Tuesday 14 September 2010

இந்த வாரம் - 14/09/2010

தமிழக அரசியல்:
அரசியல் பற்றி ரஜினி பரபரப்பு பேட்டி என்று கடந்த வாரம் சில பத்திரிகைகள் கடைகளில் தொங்கிக் கொண்டிருந்தன, "பரபரப்பு பேட்டி" என்றால் அது ஒன்றும் இல்லாத வெத்துப் பேட்டி என்பது நம்மூர் பத்திரிக்கை விதி, அதனால் நான் கண்டுகொள்ளவில்லை. இணையத்தில் தேடிய போது அந்த செய்தி கிடைத்தது. "அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போது இல்லை" என்று 101வது முறையாக  பரபரப்பு பேட்டி கொடுத்திருந்தார். அவர் என்றைக்கும் வரப்போவது இல்லை (வராமல் இருப்பதே நல்லது என்பது என் கருத்து).

விளையாட்டு:
யு எஸ் ஓபன் முடிந்தது, என் கறு நாக்கோ  (கறு எழுத்து?) என்னவோ ஷரப்போவா மறுபடியும் அவுட். நடால் வென்றார்.

போப்பண்ணா ஜோடி இறுதி வரை வந்தது ஆறுதல், சேர்ந்து விளையாடுவது பாகிஸ்தான் நாட்டு ஆட்டக்காராக இருப்பதால் இன்னும் சுவாரசியம்.

சாம்பியன்ஸ் T20  ஆரம்பித்து விட்டது, ஃபிசிங்கா? இல்லையா? என்பது தொடர் முடிந்த பிறகு ஆராய்ச்சி செய்து கொள்ளலாம், அதுவரை டீ.வி முன் பலியாய் கிடக்கலாம், இல்லையேல் அமிதாப் வந்து அடிப்பார்.

கவிதை
இந்த வாரம் நான் படித்த மனுஷ்ய புத்திரன் கவிதை

பாபருக்கு வேண்டும் மசூதி
ராமருக்கு வேண்டும் கோயில்
ஜனங்களுக்கு வேண்டும்
சுகாதாரமான கழிப்பறைகளேனும்

வரும் 24ஆம் தேதி, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு சொல்ல போகிறார்கள், எத்தனையோ ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பது போல் இத்தீர்ப்பையும் சொல்லாமல் இருப்பதே மேல்.

கோவில்
கடந்த வாரம் ஒரு நண்பரின் திருமணத்திற்காக கும்பகோணம் சென்றிருந்தோம், கிடைத்த நேரத்தில் சுவாமிமலை சென்றிருந்தோம். முருகனின் அறுபடை வீட்டில் நான் இதுவரை செல்லாத கோவில் அது. இது முருகனின் நான்காவது படைவீடு. கோவில் பெரிதாக அழகாக இருந்தது, வெளியிலிருந்து பார்க்கும் போது மலையெல்லாம் ஏற வேண்டியதில்லை என்று நினைத்தேன், உள்ள சென்ற பிறகு தான் தெரிந்தது நிறைய (60) படி ஏற வேண்டியது இருந்தது. நாங்கள் சென்ற நேரம் முருகனுக்கு அபிஷேகம் ஆரம்பித்திருந்தார்கள், சிறப்பான தரிசனம் கிடைத்தது.

இத்தலத்தின் சிறப்பு:
தந்தை சிவனுக்கு முருகன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை விளக்கி சொன்ன இடம் இது. அதனால் இங்கிருக்கும் முருகனுக்கு சுவாமிநாதன் என்றும் தகப்பன்சாமி என்றும் அழைக்கப்படுகிறார். 

1 comment:

மதுரை சரவணன் said...

//பாபருக்கு வேண்டும் மசூதி
ராமருக்கு வேண்டும் கோயில்
ஜனங்களுக்கு வேண்டும்
சுகாதாரமான கழிப்பறைகளேனும்//

கவிதை பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்