Thursday 10 September 2009

எனது கிறுக்கல்கள்

கவிதை எழுதுவது என்பது பலருக்கும் பிடித்த விசயமாக இருக்கிறது, எனக்கும். முதல் கவிதை முயற்சி எனது பத்தாவது வகுப்பில் நடந்தது. எங்கள் பள்ளியில் கையெழுத்து புத்தகம் ஒன்று தொடங்கப்பட்டது, பெயர் candour. அதில் மாணவர்கள் தங்கள் இஷ்டப்பட்டத்தை எழுதினார்கள். நானும் அதில் எழுத ஆசைப்பட்டேன் விளைவு கவிதை எழுத ஆரம்பித்தேன். நான் எழுதுவதை யாராவது படித்து திருத்தி பின்னர் அது இதழில் வரும். அந்த இதழ் சில மாதங்களில் நிறுத்தப்பட்டது, நான் எழுதியதாலா? என்று தெரியவில்லை. எத்தனை கவிதைகள் எழுதினேன் என்று சரியாக நினைவில் இல்லை, ஒரு கவிதை இயேசு பற்றியும் மற்றொன்று பொங்கல் திருநாள் பற்றியும் எழுதியது நினைவில் இருக்கிறது. பிறகொரு முறை ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் மாணவர்கள் பற்றி ஒரு கவிதை எழுதி வாசித்தேன். இந்த எல்லா முயற்சிக்கும் பாராட்டு கிடைத்தது. பிறகு கல்லூரியில் பெரிதாக எதுவும் எழுதவில்லை, கடைசித் தேர்வுக்கு முன் ஒரு கவிதை எழுதினேன், யாருக்கும் படிக்க கொடுத்தாக நினைவில் இல்லை.

வேலை கிடைத்த பிறகு புத்தகங்களின் மீது காதல் கொண்டேன், படிக்க ஆரம்பித்தேன், பிறகு தான் நான் இதுநாள் வரையில் எழுதியதெல்லாம் கவிதை இல்லை என்று. இனி மேல் கவிதை என்கிற பெயரில் யாரையும் கஷ்டப்படுத்த கூடாது என்று சில ஆண்டுகள் எதுவும் எழுதவில்லை. இப்போது இந்த வலைப்பூவில் அதையும் எழுதிப்பாப்போம் என்று தோன்றியதால் உதயமானது எனது கிறுக்கல்கள். கிறுக்கல்கள் என்ற பெயரில் நடிகர் பார்த்திபன் ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார், நான் வேலைக்கு சேர்ந்து முதலில் வாங்கிய புத்தகம் அது. கிறுக்கல்கள் என்ற தலைப்பில் இதை வெளியிட கொஞ்சம் தயக்கமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது, ஆனாலும் அந்த பெயரிலேயே எழுதுகிறேன். திரு. பார்த்திபன் என்னை மன்னிப்பாராக. கிறுக்கல்கள் என்றவுடன் என் நினைவில் வருவது எங்கள் டியூஷன் இயற்பியல் ஆசிரியர் கூறுவது "நாமெல்லாம் கிறுக்கனுகட கிறுக்கிகிட்டே இருக்கணும் அப்பத்தான் நல்லா படிப்போம்" என்பார்.

எனக்கு தோன்றும் எண்ணங்களை மடித்து ஒடித்து ஒரு கவிதை வடிவில், குறித்து கொள்ளுங்கள் "கவிதை வடிவில்" எழுதுவேன் அவ்வளவுதான். நான் இங்கே எழுதப்போவதை கவிதை என்கிற நோக்கில் அணுக வேண்டாம் உங்களுக்கு பிடித்திருந்தால் ரசியுங்கள், இல்லையெனில் பொறுத்துக்கொள்ளுங்கள் . நான் எழுதுவதில் தப்பி தவறி எதாவது ஒன்று கவிதையாகவோ அல்லது அதற்கு அருகாமையிலோ வந்தால் மகிழ்ச்சியே. இந்த முயற்சியின் முன்னேற்றத்திற்கு உங்கள் பின்னூட்டங்கள் பெரிதாக உதவும், அகவே உங்கள் கருத்துக்களை அதில் தெரிவிக்கலாம்.

கிறுக்கல் - 1







அழும் குழந்தை
உறங்கும் அம்மா
தாலாட்டும் ரயில்

கிறுக்கல் - 2


அழகான வாயில்
பிரமாண்டமான மதில்
கம்பீரமான கோட்டை
அதை சுற்றி அகண்ட அகழி
அதில் படகு பயணம்
பத்து ரூபாய்

2 comments:

Unknown said...

கிறுக்கல் 1 மிக அற்புதம்...

rammalar said...

மிக அருமை