்டை காட்சி, மஞ்சள் சீலை பாடல், சில இடங்களில் மெதுவாக செல்லும் திரைக்கதை மற்றும் கொஞ்சம் சினிமா தனமான கிளைமாக்ஸ் ஆகியவை. இதை தவிர்த்து பார்த்தால், யுத்தம் செய் இதுவரை தமிழ் சினிமாவில் நாம் பார்த்திடாத த்ரில்லர், எந்தக் கதையையும், கதையை விவரிக்கும் விமர்சனத்தையும் படிக்காமல், படத்திற்கு செல்லுங்கள், you are in for some surprises.

குறிப்பு: இப்படத்திற்கு குழந்தைகளையோ சிறுவர்களையோ அழைத்து செல்லாதீர்கள்!.


Saturday, 22 January 2011

ஆடுகளம்

பொல்லாதவன் கூட்டணியின் அடுத்த படைப்பு ஆடுகளம். காணும் பொங்கலன்று நான் கண்ட திரைப்படம்.

மதுரையில் சேவல் சண்டையில் பெரிய ஆள் பேட்டைக்காரன். அவரை சேவல் சண்டையில் தோற்கடிப்பதே லட்சியமாக கொண்டிருப்பவர்  ரத்தினவேல். காவல் ஆய்வாளரான ரத்தினவேலிடம் மோதுவது தன்னுடன் இருப்பவர்களுக்கு நல்லதல்ல என்று சேவல் சண்டையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்  பேட்டைக்காரன். அவரை மீண்டும் சண்டைக்கு  இழுக்கிறார் ரத்தினவேல். ஒரு சூழ்நிலையில்  ரத்தினவேலுடன் கடைசி முறையாக "உசுருக்கு சமானம் தான் போட்டி " என்று சவால் விட்டு சேவல் சண்டையில் மோத தயாராகிறார்   பேட்டை. கருப்பு(தனுஷ்) மற்றும் துரையின்(கிஷோர்) உதவியுடன் பேட்டைக்காரன் எப்படி வெல்கிறார் என்பது முதல் பாதி.



இந்த வெற்றியில் பேட்டைக்காரன் தேறாது என்று சொன்ன சேவலை வைத்து கருப்பு ஒரு பெரிய பரிசு ஜெயித்து விட திடீர் பிரபலமாகிறார். அதன் தொடரச்சியாக நடக்கும் சம்பவங்களால் தனது மரியாதை பாதிக்கப்படுவதாக உணர்கிறார் பேட்டை, இதனால் பேட்டைக்கு ஏற்படும் வெறுப்பும், அதன் விளைவுகளும் இரண்டாவது பாதி.

சேவல் சண்டையைப் பற்றி படம் ஆரம்பிக்கும் போதே நம்மை உள்ளிழுத்து விடுகிறார் வெற்றிமாறன். யாரும் தொடாத களத்தை தொட்டு சீரிய திரைகதையில் படத்தை நகர்த்தி சென்ற வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்.    இந்நேரம் 'நிதி' குடும்பத்தினர் யாராவது  இவரை அடுத்த படத்திற்கு புக் செய்திருப்பார்கள். படத்தின் பெரிய பலம் வேல்ராஜின் ஒளிப்பதிவும், ஜீ வியின் பின்னணி இசையும். சேவல் சண்டையை கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டியிருப்பது போல் தோன்றினாலும் அந்த கிராபிக் காட்சிகள் நன்றாகவே இருந்தன.

தனுஷின் நடிப்பு அபாரம், அந்த உடல் மொழியும், நக்கல் கலந்த மதுரை தமிழ் பேச்சும் என அவர் ராஜ்ஜியம் தான். பேட்டைக்காரன் பின்னால் சுற்றுவதும்,  காதலியிடம் மருகுவதும், அம்மாவுடன் சேவலுக்காக சண்டையிடுவதும், துரையிடம் "அண்ணே" என்று அன்பைப் பொழிவதும் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.  பல பொழுதுபோக்கு படம் நடித்து வந்தாலும் நடுநடுவே இந்த மாதிரி கதைக்கும் நடிப்பிற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தனுஷ் தேர்ந்தெடுத்து நடிப்பது ஆரோக்கியமான விஷையம்.

பேட்டைக்காரனாக கவிஞர் ஜெயபாலன் மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சந்தோசம், கோபம், வெறுப்பு என  பல்வேறு உணர்வுகளை அவர் உடல் மொழியில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார், அவருக்கு மிக சிறப்பாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் ராதாரவி. கிஷோர் இயல்பாக சிறப்பாக நடித்திருக்கிறார்.  இவருக்கு ஹீரோவிடம் அடிவாங்கும் வில்லன் பாத்திரம் மட்டுமின்றி   இந்தமாதிரி பாத்திரங்களும் தொடர்ந்து கிடைத்தால் நன்று. பேட்டையின் இளம் மனைவி, கருப்பின் நண்பன், சேவல் சண்டையை நடத்துபவர் என ஒவ்வொரு பாத்திரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

மெதுவாக செல்லும் சில காட்சிகள்,  தமிழ்ப்பட சம்பரதாயமாக கடைசியில் நாயகனுடன் சேர்ந்துகொள்ளும் நாயகி , போன்ற சிறு குறைகள் இருந்தாலும் கதை களம், சிறப்பான  இயக்கம்  மற்றும் நடிப்பிற்காகவும்  கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம் ஆடுகளம்.

Monday, 17 January 2011

34வது சென்னை புத்தகக்காட்சி

இந்த வருட புத்தக காட்சிக்கு நேற்றுத்தான் செல்ல முடிந்தது. நான் புத்தகம் படிப்பதற்கே திட்டும் என் மனைவியையும் அழைத்துச் சென்றிருந்தேன். புத்தகங்களைப் பார்த்து இவ்வளோ புத்தகங்களா! என்று  ஆச்சர்யப்பட்டாள். புத்தகங்களைப் பார்பதற்கே மகிழ்வாக இருக்கிறது. சில பதிப்பகங்களை தவிர  பெரும்பாலான கடைகளில் கூட்டமாகவே இருந்தது.


இந்த முறை எப்படியும் எழுத்தாளர்களையும் பதிவர்களையும் பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்தேன், கிடைத்தது. அன்னம் பதிப்பகத்தில் திரு  மற்றும் திருமதி கி.ரா  அமர்ந்திருந்தார்கள் , இதுவரை அவருடைய புத்தகங்கள் படித்ததில்லை என்றாலும் அவரிடம் கையெழுத்திற்காக அவரின்   புத்தகம் ஒன்று வாங்கி கையெழுத்து வாங்கி வந்தேன், கனிவாக பேசினார் கி ரா, அவருடன் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன்.  முதல் சுற்றில் உயிர்மையில் பிரபலங்கள் யாரும் இல்லை. கிளம்புவதற்கு முன் உயிர்மையில் எஸ்.ரா  இருப்பார் (உயிர்மையில் மாலை 4:30 மணிக்கு மேல் இருப்பேன் என்று அவருடைய வலைத்தளத்தில் கூறியிருந்தார்) என்று சென்றேன், எஸ். ரா இல்லை ஆனால் மனுஷ்யபுத்திரனும், சாருவும் இருந்தார்கள், அவர்களிடம் பேசவில்லை திரும்பி  வரும்போது பதிவர் எழுத்தாளர் நர்சிம் (ரொம்ப ஸ்மார்டாக) நின்றிருந்தார், அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு சில வார்த்தைகள் பேசிவிட்டு வந்தேன்.

கி.ராவுடன்
மாலை 6:00 மணிக்கு ஏற்பாடு செய்யப்படிருந்த உரை அரங்கத்தில்  பாரதி பாஸ்கர், வைத்தியநாதன் ஆகியோர் பேசுவதாக அறிவித்திருந்தனர். நம் பண்பாட்டின் படி 45 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்தது உரை அரங்கம். நூலகர் முத்துசாமி அவர்கள் நூலகர்களின் முக்கியத்துவம் பற்றி பேசினார். அடுத்து பாரதி பாஸ்கர் "இத்தரை மீதினிலே தமிழ் எத்துனை உயர்ந்ததம்மா" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.

இந்த முறை அதிக புத்தகங்கள் வாங்க எண்ணம் இல்லை. ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்க மட்டுமே எண்ணியிருந்தேன்.அதற்கு காரணம் போன மாதம் இதற்கு முன் வேலை செய்த அலுவலகத்தின் கடைசி நாளன்று நினைவுப் பரிசாக ஆறு புத்தகங்கள் கொடுத்திருந்தனர், மேலும் அதற்கு முன் வாங்கிய சில புத்தகங்கள் இன்னும் உறை பிரிக்கப்படாமல் இருகின்றன. அப்புத்தகங்களை கிழித்து (உறையை)    படித்து விட்டு மேலும் புத்தகங்கள் வாங்கலாம் என்றிருக்கிறேன்.

தினத் தந்தியின் "வரலாற்றுச் சுவடுகள்" 864 பக்கங்கள் ஆர்ட் காகிதத்தில் வண்ண எழுத்து, படங்களுடன்  270 ரூபாய்க்கு விற்றனர், டீ கடையில் பஜ்ஜி விற்பதுபோல்  சுடச் சுட விற்றுக் கொண்டிருந்தது. இப்புத்தகம் வெளிவந்து நான்கு மாதத்தில் இரண்டாவது பதிப்பு கண்டிருக்கிறது, amazing.  சந்தேகமில்லாமல் இந்த வருடம் அதிக விற்பனையான புத்தகம் இதுவாகத்தான் இருக்கும். இப்புத்தகத்தை பற்றி எனக்கு ஒரே குறை இவ்வளோ பெரிய புத்தகத்தை பயணத்தின் போது எடுத்து சென்று படிக்க முடியாது, கீதை மாதிரி வீட்டிலேயே படிக்க வேண்டும். மூன்று நான்கு வால்யுமுகளாக போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும், மற்ற படி அருமையான புத்தகம்.

நான் வாங்கிய புத்தகங்கள்:
என் இனிய இயந்திரா - சுஜாதா (வாத்தியார் புத்தகம் இல்லாமலா?)
கிராமியக் கதைகள் - கி. ரா
வரலாற்றுச் சுவடுகள் - தினத் தந்தி
காந்திய நெறியில் நம் வாழ்க்கை (VCD) - நெல்லை கண்ணன் உரை .
வெரைட்டி ரைஸ் வகைகள் - கீதா பாலகிருஷ்ணன் (ஹி... ஹி... இது வீட்டம்மாவுக்கு)

Wednesday, 1 December 2010

நந்தலாலா - திரைப்பார்வை


இளையராஜாவின் இசையில் மிஷ்கின் இயக்கி நடித்திருக்கும் படம் நந்தலாலா. ஜப்பானிய படமான கிகுஜிரோவின்  தழுவல் இந்தப்படமா? என்பதை கடைசியில் பார்ப்போம், முதலில் நந்தலாலாவை பற்றி.

அகி, பாட்டியிடம் வளரும் சிறுவன், ஒரு நாள் தன்னை பிரிந்து தனக்காக அன்னவயல் என்னும் ஊரில் வேலை செய்யும் தாயைத்   தேடி  கிளம்புகிறேன். பாஸ்கர்மணி, தன்னை மனநல காப்பகத்தில் சேர்த்ததற்காக தன் தாயை பார்த்து ஒரு அரை விடவேண்டும் என்று காப்பகத்தில் இருந்து தப்பித்து தாய்வாசல் என்னும் ஊரில்  இருக்கும்  தன் தாயை தேடி கிளம்புகிறான். புத்திசாலியான சிறுவன் அகியும், குழந்தை மனமுள்ள  பாஸ்கர்மணியும் ஒரு புள்ளியில் இணைந்து ஒருவருக்கொருவர் துணையாக தங்கள் தாயை தேடி செல்கின்றனர், இவர்களின் தேடலே நந்தலாலா.


தங்கள் தாயைத் தேட, கூடுமான பணமில்லாமல் பயணத்தை துவக்கும் இருவரும், வழியில் சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும், அதன் வழியே வழியும் மனிதமும் தான் திரைக்கதை. முதல் பாதியில் அகியின் அம்மாவை தேடுவதில் செல்கிறது, ஊரை அடைந்து தேடும் போது, அகி அவன் தாயை பார்க்க முடியாத நிலையில் முதல் பாதி முடிகிறது.
வழியில் சந்திக்கும் பாலியல் தொழிலாளி ஸிநிக்தாவும் அவர்களுடன் சேர்ந்துகொள்ள பாஸ்கர்மணியின் அம்மாவைத் தேடி இரண்டாவது பாதி பயணிக்கிறது. அவர்கள் அவன் அம்மாவை எந்த நிலையில் சந்திக்கிறார்கள், அகியின் நிலைமை என்ன என்பது முடிவு.

பயணத்தில் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களின் வழியாக நகர்கிறது திரைக்கதை. பெரும்பாலான பாத்திரங்கள் படம் முடிந்தும்  நம் மனதில் நிற்கிறார்கள். லாரி ஓட்டுனர், கீழே விழுந்து அடிபடும் பள்ளிச்  சிறுமி, புதுமண தம்பதி குறிப்பாக அந்த கணவன் ("அம்மா 40ல தான் போக சொல்லியிருக்காங்க"), யாருமற்ற ஒரு இடத்தில் பஞ்சர் கடை வைத்து நடத்தும் மாற்றுத்திறன் படைத்த தம்பதி, ஒரு கால் ஊனமான வழிகாட்டி, பைக் குண்டர்கள், இளநீர் விற்கும் தாத்தா, road side ரோமியோக்கள்   என அவர்கள் பயணம் முழுவதும் பல்வேறு மனிதர்கள், சம்பவங்கள். ஒவ்வொரு பாத்திரங்களுடனான   சந்திப்பும் கசப்பாக ஆரம்பித்தாலும் அச்சந்திப்பு முடியும் போது அவர்களின் அடிமனதில் இருக்கும் அன்பே பிரதானமாக மிளிர்கிறது. பல காட்சிகள்  மென்புன்னகையுடனோ  மென்சோகத்துடனோ  முடிகிறது.



Nandalala is a perfect road movie ever made in Tamil Cinema or may be Indian cinema. படத்தின் நான்கு நாயகர்கள் மிஷ்கின், அஸ்வத் ராம், இளையராஜா மற்றும் மகேஷ் முத்துசுவாமி. இவர்கள் அனைவரின் உழைப்பும் சரி விகிதத்தில் கலந்ததால் இப்படம் வேறொரு தளத்தில் இருக்கிறது. சில இடங்களில் மிஷ்கின் மிகையாக நடித்திருந்தாலும் முதல் படத்திலேயே நடிப்பில் அசத்தியிருக்கிறார். அகியாக அஸ்வத் (அள்ளி முத்தம் கொடுக்கலாம்), அழகான  அளவான நடிப்பில் சிறக்கிறார்.  படம் முழுவதும் படர்ந்து நம்மை தழுவி செல்கிறது ராஜாவின் இசை. குறிப்பாக கடைசி 20 நிமிடம் ராஜா தான் ஹீரோ.  மௌனம் என்னும் இசையை  இளையராஜாவைப் போல் யாரும் இவ்வளவு நேர்த்தியாக பயன்படுத்தியதில்லை. பின்னணி இசைக்கு பாடம். இந்த பயணத்தில் ஒளிப்பதிவால் நம்மையும் ஒரு பயணியாக இணைத்துக்கொள்கிறார் மகேஷ் முத்துசுவாமி. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அழகாக படம் பிடித்திருக்கிறார், சில இடங்களில் காட்சி முடிந்தும் extendஆகும் சில shotகளை மட்டும் தவிர்த்திருக்கலாம். 12 நொடிகள் வரும் நாசர் உட்பட அனைத்து கலைஞர்களும் அப்பாத்திரமாகவே வாழ்ந்திருகின்றனர். மேலும் ஓவியர் மருது இப்படத்தில் அழகியல் இயக்குனராக பணியாற்றியிருக்கிறார்.


அஞ்சாதேவுக்கு பிறகு மிஷ்கின் ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருகிறார், இயக்குனர்  மிஷ்கினை விட  திரைக்கதை ஆசிரியர் மிஷ்கின் என்னை பெரிதும் கவர்ந்திருக்கிறார். எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் ஒரு அழுத்தமான படத்தை ஆங்காங்கே நகைச்சுவை தூவி திரைக்கதை அமைத்து கொடுத்திருகிறார், நகைச்சுவை மட்டும் இல்லையேல் திரைக்கதை தொய்வாக இருந்திருக்கும். படத்தில் வசனங்கள் குறைவாக அழகாக பயன்படுத்தப்படிருக்கிறது. தமிழின் ஒரு முக்கியமான படத்தை இயக்கியிருக்கிறார் மிஷ்கின். இதுவரை பார்த்திடாத ஒரு தமிழ் படம் நந்தலாலா.


கிகுஜிரோவும் நந்தலாலாவும்
மிஷ்கின் இரு பேட்டிகளில் (Behindwoods.com)  நந்தலாலா கிகுஜிரோவின் தழுவலா  என்ற கேள்விக்கு The inspiration for the movie came from many incidents in my life and another movie என்றும் In a way his Kikujiro stimulated me to take Nandalala but Nandalala is not Kikujiro என்றும்  கூறியிருக்கிறார். ஆகவே ஒருபொழுதும் கிகுஜிரோவிற்கும் நந்தலாலாவிற்கும் சம்பந்தமே இல்லை என்று மிஷ்கின் கூறியதாக தெரியவில்லை.


முதலில் ஒற்றுமை, கிகுஜிரோவின் one lineற்கும்  நந்தலாலாவின் one lineற்கும் அதிக வித்தியாசமில்லை. தன் தாயை தேடி புறப்படும் சிறுவன் மாசோவுக்கு   துணையாக ஒரு முரட்டு, சூதாடும் ஆசாமி கிகுஜிரோ அனுப்பப்படுகிறார், அவர் சிறுவனை அம்மாவிடம் சேர்த்தாரா என்பதே  கிகுஜிரோ. கிகுஜிரோவில் உள்ள சில கதாப்பாத்திரங்கள் மற்றும் காட்சிகள் நந்தலாலாவிலும் உண்டு.

இனி வேற்றுமை,
ஜப்பானிய படம் சிறுவன் மசோவை விட கிகுஜிரோவை பெரிதும் முன்னிறுத்தியே நகர்கிறது, ஜப்பானிய படம் முன்னிறுத்தும் கருத்து ஜப்பானில் குறைந்து வரும் குடும்ப சூழலை பற்றியது.

நந்தலாலா பேசுவது மகன் தாய் உறவை மற்றும்  அம்மாக்களின் இருவேறு எல்லைகளை பற்றியது.  கிகுஜிரோவில் உள்ள சில கதாப்பாத்திரங்கள் நந்தலாலாவிலும் உண்டு என்றாலும் அதன் பயன்படுத்தப்பட்ட விதம் முற்றிலும் வேறானது.  நந்தலாலாவில் அவர்கள் சந்திக்கும் அனைத்து பாத்திரங்களும் அப்பாத்திரங்களின் நெகிழ்வான தருணங்களை வெளிக்கொண்டுவருகிறது, கிகுஜிரோவில்  நடக்கும் சம்பவங்கள் விலகியிருக்கும் மாசோவையும் கிகுஜிரோவையும் எப்படி இணைக்கிறது என்று செல்கிறது.

மிஷ்கின் செய்ய தவறியது பட ஆரம்பத்தில் ஒரு நன்றி போடாமல் விட்டது, போட்டிருந்தால் இவ்வளவு சர்ச்சைகள் உருவாகியிருக்காது.  இதை மறைக்கவும்  மிஷ்கின் முயற்சிக்கவில்லை, நினைத்திருந்தால் கிகுஜிரோவில் இருந்து எடுக்கபட்ட பாத்திரங்களை மாற்றி அமைத்திருக்கலாம், அப்படி செய்யவில்லை மாறாக அப்பாத்திரங்களின் மீதே அவருடைய கதையையும் எழுதி செல்கிறார். இது தவறென்று புத்தி சொல்கிறது, பரவாயில்லை என்று மனது சொல்கிறது.  இந்த காரணத்திற்காக நந்தலாலா ஒரு குறைபட்ட படைப்பு என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

உலக சினிமா ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது ஒரு பெரிய குறையாக இருக்கலாம், என்னைப் போல்  உள்ளூர் ரசிகர்களுக்கு இப்படம் உயரந்ததே காரணம் கிகுஜிரோ தராது ஒரு உணர்வை நந்தலாலா எனக்கு கொடுத்திருக்கிறது.

Monday, 22 November 2010

சுஜாதாவின் கடவுள்களின் பள்ளத்தாக்கு - ஒரு பார்வை

கடவுள்களின் பள்ளத்தாக்கு என்ற தலைப்பை பார்த்தவுடன் கடவுள் என்ற சித்தாந்தம் குறித்த கட்டுரைகளோ என்று நினைத்தேன். உள்ளடக்கத்தை பார்த்தவுடன் தான் தெரிந்தது இது சுஜாதா பல தருணங்களில், பல இதழ்களில் எழுதிய (ஒன்றோ ரெண்டோ மேடைகளில் பேசியது) கட்டுரைகளின் தொகுப்பே தவிர கடவுள் பற்றி ஒரு கட்டுரையும் இல்லை. இக்கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்தவர் சுஜாதாவின் நண்பரான தேசிகன். கட்டுரைகளை பயணம், இலக்கியம், சினிமா, அரசியல் மற்றும் பொது என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

இத்தொகுப்பில் என்னை கவர்ந்த சில கட்டுரைகள் பற்றி கீழே.

கடவுள்களின் பள்ளத்தாக்கு கட்டுரை திபெத் எல்லையில் உள்ள பத்ரி நாராயணன் கோவிலுக்கு அவர் மேற்கொண்ட பயணம் பற்றியது.  இக்கோவில் 8ஆம் நூற்றாண்டில் பௌத்த ஆதிக்கத்தில் இருந்தது, பிறகு ஆதிசங்கரரால் வைணவத் தலமாக மாற்றப்பட்டது, திருமங்கையாழ்வார் இங்கு (தேவப்ரயாகை, ஜோஷிமட், பத்ரி) வந்து பாடியது, கேரள நம்பூதிரிகள் தான் இங்கு அர்ச்சகர்களாக இருப்பது  என  கோவில் பற்றி பல தகவல்களை கொடுத்திருக்கிறார்.

நகைச்சுவை பற்றி ஒரு சீரியஸான கட்டுரையில் நகைச்சுவையை இப்படி விவரிக்கிறார் "ஒரு கருத்தை மற்றொரு கருத்தோடு முரண்பட வைத்து அதன் மூலம் எதிரபாராத ஒரு சந்தோஷத்தை, பரவசத்தை கொடுப்பது, முடிந்தால் நம் சிந்தனைத் திறனையும் உயர்த்துவது." நகைச்சுவைகளின் வகைகளை பற்றி இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறார்.

தமிழ்த் திரைப்படங்கள் ஆஸ்கார் வாங்க முடியாத  காரணங்களையும், ஆஸ்கார் வாங்க செய்யவேண்டியவைகளை பற்றியும் தமிழ் படம் ஆஸ்கார் வாங்க முடியுமா? என்ற கட்டுரையில் விவாதிக்கிறார். கட்டுரையின் முடிவில் ஆஸ்கார் வாங்க பத்து கட்டளைகளை பட்டியலிட்டிருக்கிறார்.அவற்றலிருந்து சில கீழே

1. கமர்சியல் தேவைகளிலிருந்து விடுபட வேண்டும். "இத்தனை செலவாகும் கமர்சியலாக ஓடுமா ஓடாதா?" என்ற சங்கதியெல்லாம் வேண்டாம். இப்படி ஒரு தயாரிப்பாளர் வேண்டும்.

2. இயக்குனர்கள் கதை பண்ணாமல், தமிழ் இலக்கியத்தின் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து படம் பண்ண வேண்டும்.

3. கதைக்கேற்ப, பாத்திரங்களைத் தேர்ந்தெடுக்க Casting Director வேண்டும்.

4. டை கட்டிய இளைஞர்களிடம் கொடுத்து, டில்லியிலும் ஹாலிவுட்டிலும் கூவி விற்கவேண்டும்.


வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு என்ற தலைப்பில், வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாக பிரிக்கிறார், வெளிநாட்டு பொருட்களின்மேல் மோகம், வெளிநாட்டுப் பழக்க வழக்கங்களின்மேல் மோகம் மற்றும் வெளிநாடு சென்றே ஆக வேண்டும் என்கிற மோகம். இவற்றை பற்றி விரிவாக விவாதிக்கிறார்.  வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை இது.

இவை தவிர ஹே ராம், பாய்ஸ் திரைப்படங்கள் பற்றி, குவைத் மற்றும் மலேசிய நாடுகள் பற்றி, காவிரி பிரச்சனை, முஷ்ரப் இந்திய வருகை, பில்கேட்ஸ் பற்றி எழுதிய கட்டுரைகள் சிறப்பாக இருந்தன. சுஜாதாவின் எழுத்தில் எதைப் படித்தாலும் சுவாரஸ்யமாகவே இருக்கும், அது போலவே இந்த கட்டுரைகளும், பயணத்தின் போது படிப்பதற்கு ஏதுவான புத்தகம்.

Sunday, 3 October 2010

எந்திரன் - திரைப்பார்வை


சிறுகதைகள் எழுதும் போது முதல் வரியிலேயே கதையை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் சுஜாதா, அப்படித் தான், முதல் 2 நிமிடத்திலையே  எந்திரன் ஒரு அறிவியல் புனைவு (sci-fi) என்றும் மற்றும் இது வழக்கமான ரஜினி படம் இல்லை இயக்குனர் ஷங்கர் படம் என்பதையும் உணர்த்திவிடுகிறது. மிக எளிதான கதை, ஒரு விஞ்ஞானி (வசீகரன்) தன்னை போல் ஒரு எந்திரனை (android robot)  உருவாக்குகிறார், சில காரணங்களால் அதற்கு உணர்வுகளையும் கொடுக்கிறார் அதனால் ஏற்ப்படும் விளைவுகளே எந்திரன் கதை. வழக்கமான ஷங்கரின் "இப்படி நடந்தால் என்னவாகும்?" என்கிற வகை கதைதான், அதை திரையில் காட்சிப்படுத்திய விதம் தான் படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்கிறது.

திரைக்கதை தெளிவாக பிரிக்கப்பட்டிருக்கிறது, மனிதனை போல் ஒரு எந்திரம்  (சிட்டி)  உறுவாக்கப்பட்டு, மனிதர்களுடன் பழகுவதால்,  ஏற்படும் நிகழ்வுகள், விளைவுகள் முதல் பாதி. அறிவியல் படம் என்பதால் கணிப்பொறி சார்ந்த வார்த்தைகள் மற்றும் பல புரியாத விஷையங்கள் இருக்கும் என்று நினைக்க தோன்றும், ஆனால் பார்க்கிறவர்கள் யாவருக்கும் புரியும் வண்ணம் மிக எளிதான காட்சிகளை அடுக்கி வைத்திருகிறார்கள். உதாரணமாக தீ விபத்து காட்சியில் எந்திரத்தால் என்ன முடியும், என்ன முடியாது என்று விளக்கியிருப்பது அருமை.

அந்த இயந்திரத்திற்கு உணர்வுகள் கொடுக்கப்பட்டு, தானாக சிந்திக்க ஆரம்பித்தால் ஏற்படும் விளைவுகள் இரண்டாம் பாதி. ஐஸை சிட்டி காதலிக்க ஆரம்பித்ததும் சிட்டிக்கும் வசிக்கும் இடையில் ஈகோ பிரச்சனை உருவாகிறது, இதை வசீகரனுடைய குரு சுயநலத்திற்கு எப்படி பயன்படுத்த பார்க்கிறார், இதனால் ஏற்படும்  விளைவும் முடிவும் இரண்டாம் பாதி. இரண்டாம் பாதி முதல் பாதியை போல் சரளமாக இல்லை, சில இடங்களில் மெதுவாக இருக்கிறது குறிப்பாக "ரங்குஸ்கி" காட்சியும், 'கிளிமஞ்சாரோ" பாடலுக்கான லீடும் கொஞ்சம் இழுவை (அடுத்த வாரங்களில் இக்காட்சிகள் குறைக்கவோ நீக்கவோ படலாம் என்று எதிர்பார்க்கிறேன்).


இப்படத்தின் பலம் ரஜினி மற்றும் இப்படத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்ப சங்கதிகள்,  தொழில்நுட்பத்தில் எந்திரன் ஒரு ஹை ஜம்ப் அடித்திருக்கிறான். இப்படத்தில் பெரும்பாலான காட்சிகளில் இரண்டு ரஜினி தோன்றினாலும், அந்த காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கபட்டிருகின்றன, அதே போல் இந்திய பாடங்களில் இதுவரை கண்டிராத தலை சுற்றும்  க்ராபிக்ஸ் காட்சிகளை நீங்களே திரையில் கண்டு கொள்ளுங்கள். காட்சிகளையும், ரஜினியையும் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரத்தினவேலு, குறிப்பாக 'காதல் அணுக்கள்', 'கிளிமஞ்சாரோ' பாடல் படமாக்கப்பட்ட இடம் மற்றும் 'அரிமா அரிமா' படமாக்கப்பட்ட விதம் என அனைத்தும் அருமை.  அவருடைய உழைப்பிற்கு ஒரு ஸ்பெஷல் பொக்கே.

கலை இயக்குனர் சாபு சிரிலின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் ரோபோ ஆராய்ச்சி கூடம் முதல், ரஜினி வீடு வரை பளிச்சென பிரமாண்டாமாக  இருக்கின்றன, ஐஸ் தங்கியிருக்கும் வீடு cum ஆதரவற்றோர்  இல்லமும் பிரமாண்டாமாக இருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. ஆண்டனியின் படக்கோர்வையும் அருமை, மேலே குறிப்பிட்ட காட்சிகளை மட்டும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். படத்தின் மற்றொரு பெரிய பலம் அமரர் சுஜாதாவின் வசனங்கள், அனைத்து வசனங்களும் யாருக்கும் புரியும் வண்ணம் short and sweetஆக இருந்தன.படத்தின் பல இடங்களில் சுஜாதா தெரிகிறார் உதாரணமாக கடவுள் இருக்கிறாரா? என்ற கேளிவிக்கு சிட்டியின் பதில், வி மிஸ் யு வாத்தியாரே. ரஹ்மானின் இசையில் பாடல்கள் அருமை, பின்னணி இசை இறுதி காட்சிகளில் இன்னும் கொஞ்சம்  சிறப்பாக இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

 படம் முழுவதும் எங்கு பார்த்தாலும் ரஜினி தான்.
விஞ்ஞானி ரஜினி -  Intro song, punch டயலாக், style gimmick என்று எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாத ரஜினி, நான் ரொம்ப நாளாக பார்க்க துடித்த ரஜினி அருமையாக நடித்திருக்கிறார்.

ரோபோ ரஜினி - சுறு சுறுப்பான, ஒயிலான, அழகான ரஜினி. இந்த பாத்திரத்திற்கு அவருடைய உழைப்பு அபாரம். இந்த ரோபோ ரஜினி இரண்டாம் பாதியில்  வேறொரு அவதாரம் எடுக்கும் போது, அவருடைய நடிப்பு class + mass. சங்கர் எழுதியதை திரையில் கொண்டு வர ரஜினியின் (60 வயதில்) உழைப்பும் முயற்சியும் ஆச்சர்யம் அளிக்கிறது.  யாராவது ரஜினியை வச்சு நெற்றிக்கண் மாதிரி ஒரு படம் எடுங்கப்பா!

ஐஸ் - அழகாக  வருகிறார், ஆடுகிறார், அழகாக இருப்பதுதான் அவருடைய பாத்திரம், அதை  சிறப்பாக செய்திருக்கிறார்.

கருணாஸ், சந்தானத்தின் பாத்திரங்களை இன்னும் கொஞ்சம் சிறப்பாக பயன் படுத்தியிருக்கலாம்.

மேல குறிப்பிட்ட அனைவரையும் வழி நடத்தி தான் நினைத்ததை திரையில் கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர். ரோபோ படம் என்றதும் எந்த காட்சி எந்தப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டிருகிறது என்று குத்தி கிழிக்க ஒரு கூட்டமே காத்திருந்தது, அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமும் தராத சங்கர் அவர்களுக்கு ஒரு  மெகா சைஸ் பூங்கொத்து, ஷங்கர் ஒரு master director என்றும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஷங்கரின் உழைப்பிற்கு கண்டிப்பாக பெரிய பலனும் புகழும் கிடைக்கும்.   இப்படத்தின் உயரத்தை தாண்டும்  அல்லது தொடும்  அடுத்த படம் எப்போது வருமென்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

இப்படத்தை பல வழிகளில் விளம்பர 'படுத்தியும்', நாளுக்கொரு விழா நடத்தி வந்தாலும், இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸுக்கு வாழ்த்துகள்.


படத்தின் நீளம், சில லாஜிக் மீறிய காட்சிகள்  என சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன, இருந்தாலும் எந்திரன் தமிழ் சினிமாவில் உருவான மிக சிறந்த பொழுதுபோக்கு படம், தமிழ் சினிமாவின் இல்லை இந்திய சினிமாவின் சாத்தியங்களையும் எல்லையையும் உயர்த்தி வைத்திருக்கிறான் எந்திரன். குடும்பஸ்த்தர்கள் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளை அழைத்து செல்லுங்கள்.

எந்திரன் - தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத ஓர் அனுபவம் - Get ready folks.


Tuesday, 14 September 2010

இந்த வாரம் - 14/09/2010

தமிழக அரசியல்:
அரசியல் பற்றி ரஜினி பரபரப்பு பேட்டி என்று கடந்த வாரம் சில பத்திரிகைகள் கடைகளில் தொங்கிக் கொண்டிருந்தன, "பரபரப்பு பேட்டி" என்றால் அது ஒன்றும் இல்லாத வெத்துப் பேட்டி என்பது நம்மூர் பத்திரிக்கை விதி, அதனால் நான் கண்டுகொள்ளவில்லை. இணையத்தில் தேடிய போது அந்த செய்தி கிடைத்தது. "அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போது இல்லை" என்று 101வது முறையாக  பரபரப்பு பேட்டி கொடுத்திருந்தார். அவர் என்றைக்கும் வரப்போவது இல்லை (வராமல் இருப்பதே நல்லது என்பது என் கருத்து).

விளையாட்டு:
யு எஸ் ஓபன் முடிந்தது, என் கறு நாக்கோ  (கறு எழுத்து?) என்னவோ ஷரப்போவா மறுபடியும் அவுட். நடால் வென்றார்.

போப்பண்ணா ஜோடி இறுதி வரை வந்தது ஆறுதல், சேர்ந்து விளையாடுவது பாகிஸ்தான் நாட்டு ஆட்டக்காராக இருப்பதால் இன்னும் சுவாரசியம்.

சாம்பியன்ஸ் T20  ஆரம்பித்து விட்டது, ஃபிசிங்கா? இல்லையா? என்பது தொடர் முடிந்த பிறகு ஆராய்ச்சி செய்து கொள்ளலாம், அதுவரை டீ.வி முன் பலியாய் கிடக்கலாம், இல்லையேல் அமிதாப் வந்து அடிப்பார்.

கவிதை
இந்த வாரம் நான் படித்த மனுஷ்ய புத்திரன் கவிதை

பாபருக்கு வேண்டும் மசூதி
ராமருக்கு வேண்டும் கோயில்
ஜனங்களுக்கு வேண்டும்
சுகாதாரமான கழிப்பறைகளேனும்

வரும் 24ஆம் தேதி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு சொல்ல போகிறார்கள், எத்தனையோ ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பது போல் இத்தீர்ப்பையும் சொல்லாமல் இருப்பதே மேல்.

கோவில்
கடந்த வாரம் ஒரு நண்பரின் திருமணத்திற்காக கும்பகோணம் சென்றிருந்தோம், கிடைத்த நேரத்தில் சுவாமிமலை சென்றிருந்தோம். முருகனின் அறுபடை வீட்டில் நான் இதுவரை செல்லாத கோவில் அது. இது முருகனின் நான்காவது படைவீடு. கோவில் பெரிதாக அழகாக இருந்தது, வெளியிலிருந்து பார்க்கும் போது மலையெல்லாம் ஏற வேண்டியதில்லை என்று நினைத்தேன், உள்ள சென்ற பிறகு தான் தெரிந்தது நிறைய (60) படி ஏற வேண்டியது இருந்தது. நாங்கள் சென்ற நேரம் முருகனுக்கு அபிஷேகம் ஆரம்பித்திருந்தார்கள், சிறப்பான தரிசனம் கிடைத்தது.

இத்தலத்தின் சிறப்பு:
தந்தை சிவனுக்கு முருகன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை விளக்கி சொன்ன இடம் இது. அதனால் இங்கிருக்கும் முருகனுக்கு சுவாமிநாதன் என்றும் தகப்பன்சாமி என்றும் அழைக்கப்படுகிறார். 

Wednesday, 8 September 2010

அரபு நாடு வழியாக பயணம் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை!

கடந்த ஞாயிறன்று சுஜாதாவின் "கடவுள்களின் பள்ளத்தாக்கு" என்ற கட்டுரை தொகுப்பை வாங்கியிருந்தேன், அதில் நவீன குவைத் என்ற கட்டுரையில் "ப்ளேனில் சொன்னார்கள் சாராயம், பாப்பி (கசகசா) வைத்திருப்பது குற்றம் என்று.  கசகசாவுக்கு ஏன் பயப்படுகிறார்கள் என்று வியந்தேன். குவைத் நண்பர்கள் பின்னர் சொன்னார்கள், விதைத்தால் பாலை வனத்தில் கூட போதைப்பொருள் விளையுமாம்" என்று குறிப்பிட்டிருந்தார்.



இந்தப்பதிவு போடும் இன்று எங்கள் அலுவலகத்தில் ஒரு மின்னஞ்ல் அனுப்பியிருந்தார்கள், அதில்  இம்மின்னஞ்ல் அனுப்பிய நபரின் நண்பர் ஒருவர் துபாய் வழியாக யு கே (UK) செல்லவிருந்திருக்கிறார், அவர் பெட்டியில் கொஞ்சம் கசகசாவும் (சமையலுக்காக என்று நினைக்கிறேன்) இருந்திருக்கிறது. சிறிதளவு சமையலுக்கு உபயோக்கப்படுத்தும்  கசகசாவை வைத்துக்கொண்டு பாலைவனத்தில் கூட  போதைப் பொருட்கள் விளைவிக்க முடியுமாம், அதனால் துபாய் காவல் துறையால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரை விடுவிக்க அவருடைய நண்பர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவருக்காக வாதாடுவதற்கு வக்கீல்கள் ஏகப்பட்ட பணம் (AED 100,000) கேட்கிறார்களாம்.  தம்மாதூண்டு கசகசாவில் எவ்வளவு பெரிய பிரச்சனை, நினைக்கவே பயமாக இருக்கிறது. அவர் விரைவில் விடுதலை ஆகிவிடுவார் என்று நம்புவோம், பிரார்த்திப்போம்.

கசகசா(Poppy Seeds)



நம்ம ஊரில் இந்த மாதிரி ஏதும் மாட்டினால் எப்படியாவது தப்பித்துவிடலாம், ஆனால் பெரும்பான்மையான மற்ற நாடுகளில் அதெல்லாம் ரொம்ப  கஷ்டம், அதுவும் அரபு நாடுகளில் வாய்ப்பே இல்லை. வெளிநாடுகளுக்கு செல்லும் முன், எந்த நாட்டின் வழியாக செல்கிறோம் அங்கு என்ன என்ன எடுத்து செல்லலாம், செல்லக்கூடாது என்று தெரிந்து வைத்து கொள்ளுங்கள், வெளிநாடு செல்லும் உங்கள் நண்பர்களிடமும் இதை தெரிவுயுங்கள். நாம் கவனிக்காத சின்ன விசையங்களெல்லாம் பெரிய பிரச்சனையை உருவாக்குகின்றன, எச்சரிக்கையாக இருப்போம்.

Tuesday, 7 September 2010

இந்த வாரம் - 07/09/2010

கதம்பம் என்ற தலைப்பில் வேறு பதிவர்களும் எழுதிக் கொண்டிருப்பதால், இத்தலைப்பை மாற்ற நினைத்தேன். நல்லதாக ஒரு தலைப்பும் தோன்றவில்லை, அதனால் இப்பகுதிக்கு நான் "இந்த வாரம்" என்ற தலைப்பில் எழுதுகிறேன். வேறு ஏதும் தலைப்பு தோன்றினால் சொல்லுங்கள்.
 
தமிழக அரசியல்:
இந்த வாரம் பெரிய மாற்றம் இல்லை.

பா.ம.க மூன்றாவது கூட்டணிக்கு  தலைமை தாங்க தயார் என்று குறிப்பிட்டிருக்கிறார் ராமதாஸ். அடுத்த வாரம் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

30-40 தொகுதிகளுக்குகெல்லாம் கூட்டணி அமைக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கிறார் விஜயகாந்த். கூட்டணி பேசும் கட்சிகளிடம் அதிகமா தொகுதிகள் வேண்டும்  என்று மறைமுகமாக கேட்கிறாரா?


இந்த வார விளையாட்டு:
பாகிஸ்தான் கிரிக்கெட் ஸ்பாட் ஃபிக்சிங் பிரச்சனையை தோண்டி கொண்டிருகிறார்கள், யாசிர் ஹமீது அளித்த தகவல், ஆஸ்திரேலியா தொடரிலும் ஃபிக்சிங் என  சில பூதங்கள் வந்துகொண்டிருகின்றன. பாகிஸ்தானில் அரசியல் மற்றும் விளையாட்டு எதில் ஊழல் நடந்தாலும் விளையாட்டாகவே எடுத்துகொள்கின்றனர்.

யு எஸ் ஓபன் விறு விருப்பாக நடந்த கொண்டிருக்கிறது. முன்னணி ஆட்டக்காரர்களில் ஆண்களில் முர்ரேவும், பெண்களில் டேமன்டிவாவும் தோற்றுவிட்டனர். இரட்டையர்கள் போட்டியில் நம்மவர்கள் பயசும் மற்றும் பூபதியும் தோற்று வெளியேறிவிட்டனர், போப்பண்ணா ஜோடி 3வது சுற்றுக்கு முன்னேறியிருகின்றனர்.

ஆறு வருடங்களுக்கு முன் 17 வயதில் டென்னிஸ் விளையாட்டில் புயலென நுழைந்தவர் ஷரப்போவா, ஆனால் தொடர்ந்து ஜொலிக்க முடியவில்லை, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த slamமும் ஜெய்க்க வில்லை,  இந்த முறையாவது  ஜெயிப்பாரா?

இந்த வாரத் திரைப்படம்
கடந்த வார இறுதியில் என் மடிக்கணினியில் Salt படம் பார்த்தேன், வெளிவந்து 2 மாதம் ஆகிறது, இப்போதுதான் பார்த்தேன். படம் ம்ம்ம் Ok, ரொம்ப அருமையில்லை என்றாலும் பொழுதுபோக்கிற்கு நல்ல படம். மறுபடி ஒரு அதிரடி கதாப்பாத்திரம்  ஏஞ்சலீனாவுக்கு, இந்த மாதிரி பாத்திரங்கள் (அழகு + அதிரடி) அவருக்கு நன்றாகவே பொருந்துகிறது.



இந்த வாரம் சிதறிய முத்து:
மறுபடியும் கலைஞர்.  குஷ்பு தயாரிப்பில் சுந்தர் நடிக்கும் நகரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் கலைஞர் பேசியதில் ஒரு பகுதி
"இவரை அழைத்தால் அவருடைய கட்சிப் பிரச்சாரம் செய்கிறாரே என்று எண்ணக் கூடாது. கட்சிப் பிரச்சாரம் என்பது சரியல்ல – கட்சி என்பதும் சரியல்ல. கட்சி என்பது ஒரு லட்சியத்திற்காகத் தான் இருக்கிறது. ஒரு கொள்கைக்காகத் தான் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தான் குஷ்பு இந்தக் கட்சியிலே தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இனி இவர்கள் இருவரும் சேர்ந்து இந்த இயக்கத்தின் கொள்கைகளை வளர்க்க வேண்டும், லட்சியங்களை வளர்க்க வேண்டும், இவைகளை வளர்ப்பதற்காக அவர்கள் பாடுபட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்."
இதைப்பற்றி நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

Tuesday, 31 August 2010

கதம்பம்- 31/08/2010

கதம்பம் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் நிகழும் அரசியல் மாற்றம், விளையாட்டு (குறிப்பாக கிரிக்கெட்),  பார்த்த திரைப்படம் ,  படித்த புத்தகம் ஆகியவற்றை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

தமிழக அரசியல்:
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது, கூட்டணிகள் மாறுமா? இல்லை தொடருமா? என பல மர்மங்கள் விலகத் தொடங்குகிறது. இப்போது இருக்கும் நிலையை இப்படி கூறலாம்.

காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் இருக்கவே விரும்புகிறது, ஆனால்  அவர்கள் விரும்பும் தொகுதிகள், மற்றும் ஆட்சியில் பங்கு கிடைக்க கடைசி வரை இளங்கோவன், ப.சிதம்பரம் என்று யாராவது சீண்டிகொண்டே இருப்பார்கள் போல. 


அ.தி.மு.க - இவர்கள் நடத்தும் கூட்டங்களில் கூடும் கூட்டத்தை காட்டி முடிந்தவரை கட்சிகளை இழுக்க முயற்சிக்கிறது.

பா.ம.கதான் இப்போது நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது. "தி.மு.க அழைத்தால் பேச ஒரு குழு அமைக்கப் பட்டிருகிறது", "நாங்கள் இருக்கும்  கூட்டணியில் விஜயகாந்த் இருந்தால் எங்களுக்கு கவலை இல்லை", "காங்கிரஸ் தலைமையில் புது கூட்டணி அமைந்தால் சேருவோம்", "தேவைப்பட்டால் நாங்களே ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்குவோம்"," தனித்து 100 தொகுதிகளில் போட்டியிடுவோம்" என அனைத்து சாத்தியங்கள் குறித்தும் பேசியிருக்கிறார் மருத்துவர். இதெல்லாம் இல்லாமல் ஒரு புது மாதிரியாக முடிவு இருக்குமோ? பார்க்கலாம்.

தே.மு.தி.க முதல் முறையாக  கூட்டணி குறித்து பேச ஆரம்பித்திருகிறது,  புதுக் கூட்டணி ஆரம்பித்தால் கொஞ்சம் தொகுதிகள் வெற்றி பெற்று பெயரையும் காப்பாற்றி கொள்ளலாம், அ.தி.மு.க, தி.மு.க என்று யாருடன் கூட்டணி வைத்தாலும் விஜயகாந்தின் செல்'வாக்கு' குறையும் என்றே தோன்றுகிறது.

இவையனைத்தும் தற்போதைய நிலவரம், கா(க)ட்சிகள் எப்படி மாறுகின்றன என்று போக போக பார்க்கலாம்.

இந்த வார விளையாட்டு:
முத்தரப்பு போட்டியில் இந்தியா ஆடிய விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக பேட்டிங்கில், சச்சின் இடத்தை நிரப்பும் அறிகுறி ஏதும் தெரியவில்லை. ஹர்பஜனுக்கு பிறகு நல்ல சுழற்பந்து வீச்சாளர் என்று யாரும் இல்லை என்பது கூடுதல் வருத்தம்.அஷ்வினையும், திவாரியையும் பெஞ்சிலேயே வைத்திருந்தது ஒரு ஏமாற்றம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு மற்றொரு பள்ளத்தில் விழுந்திருக்கிறது, மறுபடியும் ஃபிக்சிங், இந்த முறை ஸ்பாட் ஃபிக்சிங் (Spot Fixing). PCB கொஞ்ச காலம் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டு இந்த ஃபிக்சிங் சர்ச்சைகளை fix செய்து பிறகு மறுபடியும் ஆட வரலாம் அதுதான் அவர்கள் கிரிக்கெட்டுக்கு செய்யும் பேருதவி, இல்லையேல் அவர்கள் ஆடும்/ஆடிய எந்த ஆட்டத்தையும் சந்தேகத்துடனே பார்க்க தூண்டும், அப்படி செய்வார்களா? பார்க்கலாம். இந்த சர்ச்சையில், முஹம்மத் ஆமீரும் சம்பந்த்தப்பட்டதாக வரும் செய்திகள் வருத்தம் அளிக்கிறது. அதுவும் கடந்த 6 மாதங்களாக என்னம்மா பந்து வீசுகிறார் ஆமீர்.

இந்த வார திரைப்படம்:
கடந்த ஞாயிறு அன்று புதிதாக தொடங்கப்பட்டிருக்கம் Express Avenueவில் உள்ள escapeல் "நான் மகான் அல்ல" நானும் என்  மனைவியும் பார்த்தோம். படம் பிடித்திருந்தது.

நிறைகள்:
கலகல முதல் பாதி, விறு விறு இரண்டாவது பாதி
நல்ல பாத்திர தேர்வு, அவர்களின் நிறைவான நடிப்பு.
திரைக்கதையின் வேகத்தை பாதிக்காத பாடல்கள், சிறந்த பின்னணி இசை.

குறைகள்:
சில மனதை நெருடும் வன்முறை காட்சிகள்
கிளைமாக்சின் நீளம் 

படம் முடிந்த பின்பு, அங்கிருக்கும் food courtக்கு  சென்றோம். இந்த மாதிரி பெரு வணிக இடங்களில் ஸ்மார்ட் கார்டில் முன்பே பணம் போட்டு கொண்டு, அந்த அட்டையை தான் உபயோகித்து எதுவும் வாங்க முடியும் (சில கடைகளை தவிர). இந்த அட்டையை நாம் பணமாக கொடுத்து வாங்கினால் போகும்போது அட்டையை கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளலாம், ஆனால் வங்கி (டெபிட்) அல்லது கடன்(கிரெடிட்) அட்டை உபயோகித்து இந்த அட்டையை வாங்கினால், போகும் போது மீதிப்பணத்தை திருப்பி தரமாட்டார்களாம், அனைத்து பணத்திற்க்கும் சாப்பிட்டே ஆக வேண்டும், எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த வார மென்பொருள்:
கடந்த வாரம் என் அலுவலக நண்பர் மூலம் BS.Player என்று ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தினார். படம் பார்ப்பதற்கான மென்பொருள், இதன் சிறப்பு, படம் இம் மென்பொருளில் ஓட ஆரம்பித்ததும், இணையத்தில் அப்படத்திற்கான subtitleகளை தேடிக் காட்டுகிறது, அதில் நமக்கு தேவையான subtitleகளை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதிக வேற்று மொழி படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு உபயோகமான மென்பொருள்.

சிதறிய முத்துக்கள்:
நேற்று Express Avenueவை திறந்து வைத்து பேசிய முதல்வர் கலைஞர், இவ்வணிக வளாகத்தை கட்டியிருக்கும் கோயங்கா குடும்பத்தினரை (இக்குடும்பத்தை சேர்ந்த ராம்நாத் கோயங்கா  தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிறுவுனர்)  பற்றி இப்படி குறிபிடுகிறார் "வசதியும் வாய்ப்பும் இருந்தாலுங்கூட, இதைச் செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடாது. பொது நல நோக்கிலே யாருக்கு கவனம் இருக்கிறதோ, யாருக்கு பொது நலச் சிந்தனை இருக்கிறதோ அவர்களால் தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும்."
ஏதோ இவர்கள் தொண்டு இல்லம் ஆரம்பித்த மாதிரி பேசியிருக்கிறார் முதலவர், ஆண்டவா.

Saturday, 28 August 2010

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் - 1 ஓர் எளிய முறை - பெ.முத்துசாமி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கணக்கு அதிகாரிய இருந்து ஓய்வு பெற்று, தற்போது பவானி லட்சமி நகரில் வசித்து வரும் திரு பெ.முத்துசாமி அவர்கள் எழுதிய நூல் தான் "தமிழ் எழுத்து சீர்திருத்தம் -1 ஓர் எளிய முறை". சமீபத்தில் என் தந்தை  மூலம் இப்புத்தகம் எனக்கு கிடைத்தது. இவருடைய உண்மையான தமிழ் பற்றிற்கு தலை வணங்குகிறேன்.

இந்நூலை ஆசிரியரே பதிப்பித்து இருக்கிறார், கண்டிப்பாக கடைகளில் கிடைக்க வாய்ப்பில்லை, அதனால் இந்நூலில்  திரு பெ.முத்துசாமி அவர்கள் குறிப்பிடும் தமிழ் எழுத்து சீர்திருத்தம் என்ன என்பது பற்றியே இந்தப் பதிவு.

அவசியம் என்ன?
தமிழ் எழுத்துகளின் சீர்திருத்தற்கு அவர் கூறும் காரணங்கள்
1. சில எழுத்துக்கள்  குழந்தைகள் எழுதி பழகுவதற்கு கடினமாக இருக்கிறது.
2. தட்டெழுத்துப் பொறிக்கும், அச்சுப் பொறிக்கும் ஏற்ற வகையில் சிறிது மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது.

தமிழ் எழுத்துகளின் சீர்திருத்தம் குறித்து டாக்டர் மு.வ. இப்படி குறிப்பிடுகிறார் 
"தட்டெழுத்துப் பொறிக்கும், அச்சுப் பொறிக்கும் ஏற்ற வகையில் அவற்றைச் சிறிது மாற்றியமைக்கு வேண்டும். இந்த வகையான மாற்றம் கருதிய சீர்திருத்தம் செய்யும்போது கண் மூடித்தனமாக பழமைப்பற்று, மொழிப்பற்று என்ற பெயராலும் குறுக்கிடலாகாது"

இந்நூலில் அவர் முதலில் குறிப்பிடும் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து நூலில் உள்ளபடியே கீழே.

'உ' கர மற்றும் 'ஊ' கார  எழுத்து குறியீடுகள் மாற்றப்படவேண்டும்

இப்போது 'கு' என்ற எழுதுவதை 'க' மட்டும் எழுதிப் பக்கத்தில் 'கு'வில் உள்ள வளைவில் பாதியைப் பிறை சந்திரன் வடிவில் ()) சேர்த்துவிடலாம், அதாவது 'கு'விற்கு பதில் 'க)'. இது எழுதுவதற்கும் மற்ற அச்சுப் பொறிகளுக்கும் இது எளிதாகவே இருக்கும். 'க' முதல் 'ன' வரை உள்ள எல்லா எழுத்துக்களுக்கும் இந்த ஒரே மாதிரியான குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

கூ வரிசையான நெடில் எழுத்துக்களுக்கு இதே கொம்பை திருப்பி போட்டு (() நெடில் ஆக்கி விடலாம். அதாவது 'கூ'விற்கு பதில் 'க('.

கீழ் மேல் உள்ள கொம்புகளை பக்கவாட்டில் சேர்த்தல்:

ஆ, இ, கு, சூ, ஞு, டு, ணு, ரு, லு, னு போன்ற கீழ் வளைவுகள் தட்டச்சுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தவிர்க்க உகர ஊகாரப் புதிய குறியீடுகள் ), ( இரண்டையும், ஏற்றுக் கொண்டால் உயிர் மெய் எழுத்துக்கள் அனைத்துக்கும் இச்சிக்கல் தீர்ந்து விடும். மீதம் இருப்பது ஆ மற்றும் இ. 'ஆ'வை இப்படியும்   இ யை இப்படியும்
எழுதலாம் என்கிறார்.

ஊ, ஐ, ஒ, ஓ, ஒள

உயிர்மெய் உகர  ஊகார வரிசைகளைப் போலவே ஊ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய உயிர் எழுத்துகளையும் குழந்தைகள் எழுதிப் பழக நீண்ட நாட்களாகின்றன. அவற்றையும் சற்று எளிமைப்படுத்தினால் குழந்தைகளுக்கு மனப்பாரம் குறையும், கைப்பழக்கமும் விரைவாக வரும்.
கி.பி. 6-ம் நூற்றாண்டு முதல் கி.பி. 12-ம் நூற்றாண்டு முடிய (அ) 3 என்பதை 'இ' என்ற எழுத்தாக இருந்துள்ளது. இப்போது இது பழகத்தில் இல்லை, அதனால் 3 என்பதை 'ஒ' வாகவும்  என்பதை 'ஓ' நெடிலாகவும் என்பதை 'ஒள' என்பதாகவும் இப்போது ஏற்றுக் கொண்டால் குழந்தைகளும், தமிழ் எழுத்தை புதிதாக கற்பவர்களும் எளிதாக கற்றுக் கொள்வார்கள். உருவத்திலும் ஓரளவு பழைய எழுத்துக்களைப் போலவே இருக்கும். அடுத்து ஊ என்பது 2 எழுத்துகளாக உள்ளதுடன் பெரியதாகவும் உள்ளது, இதனைச் சுலபமாக்க 'எ' குறிளின் அடியில் ஒரு சாய்வு கோடு சேர்த்து 'ஏ' நெடில் ஆக்குவது போல் 'உ' குறிலின் கடைசியில் அதே போல் ஒரு சாய்வு கோடு சேர்த்து நெடில் ஆக்கிவிடலாம். 

முடிவில் எழுத்து சீர்திருத்தம் குறித்து இப்படி குறிப்பிடுகிறார்.
தமிழ் எழுத்து சீர்திருத்தம் குறித்து ஆராய்வதற்காகத் தமிழ் அறிஞர்களும், உலகத் தமிழ் அமைப்புகளும் கூடிக் கலந்து பேசிப் பல மாநாடுகளை நடத்தி அரசுக்குப் பரிந்துரைத்து நடைமுறைப்படுத்தி வழி காண்பது மிகவும் அவசியமும் அவசரமும் ஆனதாகும்.

இது கணினி யுகம், தொலைக்காட்சி யுகம். எனவே மாறுதல்களை ஏற்றுக் கொள்வதில் வேகம் இருக்கும். மாறுதல்களை வலியுறுத்துவோர் தான் இப்போது தேவை.

திரு முத்துசாமி தன் கட்டுரையை முதலவருக்கு அனுப்பியிருக்கிறார், பரீசீலிப்பதாக பதில் அனுப்பியிருக்கிறது  தமிழ் வளர்ச்சித் துறை.

Tuesday, 17 August 2010

கிறுக்கல்கள் 2 - வேண்டுதல்


ஐந்து மணி நேர பயணம்
நீண்ட வரிசை
இரண்டு மணி நேர காத்திருத்தல்
நீண்ட வேண்டுதல் பட்டியல்
இரண்டு விநாடி தரிசனம்
அறைக்கு வரும் வழியில்
மொழி தெரியாமல் கதறி அழுதுகொண்டிருந்த பாட்டி
பார்த்த கணம் மனம் கனத்தது
கூட்டத்தில் யாரோ (யாரையோ?) தொலைத்த பாட்டி
நல்ல படியாக வீடு போய் சேர வேண்டி
மலையிலிருந்து நடந்து இறங்கினேன்

Saturday, 14 August 2010

வாசனை - 55 வார்த்தை கதை

"சிறு சிறு கதைகள்" என்ற புத்தகத்தில், சுஜாதா பல வகையான கதைகளை பற்றி எழுதியிருக்கிறார் இரண்டு வார்த்தை கதைகள், 55 வார்த்தை கதைகள், சி.சி. கதைகள் மற்றும் பல வகையான கதைகளை பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.

இனி 55 வார்த்தை கதைக்கான விதிமுறைகள்.
மொத்தம் 55- வார்த்தைகளில் கதை இருக்க வேண்டும். இது தான் முக்கிய விதி!
மற்ற விதிமுறைகள்:

1. கதையின் தலைப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் அதுவும் ஏழு வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. எண்களும் கணக்கில் உண்டு 45, 500, 3458 போன்றவையெல்லாம் வார்த்தைகளே!

3. நிறுத்தக் குறிகள் வார்த்தைகளாக எடுத்துக் கொள்ளப்படாது.

 சுஜாதா
55 வார்த்தை கதைகளை பற்றி இப்படி குறிப்பிடுகிறார் "55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது."


இனி நான் எழுதியது.
தலைப்பு: வாசனை

ஊருக்கு போயிருந்த என்னவளின் நினைப்பிலிருந்து கலைத்தது அவளுடைய அலைப்பேசி அழைப்பு 

'சொல்லுடி, எப்படியிருக்க' 

'நல்லாயிருக்கேன்'

'மதியத்திலிருந்து உன் நினைப்புதாண்டி, திடீர்னு வீடெல்லாம்  எங்க போனாலும் உன் வாசனையாவே இருக்கு '

'அப்புறம்'  சிணுங்கினாள்

'உன் ஞாபகம் அதிகமாயிருச்சு, ஊருக்கு வரட்டுமா?'

'ரொம்ப கொஞ்சாதீங்க, வந்துருவேன், ஆமா குளிச்சிடீங்களா?'

'ஆச்சு, என்  ஷாம்பூ  தீர்ந்துபோச்சுன்னு  உன் ஷாம்பை உபயோகிச்சேன்'
சிறிது அமைதிக்கு பிறகு

'இவ்வளவு நேரம் ஃபீல் பண்ண வாசம், அந்த ஷாம்பூ வாசம் தான்' கடுப்பாக போனை வைத்தாள்.

இப்பதிவு பிடித்திருந்தால் ஓட்டளிக்கவும். 

Saturday, 31 July 2010

கிளிஞ்சல் 6 - பலூன்தாத்தா

தோள்ப்பட்டையில் ஒரு நார் பை, பழைய சட்டை, அதே அளவு பழைய  லுங்கி, ஒரு கையில் கம்பு, அதில் வண்ண வண்ண பலூன்கள்,  மற்றொரு கையில் ஒரு பலூனை வைத்துக்கொண்டு "கிர்க்... கிர்க்..." என்று ஒலி எழுப்பி கொண்டு 70 வயது மதிக்கத்தக்க ஒருவரை  சைதாப்பேடையில் பார்த்திருக்கிறீர்களா? அவர் தான் இந்த கிளிஞ்சல். அவருடன் நான் பழகியதில்லை, பேசியதில்லை சைதாப்பேடையில் நான் இருந்த தெருவிலும், பஜார் தெருவிலும் பல முறை பார்த்திருக்கிறேன். எப்பொழுது முதலில் பார்த்தேன் என்று நினைவில் இல்லை, ஏதோ ஒரு தருணத்தில் அவரை கவனிக்க தொடங்கினேன். நகரத்தின் இரைச்சலுக்கு நடுவில் ஒரு சன்யாசி போல் நடந்து கொண்டிருப்பார், "பலூன்" என்று கத்தவும் மாட்டார் "கிர்க்... கிர்க்..."  என்ற சத்தம் மட்டுமே. எனக்கு ஏற்பட்ட ஆச்சர்யம், சென்னை போன்ற நகரங்களில் யார் பலூன் எல்லாம் வாங்குவார்கள், அவரிடம் யாரும் பலூன் வாங்கி நான் பார்த்ததில்லை (அதையும் மீறி  சைதாப்பேட்டை தெருவில் வாங்கி வெளிவருவதற்குள் அது வெடித்து விட அனைத்து சாத்தியங்களும் இருக்கிறது), ஏதோ நம்பிக்கையில் பலூன் விற்கிறார். அப்படியே சிலர் வாங்கினாலும் பலூன் வியாபாரத்தை  வைத்து எப்படி ஒருவர் சென்னையில் ஜீவனம் செய்வது? இந்தக் கேள்வி எழுந்த நாளில் இருந்து அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன். அன்று அவரிடம் பலூன் வாங்கி சென்றேன்.

பிறகு எப்போது மாலை இரவு நேரங்களில் கடைத்தெருவிற்கு போகும் பொழுதும் அவரை தேடுவேன், அவரை பார்த்தால் கண்டிப்பாக ஒரு பலூன் வாங்கி வருவேன். சமீபத்தில் நான் சைதையிலிருந்து பாலவாக்கத்திற்கு வீடு மாறினேன், ஐந்தரை வருடங்களுக்கு மேல் வாழ்ந்த இடம்,  சைதையிலிருந்து கிளம்புவதற்கு முன் அவரை ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் முடியவில்லை. நடுவில் ஒருநாள் மறுபடியும் சைதை வரவேண்டியது இருந்தது  அப்போது அவரை பார்த்தேன், வழக்கம் போல் அவரிடம் பலூன் வாங்க 10 ருபாய் கொடுத்தேன் அவர் ஒரு சிறிய பலூன் ஒன்றை தந்தார், மற்றொரு பலூனை தரவும் எடுத்தார், நான் வேண்டாம் என்றதும் "இல்ல இத வாங்கிக்க, இன்னைக்கு வியாபாரமே இல்லை, இப்ப கடையில சாப்பிடறதுக்கு 10 ரூபாய் போதும்" என்றார், நான் சிறிது நேரம் பேச்சற்று நின்றேன். பிறகு அவரை பின்தொடர்ந்து சென்று என் அலைப்பேசியில் எடுத்த புகைப்படம் தான் கீழே.



அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தோன்றுவது  கேள்விகள் மட்டுமே. "பலூன் வித்து எப்படி பிழைக்கிறார்?". அவரால் ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூட  சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை, அந்த ரூபாயை வைத்துக் கொண்டு  எப்படி சமாளிக்கிறார்?  ஒரு நாள் வியாபாரம் ஆகாமல் போனால், என்ன செய்வார்? அவருக்கு குடும்பம் இருக்கிறதா? எங்கு எப்படி தங்குகிறார்?, முடிவில்லா கேள்விகள்.

சைதையில் நான் இருந்த தெருவில் இருக்கும் பிச்சைக்காரர் கூட கண்டிப்பாக ஒரு நாளில் 50 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பார், இது அந்த தாத்தாவுக்கும் தெரிந்திருக்கும், இருந்தும் உழைத்து மட்டுமே சாப்பிட வேண்டும் என்கிற அந்த எண்ணம் தான் அவரை பெரிய மனிதராக காட்டுகிறது.  இவரை போல் மிக சிறிய தொழில் செய்து கொண்டு  இந்த பெருநகரத்தில் இன்னும் பலர் நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்,  இவர்களை பார்க்கும் போது வாழ்க்கை மேல் இன்னும் நம்பிக்கை கூடுகிறது. மறுபடியும் பலூன் தாத்தாவை எப்போது பார்ப்பேன் என்று தெரியவில்லை நீங்கள் பார்த்தால் மறக்காமல் அவரிடம் ஒரு பலூன் வாங்கி செல்லுங்கள்.

குறிப்பு: பாலவாக்கதிற்கு சமீபத்தில் வீடு மாறினேன், அங்கு இணைய இணைப்பு கிடைக்க தாமதம் ஏற்ப்பட்டதால் சில நாட்கள் பதிவெழுத முடியாமல் போயிற்று, இனி பதிவுகள் வழக்கம் போல் தொடரும்.

Sunday, 16 May 2010

அட!

குறிப்பு 1: முதல் கதை பதிவில் குறிப்பிட்டிருக்கும் போட்டிக்கு முதலில் எழுத நினைத்த  கதை இது தான்.

குறிப்பு 2: முதல் கதை பதிவில் குறிப்பிட்டிருக்கும் "Machine Life" கதை முதல் பரிசுக்கு தேர்வாகியிருக்கிறது.

அதிகாலை நேரம், சூரியன் இன்னும் ஒளிந்து கொண்டிருந்தது, பூங்காவில் அதிக கூட்டம் இல்லை, இனிமையான நாள், ஒரு கனவு போல் நடந்து கொண்டிருந்தேன். 'ராம்' என்று யாரோ பின்னாலிருந்து அழைத்தார், திரும்பி பார்த்தால் அட, யார் இவள்?, ஜாகிங் உடையில் ஒரு அழகான பெண் என்னை பார்த்து நின்று கொண்டிருந்தாள்.

"நீங்க ராம் தானே?"

"அமாம், நீங்க?" என்றேன் கேள்விக்குறியுடன்

"என்னை தெரியலையா உங்களுக்கு?" என்றாள் ஒரு சிரிப்புடன், இப்போது இன்னும் அழகாக இருந்தாள்.

"உங்கள பார்த்ததில்லையே" என்றேன் அவளை ரசித்து கொண்டே

"நல்ல ஞாபகப்படுத்தி சொல்லுங்க என்றாள்" மறுபடியும் அதே சிரிப்பு, ஜெராக்ஸ் எடுத்தார் போல்.

"உங்கள மாதிரி தேவதைய ஒருதடவ பார்த்தா யாரவது மறப்பாங்களா? உங்கள இப்பத்தான் பார்க்கிறேன்"

"இப்பத்தான் பாக்கறீங்க, ஆனா இதுக்கு முன்னாடி பேசியிருக்கீங்க" என்றாள்.

என் ஞாபத்தில் எவ்வளவு தேடியும், இந்த குரலை யாருக்கும் பொறுத்த முடியவில்லை.

சலிப்புடன் "ஏதாவது, பேங்க், கிரெடிட் கார்டு சம்பந்தப்பட்டதா?"

"என்ன நக்கலா?" என்று பொய் கோபம் காட்டினால், அப்பவும் அழகாக இருந்தாள்.

"சரி, இன்னொரு clue தரேன், நாம கடைசியா பேசினது, ரெண்டு மாசம் முன்னாடி"

"ஹே, சாருலதாவா நீ?" என்றேன் ஆச்சர்யத்துடன்.

"அப்பாடா, ஞாபகம் வச்சிருக்கியே, சந்தோசம்"

சாருலதா!, ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி, நல்ல விசயங்களை மட்டும் பகிர்ந்து கொண்டு, பிறகு சாட்டில் எழுதி, படித்து, பேசி, நன்றாக பழகினோம், கடந்த இரண்டு மாதங்களுக்கு முந்தைய ஆறு மாதங்களில் நடந்த எல்லாவற்றையும்  பகிர்ந்து கொண்டோம். இவள் அப்போது ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்தாள், இரண்டு மாதம் முன்பு, ப்ராஜெக்ட் மற்றும் பரீட்ச்சை இருப்பதால் இன்னும் கொஞ்ச நாள் chat பண்ண முடியாது என்று சொன்னாள், எப்பவாவது மெயில் அனுப்புவாள், அதற்கு பிறகு இப்போதுதான் சந்திக்கிறோம்.

ஃபேஸ்புக்கில் என் போட்டோவை பார்த்திருக்கிறாள், அவள் போட்டோ வைத்து கொண்டதில்லை.

"ப்ராஜெக்ட் எப்படி போச்சு? "

"ப்ராஜெக்ட், பரீட்ச்சை எல்லாம் நல்லா முடிஞ்சுது" என்றாள்.

"கோவிச்சுக்காத, ரெண்டு வாரம் முன்னாடி தான் எல்லாம் முடிஞ்சுது, நிறைய நண்பர்கள் அவுங்க வீட்டிற்கு கூப்பிட்டிருந்தார்கள், அங்கெல்லாம் போயிட்டு அப்படியே டைம் போயிருச்சு, சென்னை வந்ததும் உன்னை எங்கயாவது மீட் பண்ணனும்னு நினைச்சிட்டு இருந்தேன், அதுக்குள்ள எதேச்சையா இங்கயே பார்த்துட்டேன்."

"பரவாயில்லை, நீயே மெயில் பண்ணுவன்னு காத்துகிட்டு இருந்தேன், நானும் ரெண்டு மாசம் பிசி தான் வொர்க் கடினமா போயிட்டிருந்தது" சமாளித்தேன்.


"இங்க தான் உன்  வீடு இருக்கா?"

"இல்ல, அக்கா வீடு இங்க இருக்கு, அவங்க வீட்ல தான் இப்ப இருக்கேன்." அடிக்கடி சந்திக்கலாம் என்று நினைத்து கொண்டேன்.

"காபி குடிக்கலாமா?" என்று கேட்டு பக்கத்தில் உள்ள கடைக்கு சென்றோம்.
காபியை வாங்கி அவளிடம் கொடுத்த போது, முதல் முறையாக விரல்கள் தொட்டுக் கொண்டன, நான் மெய் மறந்து கொண்டடிருந்த போது மறுபடியும் யாரோ கூப்பிட்டார்கள்

"டேய் ராம், எந்திரிடா,  என்ன இன்னும் தூக்கம்"

அம்மா கத்தியதில் சட்டென்று எழுந்த்தேன், "ச்சே, எல்லாம் கனவா? சாரு, நெஜமாலும் இவ்வளவு அழகா இருப்பாளோ, இன்னைக்கு கண்டிப்பா போட்டோ அனுப்ப சொல்லணும்".

"ஏம்மா, அதுக்குள்ளே எழுப்பிட்ட?'

"டேய், அப்பா ஊரில் இல்ல, ஜிம்மி எந்திரிச்சதலிரிந்து கத்திகிட்டே இருக்கு, அத பக்கத்து பார்க் வரைக்கும் வாக்கிங் கூட்டிட்டு போடா."

"அப்பாவுக்குதான், வேலையில்ல நீயுமாம்மா?"

"அது கத்திகிட்டே இருக்கும், இன்னைக்கு ஒரு நாள் கூட்டிட்டு போடா"

"சரிம்மா"

சிறிது நேரத்தில், பல் தேய்த்து, முகம் கழுவி ஜிம்மியுடன் பார்க்கிற்கு கிளம்பினேன்.

அதிகாலை நேரம், சூரியன் இன்னும் ஒளிந்து கொண்டிருந்தது, பூங்காவில் அதிக கூட்டம் இல்லை, இனிமையான நாள், ஒரு கனவு போல் நடந்து கொண்டிருந்தேன். 'ராம்' என்று யாரோ பின்னாலிருந்து அழைத்தார், திரும்பி பார்த்தால், அட!


கதை பிடித்திருந்தால் தமிலிஷில் ஓட்டளிக்கவும்.

Monday, 3 May 2010

அங்காடித் தெரு - திரைப்பார்வை

வாழ்வில் வெற்றி பெற்றவனின் வாழ்க்கையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நமக்கு தோற்ற ஒருவனின் வாழ்க்கையை வெயிலாக தந்த வசந்த பாலன், வாழ்வு தேடி பெரு நகரங்களுக்கு வந்து, ஜொலி ஜொலிக்கும் கடைகளில் அடிமைபட்டிருப்பவர்களின் வாழ்வை அங்காடித் தெருவில் நம் பார்வைக்கு (சிந்தனைக்கும்) வைத்திருக்கிறார்.

மேற்படிப்பு  படிக்கும் கனவில் இருக்கும் மகேசுக்கு, அப்பாவின் மரணம் மூலம் இடி விழுகிறது, வீட்டை காப்பாற்ற வேறு வழியில்லாமல், சென்னையில் பிரமாண்டமாய் இருக்கும் கடைக்கு சேல்ஸ் மேன் வேலைக்கு சேர்கிறார். கடையின் ஜொலி ஜொலிப்பு போல் வாழ்க்கை அமையும் என்று நம்பி சென்னை வரும் மகேஷ், அங்கு சந்திக்கும் நிஜம் அவரை மட்டுமல்ல பார்க்கும் நம்மையும் உறைய வைக்கிறது.  அதே கடையில் வேலை செய்கிறார் அஞ்சலி,  ஆரம்பத்தில் இருவரும் அடிக்கடி மோதிகொள்கிறார்கள், அப்புறம் வழக்கம் போல் நன்றாக பழகுகிறார்கள். இவர்கள் மூலம்  இந்த மாதிரி கடையில் வேலை செய்பவர்கள் காலை முதல் இரவு வரை சந்திக்கும் பிரச்சனையையே நமக்கு படமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். அவர்களின் தங்குமிடம், உணவு, பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டுபாடுகள் அதை மீறினால் கிடக்கும் தண்டனைகள், என எல்லாம் நமக்கு அதிர்ச்சி தருகின்றன.

கதையின் நாயகனாக புதுமுகம் மகேஷ், நாயகியாக "கற்றது தமிழ்" அஞ்சலி. கோபமான காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார் மகேஷ், படத்தில் நடிப்பிற்கு முதல் மார்க் வாங்குவது அஞ்சலி ("நெசமாத்தான் சொல்றேன்"), அருமையாக நடித்திருக்கிறார், அத்தனை விதமான உணர்ச்சிகளையும் முகத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோல் பல படங்கள் அமைய வாழ்த்துக்கள் அஞ்சலி.   வேலை செய்பவர்களின் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும்  கடையின் டெரர் கண்காணிப்பாளர் "கருங்காலி"யாக இயக்குனர் வெங்கடேஷ் அசத்தியிருக்கிறார். மகேஷின் நண்பனாக வரும் பாண்டி அப்பப்ப கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

இதுவரை யாரும் தொடாத ஒரு கதையை தொட்டிருக்கும் இயக்குனர் வசந்த பாலனுக்கு வாழ்த்துக்கள் பல. எடுத்துக்கொண்ட கதையை எதாதர்த்திற்கு அருகாமையில் படமாக்கியிருக்கிறார் (சில காட்சிகளை தவிர) .திரைப்படங்களை பொழுதுபோக்குக்காக பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் பிடிக்காமல் போகலாம், அர்த்தமுள்ள படங்களை விரும்புவர்களுக்கு இதப்படம் கண்டிப்பாக பிடிக்கும். பிரதான கதைக்கு நடுவில் வரும் கதைகளும் சிறந்த சிறு கதையை படித்த உணர்வை தருகிறது. "அவள் அப்படி ஒன்றும்" பாடலும், "உன் பேரை" பாடலும் நன்றாக இருந்தன. படத்திற்கு தேவையான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்தில் உரையாடலை சிறப்பாக அமைத்திருக்கிறார் ஜெயமோகன். பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் முதல் பாதி வேகமாக செல்கிறது, இரண்டாவது பாதி சோகமாக இருப்பதாலோ என்னவோ கொஞ்சம் மெதுவாக செல்கிறது. இப்படத்தை தயாரித்திருக்கும் அய்ங்கரன் நிறுவனதிற்கு வாழ்த்துக்கள், இதுபோன்ற அர்த்தமுள்ள பல படங்களை தயாரிக்க வேண்டுகிறோம் (சீக்கிரம் நந்தலாலாவை வெளியிடுங்கப்பா).

மேம்பாலம் தன் கடையை மறைத்து விடும் என்று, பாலத்தை பாதியிலயே முடிக்க வைக்கும் முதலாளிகளும், கடையை இடிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும், கொடுக்க வேண்டியதை கொடுத்து நீதி மன்ற உத்தரவை மழுங்கடிக்க அரசு உத்தரவை பெரும் முதலாளிகளும் இப்படத்தை பார்த்து திருந்துவார்களா, என்பது தேவையில்லாத கேள்வியென்றே தோன்றுகிறது. இந்தப்படம் பார்த்த பிறகு, எந்த சேல்ஸ் மேன்/வுமன்களை பார்க்கும்போது அவர்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு தோன்றும், அதுவே இப்படத்தின் வெற்றி.

குறிப்பு: படம் பார்த்து 2 வாரம் ஆச்சு, ஆனால் விமர்சனம் எழுதமுடியவில்லை, நல்ல படம் பற்றி கண்டிப்பா எழுதியே ஆகணும் என்பதால், தாமதமானாலும் பரவாயில்லை என்று இந்த விமர்சனம் எழுதியிருக்கிறேன்.

Saturday, 1 May 2010

முதல் கதை

எங்கள் அலுவலகத்தில் கடந்த வாரம், "The Fibber" என்ற ஒரு கதை எழுதும் போட்டி வைத்திருந்தனர். அதற்கான விதிகள்
1. கதை கண்டிப்பாக இந்த வரிகளில் ஆரம்பிக்க வேண்டும் "A beautiful day and I was enjoying my stroll in the park with the breeze. I heard someone calling me from behind and when I turned back"
2. என்ன மாதிரியான கதையாகவும் இருக்கலாம்.
3. 500 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும்.

ரொம்ப நாளாக கதை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அதை நிறைவேற்றி கொள்ள இது வாய்ப்பாக அமைந்தது. நானும் ஒரு கதை எழுதி அனுப்பியிருக்கிறேன், இன்னும் முடிவு வரவில்லை. அதை கீழே கொடுத்திருக்கிறேன், படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். நான் முதலில் எழுத நினைத்த கதை வேறு, எழுதும் போது மனம் மாறி, கீழ் கொடுத்திருக்கும் கதையாக முடிந்தது. முதலில் எழுத நினைத்த கதையை தமிழில் முயற்சித்து கொண்டிருக்கிறேன், முடிந்ததும் வலைப்பூவில் பதிக்கிறேன். இனி கதை.

Machine Life
A beautiful day and I was enjoying my stroll in the park with the breeze. I heard someone calling me from behind and when I turned back, an angel like girl was standing and she is Meena my long time friend, I was on cloud nine, past 2 years I was longing to see her, this was a shocking surprise.
She smiled at me and said “How are you Vinay?”
“I am doing great, how about you?”
“Doing well.”
We sat in a bench near by and started sharing our good old memories. We had a fun time, sharing on what’s happening in each others world and how we missed each other.
“Do you remember when we met last time” she questioned me.
I thought for a second and said “no idea”
“25 years back, in the get together!”
“Yes, I remember, things went deep in my memory, my processor was little slow in recollecting details.”
“Oh no, still the same boring guy always talking about processor all those stuffs”
“I am sorry.”
I lost myself in the conversation and suddenly remembered that how did she come inside the park? “How did they allow you?” I questioned.
“One of my friend has fractured her limbs and we were asked to go here for treatment, that’s why we were allowed, our details are noted down, we got an early morning appointment, my friend is in the operation lab, I came to the park.”
I smiled and said “After that incident they are not allowing any females inside this place, very rare to see any female, I am really happy to see you”
“Yes, it happened 50 years back, after that clash between the genders we were separated and placed in different worlds.”
“How did you commute here?”
“We came in our mini rocket”
“Is that your friend” I said pointing to another female coming into the park.
“Yes”
She rushed towards her “Sara Got your problem solved?”
“Yes” said Sara.
“Meet my friend Vinay, we were together in this world decades back, actually we both were developed on same day Feb 23rd 2623 to fight against the human created robots and that was a successful war.”
“Vinay, this is Sara, one of the new breed of robots developed in our world.”
I smiled at Sara, but she didn’t.
“Its time for us to leave Vinay, we have to reach our world in another 1 Hr. that is our scheduled time”
“Nice meeting you, you made my day”
“Nice meeting you too, hopefully we meet again before our expiry date”
I smiled sarcastically.
Meena zipped away in her mini rocket. I stared at the sky for a minute and started my long and final walk to my cabin, I have a manufacturing defect so my expiry date is advanced by a decade and today is the day and I’ll be destroyed in another 30 minutes, before she reaches her world. I said in the air “Thanks Meena, you made my day”.