Sunday 4 October 2009

கிளிஞ்சல் 5 - கே பழனிச்சாமி (K P)

உங்களுக்கு உங்கள் ஊரில் எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்? நான் சொல்வது பார்த்தால் ஹலோ மட்டும் சொல்லும் நண்பர்கள் அல்ல, அதையும் தாண்டிய நெருங்கிய நண்பர்கள்? ஒரு ஐந்து பேர் இருப்பார்களா அல்லது மூன்று பேர் குறைந்தபட்சம் ஒருத்தராவது இருப்பார்கள் என்று நினைகிறேன், எனக்கு இருந்த ஒரே ஊர் நண்பன் கே பழனிச்சாமி. இருந்தான் என்று படித்தவுடன் பயந்து விடாதீர்கள், அவன் இன்னும் இருக்கிறான் ஆனால் இன்று எங்களுக்குள் நட்பு இருப்பதாக தோன்றவில்லை அவ்வளவு தான். இனி அவனை பற்றி...

எங்கள் ஊரில் என் வயது பையன்கள் என்று பார்த்தால் பழனிச்சாமி, முகிலன், பாலன் அவ்வளவுதான். இதில் பழனிச்சாமிக்கும் எனக்கும் ஒரே வயது, முகிலன் என்னை விட ஒரு வயதும், பாலன் என்னை விட மூன்று வயதும் சிறியவர்கள். இதில் நானும் முகிலனும் ஒரே ஆங்கிலப் பள்ளியில் படித்தோம், பழனிச்சாமியும் பாலனும் அரசு பள்ளியில் படித்தனர். பழனிச்சாமி சுமாருக்கும் நன்றுக்கும் இடையில் படித்தான், முகிலன் சுமாராக படித்தான், பாலன் நன்றாக விளையாடுவான், படிப்பை தவிர மற்ற வேலைகள் நன்றாக செய்வான். இந்தப்பதிவு பழனிச்சாமி பற்றியதால் இவர்கள் இனி தேவையில்லை தேவைப்பட்டால் அழைத்துக்கொள்ளலாம். பழனிச்சாமி ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன், அவனுக்கு ஒரு அக்கா ஒரு தங்கை, அப்பா பெயர் காளி, அம்மா பெயர் சரசா. அவனை ஊரில் பெரும்பாலும் காளி பையன் என்றே அழைப்பார்கள், நாங்கள் K P என்று. எங்கள் ஊரில் ஒரு ஓரத்தில் அவர்கள் வீடு இருக்கிறது. இத்துடன் மணிபுரம் எல்லை முடிவு என்று கோடு போட்டது போல் வரிசையாக சில வீடுகள் இருக்கும், அதில் கடைசி வீடு தான் பழனிச்சாமியின் வீடு. அவனுடைய அப்பா ஒரு அரிசி மில்லில் வேலை செய்தார், இன்னும் செய்கிறார் என்று நினைக்கிறேன். பழனிச்சாமி வீடு இருந்த அந்த வரிசை முழுவதும் அவர்கள் உறவினர்கள் வீடே.

எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகம் எப்போது நிகழ்ந்தது என்று நினைவில் இல்லை. ஆனால் நினைவு தெரிந்த நாளில் இருந்து ஊரில் என்னோடு சுற்றிய ஒரே நண்பன் அவன் தான். நாங்கள் இணைந்து ஐஸ் நம்பெரிலிருந்து கிரிக்கெட் கபடி வரைக்கும் விளையாடியிருக்கிறோம். கிரிக்கெட்டை பொறுத்தவரை அப்போது எங்கள் ஊரில் இருந்த நட்சத்திர ஆட்டக்காரர்கள் பாலன், K P மற்றும் நான் (அப்போது). எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் இருப்பவர்களை இரு அணிகளாக பிரித்து நான் ஒரு அணிக்கும், பழனிச்சாமி ஒரு அணிக்கும் கேப்டனாக இருப்போம், சில சமயங்களில் இருவரும் ஒரு அணியில் இருந்தும் ஆடுவோம். எங்கள் ஊர் கிரிக்கெட்டில் அப்போது continuous ஓவரெல்லாம் உண்டு, அதாவது ஒருவரே தொடர்ந்து மூன்று ஓவர் போடலாம். பக்கத்து ஊரில் எல்லாம் போய் விளையாடி இருக்கிறோம். அவனுடைய அக்காவும் என் அக்காவும் நண்பர்கள். அவனுடைய அக்கா என்னை எங்கள் ஊரின் G T நாய்டு என்று அழைப்பார், நான் அவ்வளவு புத்திசாலியாம். அவன் வீட்டில் எப்போதும் எதாவது ஒரு புத்தகம் படிக்க கிடைக்கும் ராணி காமிக்ஸ், ராணி முத்து, ராஜேஷ்குமார் கிரைம் நாவல் மற்றும் சில மாத வார இதழ்கள். இதெல்லாம் அவன் வாங்கியிருப்பான் அல்லது மற்றவர்களிடமிருந்து வாங்கி வந்திருப்பான், எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் வர இதெல்லாம் ஒரு காரணமா அமைந்தது. நான் முதலில் படித்தது, காமிக்ஸ் புத்தகம், அது அவனுடைய வீட்டில் இருந்துதான்.

அவனுடைய வீட்டில் எனக்கு எல்லா உரிமையும் இருந்தது, என் மேல் அவர்களுக்கு ஒரு மரியாதை, அவன் அதிக மதிப்பெண்கள் வாங்கா விட்டால் அவன் நல்ல படிக்க வேண்டும் என்று என்னை சொல்ல சொல்வார்கள். அவரவர் பள்ளியில் நடப்பதை பகிரிந்து கொள்வோம். வெவ்வேறு மீடியம்களில் படித்ததால் இருவரும் சேர்ந்து படித்ததில்லை, இருவரும் ஓரளவு படித்தோம். அவனுடைய பள்ளி நாட்களில் நான் விடுப்பில் இருக்கும் சமயங்களில் அவனுடைய பள்ளிக்கு சென்றிருக்கிறேன், அங்கு அவனுடன் பள்ளியில் கொடுக்கும் உணவை உண்டுவிட்டு, அவனுடைய பள்ளி நண்பர்களுடன் விளையாடிவிட்டு வந்திருக்கிறேன். அப்போது வருடா வருடம் எங்கள் ஊரில் விளையாட்டு போட்டி நடக்கும், அதற்கு பரிசு வாங்க ஊர் மக்களிடம் பணம் வசூலிக்க நானும் அவனும் போவோம், வருடா வருடம் மின்னொளியில் நடந்த கபடி போட்டிகளை விடிய விடிய பார்த்திருக்கிறோம், அவ்வப்போது ஊரில் பொதுவில் டிவி டெக் வைத்து ஒளிபரப்பப்படும் படங்களை ஒன்றாக பார்த்திருக்கிறோம். இப்போது விளையாட்டு போட்டியும் இல்லை, கபடி போட்டியும் நடத்தப்படுவதில்லை, யாரும் டெக்கில் படம் போடுவதும் இல்லை.

நாங்கள் இருவர் மட்டும் இருக்கும் சமயங்களில், எங்கள் வீடு வாசலில் நாங்கள் மட்டும் கிரிக்கெட் விளையாடுவோம். கால், அரை பரீட்ச்சை சமயங்களில், தேர்வு இல்லாத மதிய வேளைகளில் என் வீட்டு வாசலில் பிளாஸ்டிக் பந்தில் பேசிகொண்டே கிரிக்கெட் விளையாடியது இன்னும் நினைவில் இருக்கிறது. பத்தாவதில் 350 மதிப்பெண்களே அவன் வாங்கியிருந்தான், ஆனாலும் கவுந்தப்பாடி அரசு பள்ளியில் முதல் குரூப் கிடைக்குமென்றும் அதை தேர்வு செய்யுமாறும் கூறியிருந்தேன், அவனும் சரி என்றான். +1 முதல் நாள் பள்ளி சென்று வந்த நான், அவனுடைய வீடிற்கு போனேன் அவன் வீட்டில் இல்லை, சரி என்று அவன் புத்தக பையை பார்த்த போது தான் அவன் மூன்றாவது குரூப் எடுத்தது தெரிந்தது, எனக்கு பெரும் கோபம் வந்தது. ஏதோ அவன் பெரும் தவறு செய்தது போல் தோன்றியது. அவனிடம் மிகவும் வருத்தப்பட்டுவிட்டு வந்தேன், அவன் தனக்கு இதே போதுமென்றான்.

+2 படிக்கும் போது கொஞ்ச நாள் பள்ளி விடுதியில் தங்கி இருந்ததாலும் தீவிரமாக படித்து கொண்டிருந்ததாலும் அவனுடன் அதிகம் பேச முடியவில்லை, எங்களுகிடையில் சின்ன இடைவெளி விழுந்தது. மேலும் இச்சமயத்தில் அவனுக்கு சில புது நட்பு கிடைத்திருக்கலாம். +2 முடித்த பின் நான் பொறியியல் சேர்க்கைக்கு காத்திருந்தேன், அவன் மேல் படிப்பிற்கு எதுவும் முயற்சி செய்ததாக தெரியவில்லை. மேலே எதுவும் படித்தானா என்று நினைவில் இல்லை. நான் பொறியியல் கல்லூரி சேர்ந்த புதிதில் ஊருக்கு வரும் போது அவன் அவர்கள் உறவினர் ஒருவரிடம் முடி திருத்தல் தொழில் கற்றுக்கொண்டிருப்பதாக கூறினர். பிறகு சில மாதங்கள் கழித்து நான் கவுந்தப்பாடி சென்ற போது அங்கு அவன் கடை வைந்திருந்தது தெரிந்தது, கொஞ்ச நேரம் பேசி விட்டு வந்தேன் எங்களுக்கிடையில் ஒரு இடைவெளி இருந்தது தெரிந்தது. அதன் பிறகு செமஸ்டர் விடுப்புகளில் ஊருக்கு வரும் சமயங்களில் சாலையில் சந்திக்கும் போது பேசிக்கொள்வோம். சில காலம் கழித்து அவன் செய்து வந்த தொழிலையும் விட்டுவிட்டு கரூரில் ஏதோ ஒரு மகளிர் குழுவிலோ அமைப்பிலோ வேலை செய்வதாக கேள்விப்பட்டேன். சமீபகாலங்களில் நான் அவனை பற்றி கேள்விப்பட்டதெல்லாம் கெட்ட விசையங்களே (என்னுடைய இரு சம்பவங்கள் பதிவில் முதல் சமபாவம் இவனை பற்றியதே).

ஒரு ஏழ்மையான படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் இருந்த இவன், நன்றாக படித்து நல்ல நிலைக்கு வருவான் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எல்லாம் வேறு மாதிரி ஆகிவிட்டது. அவனுடைய இந்த தலைகீழ் மாற்றத்திற்கு காரணம் +1, +2விலோ அல்லது அதற்கு பிறகோ அவனுக்கு ஏற்பட்ட கெட்ட சகவாசங்களே. நான் அவனை பார்த்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது, இனி எப்போது அவனை பார்த்தாலும் அந்த பழைய நட்பு எட்டி பார்க்குமா என்பது சந்தேகமே, மீண்டும் அந்த நட்பு துளிர்க்க வேண்டும் என்பதே என் ஆவல். இந்த மாதிரி எத்தனையோ பழனிச்சாமிகள் பல ஊர்களில் வழி தவறி போய் ஊர் சுற்றிகொண்டிருகிறார்கள், நாமெல்லாம் தப்பி பிழைத்து உலகம் சுற்றிகொண்டிருகிறோம்.

1 comment:

venkatesan said...

readers should remember their KP's