Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

Monday, 31 August 2009

திரைப்படங்களும் விமர்சனங்களும்

முன்பெல்லாம் நமக்கு ஒரு திரைப்படத்தின் விமர்சனம் பத்திரிக்கைகள், வார மாத இதழ்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் கிடைக்கும். பின்னர் வலைத்தளங்களிலும் விமர்சனம் வர ஆரம்பித்தது. பின்னர் பல வலைப்பூவிலும் வந்தது, இப்போது கொஞ்ச காலமாக குறுஞ்செய்தியில் கூட வர ஆரம்பித்துவிட்டது. தொலைக்கட்சிகளில் வரும் விமர்சனம் அதில் நடிக்கும் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கம் போன்றவற்றை பொருத்து இருக்கும். பத்திரிகைகளில் வரும் விமர்சனம் ஓரளவுக்கு பரவாயில்லை, ஒரு சாராருக்கு சார்பில்லாமல் எழுத முயற்சிக்கிறார்கள் (சில பத்திரிகைகள்). இவர்களெல்லாம் அவர்களிடம் இருக்கும் சிறந்த சினிமா விமர்சகர்களை வைத்து விமர்சனங்களை எழுதுகிறார்கள் என்று நம்புவோம். இவர்கள் ஒரு மோசமான படத்தில் இருக்கும் நல்ல விஷயத்தை சொல்லிவிட்டு தான் படம் அவ்வளவ்வு சிறப்பில்லை என்ப்பார்கள். இவர்கள் பல காலமாக விமர்சனம் செய்து எழுதி வருகிறார்கள். இப்போது தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் போல பலரும் வலைத்தளங்களில் விமர்சனம் செய்கிறார்கள் அந்த விமர்சனங்களைப் பற்றிய விமர்சனமே இந்தப் பதிவு.

ஒரு சினிமாவை விமர்சிப்பதில் எந்த தவறும் இல்லை, எந்த பொருள் அல்லது விஷயம் நாலு பேரின் பார்வைக்கு வருகிறதோ அது விமர்சனத்துக்கு உள்ளாகிறது, அரசியல் முதல் சினிமா வரை எல்லாம். ஒரு வீட்டின் சண்டையே தெருவுக்கு வந்தால் அது பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அந்த வகையில் ஒரு திரைப்படமும் பலரின் பல்வேறான விமர்சனத்துக்கு உள்ளாகிறது. நான் படித்த வரையில் ஒரு திரைப்படம் பல வலைத்தளங்களில் விமர்சிக்கப்படும் போது கீழ்கொடுத்துள்ள அடிப்படையில் விமர்சிக்கப்படுகிறது.

1. எந்த மொழி படத்தில் இருந்து சுட்டதாக இருக்கும் என்ற தேடல்?
2. என்ன என்ன ஓட்டைகள் இருகின்றன?
3. படத்தில் காட்டப்பட்ட காட்சிகளில் விமர்சகருக்கு பிடிக்காத காட்சிகள்.
4. இதே போல் இதுக்கு முன் வந்த திரைப்படங்கள்?
5. இந்த படத்தை ஒத்திருக்கும் வேறு மொழி படங்கள் குறிப்பாக ஆங்கிலம், இரானியன், ஸ்பானிஷ் மற்றும் பல.
6. இயக்குனருக்கு அவர்கள் படத்தை எப்படி எடுத்திருக்கலாம் என்று தரும் அறிவுரைகள்.

ஒரு சிறந்த படத்தை விமர்சனம் செய்யும் போது விமர்சனத்தின் முடிவில் இந்த படத்தை அனைவரும் சென்று பார்க்க வேண்டும் என்று கூறி முடிக்கும் போது எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அந்த விமர்சகருக்கு பிடிக்காத ஒரு படத்தை விமர்சிக்கும் போது அந்த படத்தில் நடித்த நடிகர் முதல் இயக்குனர் வரை கேலிக்கு உள்ளக்கட்படுகின்றனர், விமர்சனம் என்கிற பெயரில் அந்த படத்தை கொத்தி குதறி போட்டுவிட்டு போய்விடுகின்றனர். இந்த விமர்சனம் இவருடன் நிற்பதில்லை இதை படிப்பவர்கள் பலரும் அவர்கள் அந்த படம் பார்த்தார்களோ இல்லையோ அதே போல் நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர் அது பலருக்கும் பரவி விடுகிறது. இது யாரவது ஒருவருடைய அலைப்பேசிக்கு ஏற, பிறகு புற்றீசல் போல் அந்த விமர்சனம் பரவி அந்த படத்தையே மரணப்படுக்கையில் போட்டு விடுகின்றது. வலைத்தளங்களில் விமர்சனம் எழுதுபவர்களாவது பரவாயில்லை படத்தை பார்த்து விட்டு தான் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் இந்த அலைப்பேசியில் வரும் ஒரு குறுஞ்செய்தி சில நிமிடங்களில் பல ஆயிரம் அலைப்பேசிகளில் வசிக்க ஆரம்பித்துவிடுகிறது, இந்த வகையில் அனுப்புபவர்கள் பெரும்பாலும் அத்திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டார்கள், வரும் செய்தியை forward செய்வதோடு அவர்கள் வேலை முடிந்துவிடுகிறது, அந்த ஒரு செய்தி சாக வரம் பெற்று அலைந்து கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்படுவது அந்தப்படமும் தயாரிப்பாளரும்.

நாம் ஒரு படத்தை பார்த்துவிட்டு அதை மொக்கை, மோசமான படம் என்று கூற சில நிமிடங்கள் தான் ஆகும், ஆனால் அந்தப்படத்தை எடுத்து வெளியிட அந்த தயாரிப்பாளரும் இயக்குனரும் படும் கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு படம் என்பது ஒரு படைப்பு, இயக்குனர் படைப்பாளி. ஒரு படம் எவ்வளவ்வு மோசமானதாக இருந்தாலும் அதை படைத்தவனை பொறுத்தவரை அது அவனுடைய படைப்பு, ஆகவே அது மோசமான விமர்சனத்துக்கு உள்ளாகும்போது படிப்பாளியையும் பாதிக்கிறது. திரைப்பட படப்பிடிப்பை பார்த்திருக்கிறீர்களா? பார்த்தவர்களுக்குத் தெரியும் ஒரு காட்சி எடுப்பதற்கு எவ்வளவ்வு நேரம், மக்கள் சக்தி, உழைப்பு, பணம், பொறுமை, இயற்கையின் ஒத்துழைப்பு தேவையென்று. என்னுடைய சிறு வயதில் சினிமா படப்பிடிப்பை பார்க்க ரொம்ப ஆசைப்பட்டேன், ஒன்றிரண்டு படப்பிடிப்பை பார்த்தபின் அந்த ஆசை போய்விட்டது. ஒரு கதாப்பாத்திரம் நடந்து வரும் காட்சியையே சில சமயங்களில் ஒரு நாள் எடுப்பார்கள். ஒரு நாடகம் நடித்த அனுபவமோ அல்ல இயக்கிய அனுபவமோ இருந்தால் இது எளிதாக புரியும். கிட்டத்தட்ட Friends படத்தில் வரும் வடிவேலு போலதான் இருக்கும் (ஆணியப் ...). ஒரு காட்சி எடுப்பதற்கே இவ்வளவ்வு சிரமம் என்றால் ஒரு படம் எடுப்பதற்கு? ஒரு படம் எடுக்கப்படுகிறது என்றால் அந்த படம் எடுத்து முடியும் வரை முதன்மையான நடிகர் நடிகையர், இயக்குனர் தவிர குறைந்தபட்சம் ஒரு 500 பேருக்காவது வேலை கிடைக்கும், அவர்கள் வீட்டில் அடுப்பெரியும். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இவ்வளவ்வு அடங்கியிருகின்றன. ஆயினும் பல தடைகள், இன்னல்கள் தாண்டி வரும் ஒரு படத்தை சீ தூ என்று இடதுகையால் ஒதுக்க நமக்கு தேவைப்படுவது சில நிமிடங்களே.

ஒரு திரைப்படத்தை விமர்சிக்கவே கூடாது என்பதல்ல என் வாதம். எந்த கலையும் விமர்சிக்கப்படாவிட்டால் அது அடுத்த கட்டத்திற்கு முன்னேறாது, ஒரு கலையின் முன்னேற்றத்திற்கு விமர்சனம் தேவை. அதற்க்காக உங்களுக்கு பிடிக்காத படத்தை இது அந்த படத்தில் இருந்து காப்பியடித்து, இந்த காட்சி வேற படத்தில் இருந்து சுட்டது, இந்த படத்தில் கதையே இல்லை என்று கண்ணா பின்னவென்று விமர்சித்துவிட்டு அதை மற்றவர்களுக்கும் படிக்க கொடுத்துவிடுவதுதான் பிரச்சனை. ஒரு படம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்க்காக மற்றவர்களுக்கும் பிடிக்காது என்றில்லை.எந்த ஒரு படமும் யாரவது ஒருத்தருக்கு பிடிக்கும் வாய்ப்புள்ளது, நமுக்கு பிடிக்காதது மற்றவர்க்கு பிடிக்காது என்று நினைக்க தேவையில்லை. ஒரு படத்தை பார்த்து விட்டு நல்லா இல்லை என்று சொன்னால் பரவாயில்லை, இந்த விமர்சனங்களை படித்துவிட்டே சிலர் இந்தப்படம் மோசமாமே என்று கூற ஆரம்பித்துவிடுகின்றனர், படம் பார்க்காமளையே விமர்சிப்பவர்கள் மீதுதான் அதிக கோபம்.

ஒரு படம் நமக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நாம் மற்றவர்களுக்கும் சொல்ல தேவையில்லை, அப்படத்தின் மேல் ஈடுபாடு உள்ளவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். இதனால் எந்த மோசமான படமும் 100 நாள் ஓடிவிடாது. ஒரு படம் நன்றாக ஓடினால் அதிலிருக்கும் எதாவது ஒரு விசையம் பலரை கவர்ந்திருக்கும், அதில் நல்ல கதையிருக்கலாம், நல்ல நடிப்பிருக்கலாம், அல்லது அதில் நடித்த நடிகையின் இடுப்பு பிடித்திருக்கலாம். உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கோ (அவர்களுடைய ரசனை தெரியுமென்றால்) அல்லது வீட்டில் இருப்பவர்களுக்கோ உங்கள் விமர்சனத்தை சொல்வதில் தவறில்லை, ஆனால் அனைவருக்கும் சொல்லத் தேவையில்லை. ஒரு படத்தை விமர்சிக்கவே கூடாது என்றில்லை, எந்த திரைப்படம் தவறான கருத்துகளையும் செய்திகளையும் சமுதாயத்துக்கு தருகிறதோ அந்த திரைப்படங்களை கண்டிப்பாக எங்கும் விமர்சிக்கலாம் அதில் ஒரு பயன் இருக்கிறது, மற்ற படங்களை விட்டுவிடலாம். ஆனால் விமர்சனம் செய்யும் முன் நீங்கள் விமர்சிப்பது பல வருடங்களாக சினிமாவை தவிர்த்து வாழத்தெரியாத கூட்டம் ஒன்றிற்க்காக எடுக்கப்பட்ட படம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அத்திரைப்படத்தை நீங்கள் பார்த்து சிலாகித்த ஸ்பானிஷ், பிரெஞ்சு, இரானியன், ஆங்கிலம் போன்ற மற்ற மொழிப்படங்களுடன் ஒப்பிடாதீர்கள் அவர்கள் வேறு நாம் வேறு, நாங்கள் திரைப்படம் சாரதா ஒரு முதல்வரை தேர்ந்தெடுக்கவே இன்னும் பல தேர்தல்கள் தேவைப்படும், திரைப்படங்களை பொறுத்தவரை இன்னும் பலர் தவழ்ந்து கொண்டிருக்கிறோம், சிலர் தான் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள், நாங்கள் ஓடுவதற்கு இன்னும் பல காலம் ஆகும்.

இந்தப்பதிவு எழுதக்காரணம் சமீபத்தில் சில படங்களை பற்றி படம் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் கண்டபடி விமர்சித்து வந்த மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும் மற்றும் எனக்கு திரைப்படங்களின் மேலிருக்கும் ஆர்வமும் காதலும். என் வலைப்பூவில் எனக்கு பிடித்த படங்களை பற்றிமட்டுமே எழுதுவதாக இருகிறேன், முடிந்தால் நீங்களும்.

குறிப்பு: சிறந்த படங்களை மட்டுமே பார்ப்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் விமர்சனம் எழுதுவதை நிறுத்திவிட்டு, பத்திரிகையாளர், எழுத்தாளர் ஞானி அவர்கள் கோலம் - வீடு தேடி வரும் சினிமா இயக்கம் என்று ஒன்றை ஆரம்பித்திருக்கிறார், அதில் நீங்களும் இணைந்து கொண்டு நல்ல திரைப்படங்கள் உருவாக உங்கள் பங்களிப்பை அளியுங்கள். மேலும் விபரங்களுக்கு http://gnani.net/.

Saturday, 8 August 2009

குமுதத்தின் சொதப்பல் பட்டியல்

5.8.2009 தேதியிட்ட குமுதத்தில் விக்ரமுடன் மோதும் ஜீவன் என்று ஒரு கட்டுரை வெளியானது அதில் விக்ரம் நடித்து வெளிவரும் கந்தசாமியும் ஜீவனின் கிருஷ்ணா லீலையும் ஒரே ஒன்லைனை அடிபடையாக கொண்டு வெளிவருவதாக கூறுகிறது அந்த கட்டுரை, இந்த இரு படங்களின் கதைகளும் ஒன்றா இல்லையா என்று படம் வந்ததும் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்த கட்டுரையில் அவர்கள் தமிழ் திரையுலகில் கதை பஞ்சம் என்றும் அதனால் பல ஹிட்டான ஹாலிவுட் படங்களின் கதைகளை சுட்டு நம் இயக்குனர்கள் படம் எடுகின்றனர் என்றும் கூறுகிறது. இது வரை எந்த பிரச்சனையும் இல்லை, இந்த கட்டுரையின் ஒரு பகுதியாக ஒரு பட்டியலை வெளியிடிருகிறார்கள் அது எந்த ஹாலிவுட் படத்தை சுட்டு என்ன தமிழ் படம் வந்திருக்கிறது என்று, பிரச்சனை இதுதான்.இந்த பட்டியலில் 17 படங்கள் இடம்பெற்றிருகின்றன "இது ஒரு சாம்பிள் தான், பட்டியல் இன்னும் நீளம்" என்ற குறிப்புடன்.

ஹாலிவுட் படங்களின் கதைகளை அப்படியே தழுவியோ அல்லது அதை ஒரு Inspiration ஆக வைத்தோ பல படங்கள் வந்திருகின்றன வருகின்றன அதை மறுப்பதற்கு இல்லை. இவர்கள் வெளியிட்டிருக்கும் பட்டியல் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை. அந்த பட்டியலில் ஹாலிவுட் படங்களை ஒரிஜினல் என்றும் அத்துடன் ஒப்பிடப்படிருக்கும் தமிழ் படத்தை சுட்டவை என்றும் குறிப்பிடிருகின்றனர். ஆக அவர்கள் அந்த பட்டியலில் குறிப்பிடிருக்கும் அணைத்து தமிழ் படங்களும் ஏதோ ஒரு ஹாலிவுட் படத்தை பார்த்து எடுக்கப்பட்டிருக்கிறது என்கின்றனர். இதில் எனக்கு உடன்பாடில்லை (அது யாருக்கு வேண்டும் என்கிறீர்களா?). இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சில படங்களை பற்றி கிழே.

மகாநதி:Hardcore
மகாநதி கமல் ஹாசனின் ஒரு முக்கியமான படம். அது ஒரு வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. கிராமத்தில் வசதியாக வாழும் கமலை ஹனீபா தான் நடத்தும் சிட்பண்டு தொழில் சேர்த்து கொண்டு அவரை ஏமாற்றிவிடுகிறார். அதனால் ஜெயிலில் அடைக்கப்படும் கமல் பிறகு வெளியே வரும்போது தன் சிதறிய குடும்பத்தை ஒன்று சேர்க்கிறார். தன் மகளை ஒரு விபச்சார விடுதியில் கண்டுபிடித்து மீட்கிறார். பிறகு இந்த நிலைக்கு காரணமானவர்களை கொன்று விட்டு மீண்டும் ஜெயிலுக்கு போகிறார். இந்த படத்தை இயகியிருப்பவர் சந்தான பாரதி.

Hardcore என்ற ஆங்கிலப்படத்தின் கதை, ஒரு தொழிலதிபர் காணமல் போன தன்னுடைய மகளை தேடுகிறார். தேடல்களுக்கு பிறகு அவர் மகளை ஒரு ஆபாச படமெடுக்கும் கும்பலிடமிருந்து மீட்கிறார்.எந்த வகையில் இந்தப்படத்தை பார்த்து மகாநதி எடுத்திருப்பார்கள் என்று குமுதம் தான் விளக்க வேண்டும். இந்த இரு படங்களுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இந்த கதை நாயகர்களின் மகள்கள் ஆபாசமான தவறான செயலுக்குள் தள்ளப்படுகின்றனர் என்பது மட்டுமே, இதை மட்டும் வைத்துக்கொண்டு மகாநதி Hardcore என்ற படத்தை சுட்டு எடுத்தது என்றால் மடத்தனம்.

அபூர்வ சகோதரர்கள்:The Corsican Brothers
The Corsican Brothers படத்தில் கொலை செய்யப்பட தங்களது பெற்றோர்களை சிறு வயதிலேயே பிரிக்கப்பட்ட சகோதரர்கள் 20 வருடம் கழித்து சேர்ந்து கொலையாளிகளை எப்படி பழி வாங்குகிறார்கள் என்பதுதான் கதை.

அபூர்வ சகோதரர்கள் படமும் கிட்ட தட்ட இதே போல் ஒரு கதைதான் என்றலும் பல வேறுபாடுகள் இருகின்றன ஆங்கில படத்தில் குள்ள ஹீரோவெல்லாம் இல்லை. இதில் நம் குள்ள கமல் தான் பழி வாங்குகிறார் இன்னொரு கமல் அதன் மூலம் வரும் பிரச்சனைகளை சந்திக்கிறார் கடைசியில் அனைவரும் ஒன்று சேருகின்றனர். இருபடங்களுக்கும் ஒரே ஒற்றுமை இரண்டும் தன் பெற்றோரை கொன்றவர்களை பழி வாங்கும் கதை, இதை அடிபடையாக வைத்து பல மொழிகளிலும் பல படங்கள் வந்துவிட்டன இன்னும் வரும். இந்த படத்தின் சிறப்பு குள்ள கமல் தான், அந்த கதாப்பாத்திரத்தை எப்படி படமாக்கினார் என்பது இன்னும் பலருக்கு தெரியாது.

விருமாண்டி:Life of David Gale
Life of David Gale இந்த படத்தின் நாயகன் மரண தண்டனைக்கு எதிராக போராடுகிறார், ஆனால் அவரே ஒரு கொலை குற்றத்தில் மாட்டி மரண தண்டனை விதிக்கப்படுகிறார். அவரை மரண தண்டனைக்கு சில நாள் முன் பேட்டி எடுக்க ஒரு பத்திரிகையாளர் (Kate Winslet) வருகிறார் அவருக்கு சில ஆதாரங்கள் கிடைக்க அவர் மேலும் துப்பறிந்து நாயகனை நிரபராதி என்று நிருபித்து விடுதலை செய்கிறார்.

விருமாண்டியில் ஒரு கிராமத்தில் நடந்த படுகொலையில் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் மரண தண்டனைக்கு எதிராக போராடும் ஒரு பத்திரிக்கையாளரிடம் நடந்ததை அவரவர் பார்வையில் கூறுகின்றனர். இந்த படத்தில் முதன்மையாக கூறப்பட்டிருப்பது விருமாண்டி, கொத்தாளன் மற்றும் நாய்கர் இடையே நடக்கும் சண்டையும் சூதும் தான், இந்த படத்தின் ஆரம்பத்திலும் முடுவிலும் மட்டுமே மரணதண்டனைக்கு எதிராக பேசுகிறார்கள். இது மட்டும் தன் இந்த படத்துக்கும் Life of David Gale படத்துக்கும் இருக்கும் ஒரே சம்பந்தம் அதற்காக விருமாண்டியை இந்த படத்தை பார்த்து கமல் எடுத்தார் என்பதெல்லாம் ஒத்துகொள்ள முடியவில்லை.

இந்த மாதிரி இரு படத்திற்கும் சிறு ஒற்றுமையை வைத்துக்கொண்டு இந்த படத்தை பார்த்து அந்த படம் எடுக்கபட்டது என்பது ஏற்புடையதல்ல. அப்படி பார்த்தால் இப்போது வரும் படங்களில் எதாவது ஒரு காட்சியோ இல்லை எதாவது ஒன்றோ வேறேதோ படத்தில் இருக்க வாய்ப்புகள் ரொம்ப அதிகம் நம் பட்டியலில் எல்லாம் இடம் பத்தாது.

இந்த மாதிரி சின்ன ஒற்றுமைகள் (தமிழ் படத்தில் இருப்பவை) ஆங்கில படத்திலும் இருக்கும். உதாரணமாக உலகமே போற்றிய Titanic படத்தில் ஒரு ஏழை நாயகனுக்கும் பணக்கார நாயகிக்கும் காதல் வருவதும் பின்னர் அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் காட்டப்பட்டிருக்கிறது. நம் தமிழ் சினிமாவில் இதை அடிப்படியாக கொண்டு பல படங்கள் வந்துவிட்டன, அதனால் Titanic படத்தை தமிழ் படத்தை பார்த்து எடுத்தனர் என்று சொல்லலாமா என்ன? இது மாதிரி பல உதாரணங்கள் கிடைக்கும்.

எல்லா மொழிகளிலும் வேறொரு மொழிப்படத்தை தழுவியோ அல்லது Inspiration ஆக கொண்டோ படங்கள் வந்து கொண்டுதான் இருகின்றன, அப்படி எடுக்கப்படும் படங்கள் பார்பவர்களுக்கு எதாவது ஒரு செய்தியோ மகிழ்ச்சியோ தரும் வரைக்கும், அவர்கள் எடுக்கும் படத்தை சொதப்பாத வரைக்கும் எந்த தவறும் இல்லை (நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல).

குமுதம் போன்ற பலமான வாசகர் வட்டம் உள்ள ஏடுகளில் எந்த ஆராய்ச்சியும் ஆதாரமும் இல்லாமல் போகிற போக்கில் ஒரு பட்டியலை வெளியிடுவது அழகில்லை. இதை படிப்பவர்களுக்கு நம் படைப்பாளிகள் மேல இருக்கும் நம்பிக்கையை குறைத்துவிடும். முடிந்தால் பல விசயங்களை ஆராய்ந்து ஒரு தரமான பட்டியலை வெளியிடலாம் இல்லையேல் அந்த பக்கத்தில் ஒரு கவர்ச்சி படம் போட்டு நிரப்பி விடுங்கள் யாருக்கும் தொல்லையில்லை.