Wednesday 23 September 2009

உன்னைப்போல் ஒருவன் - திரைப்பார்வை


ஒரு சாமான்யன் இந்நாட்டில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்த்து போராட நினைத்தால் என்ன நடக்கும்? அதுதான் உன்னைப்போல் ஒருவன். உன்னைப்போல் ஒருவன் பற்றி பல பதிவுகள் வந்திருந்தாலும், என் வலைப்பூவில் இத்திரைப்படம் பற்றி ஒரு பதிவிட வேண்டும் என்ற ஆசையிலே இந்த திரைப்பார்வை.

இந்த பதிவு வரும் சமயத்தில் கிட்டத்தட்ட அனைவருக்கும் கதை தெரிந்திருக்கும். ஒரு சாமான்யன் நாலு செல்போன் கொஞ்சம் புத்திசாலித்தனம் வைத்துக்கொண்டு காவல் துறை கமிசனரை ஆட்டிவிக்கிறார். சாமான்யனாக கமல், கமிஷனராக மோகன்லால்.
இந்தியில் வெளிவந்த இந்த படத்தை தமிழில் தயாரித்து நடித்தற்கே கமலுக்கு ஒரு ஷொட்டு. தமிழாக்கத்தில் எந்த பெரிய மாற்றமும் இல்லை, சின்ன சின்ன மாறுதல்களே, கடைசியில் தான் செய்ததற்கு கமல் சொல்லும் காரணம் தவிர (இந்தியில் ஷா வேறு காரணம் சொல்லுவார்).200 பேர் கொண்ட ஒரு தீவிரவாத கும்பல் 100 கோடி பேரை மிரட்டுகிறார்கள், நம்மை காப்பாற்றிக்கொள்ள ஒன்றும் செய்ய இயலாமல் இருக்கிறோம் என்ற கோபத்தையும் அதே சமயம் தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதம் தான் வழி என்றும் கூறுகிறது இத்திரைப்படம்.

கமல் இருக்கும் இடம் ஒரு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தின் மாடி, மோகன்லாலுக்கு ஒரு அறை அவ்வளவுதான். இந்த இரு இடங்களில் இருந்து கொண்டு இருவரும் காட்டும் நடிப்பும் பாடம், நடிப்பு ராட்சசர்கள். இளம் நடிகர்கள் பார்த்துக் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றன. அதுவும் கமலின் உடல் மொழியும், மோகன்லாலின் நடிப்பு அபாரம், அவர் பேசும் மலையாளம் கலந்த தமிழும் அழகு. நிருபராக வரும் அனுஜா நன்றாக நடித்திருக்கிறார்.இளம் காவல் அதிகாரிகளாக வரும் கணேஷும், பரத்தும் சிறப்பாக நடித்திருகின்றனர், அதிலும் கணேஷ் துடிப்பான காவல் அதிகாரியாக மிக சிறப்பாக செய்திருக்கிறார், வரும் காலங்களில் சரியான படம் தேர்வு செய்து நடித்தால் அவருக்கு சிறப்பான இடம் காத்திருக்கிறது. தலைமை செயலாளராக லக்ஷ்மி நடித்திருக்கிறார், எடிட்டர் இவருடைய க்ளோஸ்-அப் காட்சிகளை தவிர்த்திருக்கலாம். முதல்வர் பாத்திரத்திற்கு கலைஞர் குரலே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது சிறப்பு.

இந்த படத்தில் அறிமுகமாகியிருக்கும் இசைஅமைப்பாளர் ஸ்ருதி, வசனகர்த்தா இரா.முருகன் (நானும் இவரும் ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்றோம்) , இயக்குனர் சக்ரி என்று அனைவரும் மிக சிறப்பாக செயல்பட்டிருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் இப்படம் ஒரு சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது. இப்படத்தின் வசனகர்த்தா இரா.முருகன், இலக்கிய உலகில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்திருக்கிறார், அவருடைய இலக்கிய பணி வெள்ளித்திரையிலும் தொடர வாழ்த்துகள். வசனத்தில் பல இடங்களில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்துவதை தவிர்த்திருக்கலாம், அதிலும் கமல் மோகன்லாலிடம் "binaryயா பதில் சொல்லு" என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவராக இருக்கிறது, மற்றபடி வசனம் சிறப்பாக இருந்தது. ஒளிப்பதிவாளரும் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். படத்தில் குறைகள் என்று பெரிதாக ஒன்றும் இல்லை, படம் சொல்ல வருவதை நாம் சரியாக புரிந்து கொள்ளும் வரை.

இதன் இந்தி படத்தை இதுவரை பார்கதவர்கள் தமிழில் பார்க்கும் போது இப்படம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும். பல வலைப்பூக்களில் இந்த படத்தை பற்றி பல விவாதங்கள் நடக்கின்றன, இது Hindutuva சார்ந்த படமென்றும், Anti-Muslim படமென்றும் சிலர் பரப்புகிறார்கள், இன்னும் சிலர் ஒரு படி மேல போய் படத்தை விட்டுவிட்டு கமலை ஒரு பிடிபிடிகின்றனர். விவாதம் அந்த படத்தை சுற்றி இருக்கும் வரையில் அரோக்கியமனதே, அதை மீறும் போதுதான் அசிங்கமாக இருக்கிறது, குறிப்பாக ஒரு தனி மனிதனை தாக்குவது. அவர் எடுக்கும் படத்தை விமர்சிக்க மட்டுமே நமக்கு உரிமை உண்டு, அவரையல்ல. இந்த விவாதங்களையெல்லாம் படிக்காமல் (அப்படியே படித்தாலும் தலைகேற்றாமல்) இப்படத்தை பாருங்கள், அப்படி பார்க்கும் போது அந்த கட்டிடத்தின் உச்சியில் நிற்ப்பது கமல் அல்ல நம்மை போல் ஒரு ஒருவன் என்று நினைத்து பாருங்கள் இப்படம் சொல்ல வரும் நியாயங்கள் புரியும்.

No comments: