Sunday 25 October 2009

The Shawshank Redemption (1994)


"வாழ்க்கையில் எந்த நிலமையிலும் சூழலிலும் நம்பிக்கை ஒன்று இருந்தால் வெற்றி பெறலாம்" என்று சொல்லும் படம் தான் The Shawshank Redemption. மார்கன் ஃப்ரீமன், டிம் ரபின்ஸ் நடித்து ஸ்டீபன் கிங்கின் கதையை அடிப்படையாக வைத்து ஃபிரான்க் டரபோன்ட் இயக்கியது. எனக்கு பிடித்தமான படங்களில் மிக முக்கியமான படம். வாழ்க்கையே முடிந்து போகும் என்ற புள்ளியிலிருந்து ஒருவன் எப்படி மீண்டும் தன் வாழ்க்கையை தொடங்குகிறான் என்பதே The Shawshank Redemption. IMDBல் டாப் 250 படங்களில் மக்கள் இப்படத்திற்கு முதல் இடத்ததை கொடுத்திருக்கிறார்கள்.

Andy - ஒரு நிதி நிறுவனத்தின் மேலதிகாரி, அவன் தன் மனைவியையும், அவளுடைய காதலனையும் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, நிருபிக்கப்பட்டு, இரட்டை ஆயுள் தண்டனை (மொத்தம் 40 வருடங்கள்) விதிக்கப்படுகிறான். அந்த தண்டனையை அனுபவிக்க அனுப்பப்படும் இடம் ஷஷாங் சிறைச்சாலை . அங்கு சிறையில் பலருக்கு தேவையான பொருட்களை வெளியில் இருந்து கொண்டு வரும் மற்றொரு கைதி ரெட், பிரபலமான கைதி. சிறைக்கு வந்து சில நாட்கள் கழித்து ரெட்டிடம் தனக்கு கற்களை வைத்து சிறு பொம்மைகள் செய்வதில் விருப்பம் என்றும் அதனால் ஒரு சுத்தியல் வேண்டுமென்று கேட்கிறான், ரெட்டும் வாங்கி தருகிறான். இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நட்பாகின்றனர், Andyயும் ரெட்டின் குழுவில் ஒருவனாகிறான். ஒரு முறை சிறை காவலதிகாரி தான் அதிக வருமான வரி கட்ட வேண்டியது குறித்து சக அதிகாரிகளிடம் கூறுவதை கேட்கும் Andy, அவருக்கு வரி கட்டாமல் சொத்தை எப்படி பாதுகாப்பது என்று வழி சொல்கிறான், அதில் பிரபலமாகும் Andy, சிறை அதிகாரி பலருக்கும் வருமான வரி ஆலோசகனாகிறான். இதற்கு பிறகு ரெட் குழுவில் அவன் மரியாதை ஏறுகிறது.

ஷஷாங் சிறையின் மேலதிகாரி நார்டன், சிறை கைதிகளை தனக்கு வருமானம் ஈட்டுவதற்கு உபயோகித்து கொள்கிறார், அதற்கு நிதி ஆலோசகராக Andyயை உபயோகித்து கொள்கிறார் நார்டன். இதனால் சிறை மேலதிகாரியுடனும் நெருக்கமாகிறான் Andy. சில வருடங்கள் கழித்து மற்றொரு கைதிகள் குழு அந்த சிறைக்கு வருகிறது, அதில் டாம் என்கிற ஒரு இளம் கைதி இவர்கள் குழுவில் ேர்கிறான். அவனுக்கு எழுதப் படிக்க கற்று கொடுக்கிறான் Andy. ஒரு நாள், Andy சிறைக்கு வந்த கதையை கேட்டு விட்டு, இதற்கு முன் தன்னுடன் சிறையிலிருந்தவன் இதே போல் கொலை செய்ததாகவும், அதற்கு ஒரு வங்கி அதிகாரி தண்டிக்கப்பட்டதாக கூறியதையும் டாம் கூறுகிறான். இதை சிறை மேலதிகாரியிடம் கூறி தன் வழக்கை மறு விசாரணை செய்யுமாறு கோருகிறான் Andy, அதை ஏற்காத அதிகாரி அவனை தனிமை சிறையில் தள்ளுகிறார், பிறகு டாமையும் கொலை செய்கிறார் . சில மாதங்கள் கழித்து தனிமை சிறையிலிருந்து வருகிறான் Andy, ஒரு நாள் ரெட்டிடம், விடுதலை ஆகி வந்தால் தன்னை சந்திக்க வேண்டுமென்றும், இருவரும் தொழில் செய்யலாம் என்றும் கூறுகிறான். அடுத்த நாள் சிறையில் இருந்து மாயமாகிறான் Andy. Andy எப்படி தப்பித்தான், ரெட் விடுதலை ஆனான? Andyயுடன் சேர்ந்தானா என்பது மீதிப்படம்.

சிறையும், சிறை சார்ந்த அனுபவங்களே படம் முழுவதும். சிறையில் பல வருடங்கள் இருப்பவர்கள் சிறைக்கு வெளியில் உள்ள உலகத்தை சந்திக்க தயங்குவதையும், அப்படி வெளியில் செல்வோரின் நிலைமையை ப்ரூக்ஸ் தாத்தா பாத்திரத்தின் வாயிலாக கூறியிருக்கிறார்கள். கதையை ரெட் narrate செய்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரெட்டாக மார்கன் ஃப்ரீமன், Andyயாக டிம் ரபின்ஸ் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். மார்கன் ஃப்ரீமனின் வசன உச்சரிப்பு அற்புதம், அவருடைய குரலே தனி கம்பீரம், அவர் செய்யும் narration மற்றொரு அற்புதம். படத்தில் எனக்கு பிடித்த மற்றொரு பாத்திரம் ப்ரூக்ஸ் தாத்தா. இருபது வருடங்களில் ஒருவன் மனம் மற்றும் உடலில் ஏற்படும் மாற்றங்களை சிறப்பாக காட்சிபடுத்தியிருகின்றனர். படத்தில் பல காட்சிகள் மிக சிறப்பாக இருந்தது. குறிப்பாக நூலகத்தை பராமரிக்கும் ப்ரூக்ஸ் தாத்தா, பரோலில் விடுதலை செய்யப்படும் போது, சிறையை விட்டு போக மனமில்லாமல் அழும் காட்சியும், ரெட்டை பரோலில் விடுவிக்க நடக்கும் விவாத காட்சியும், பரோலில் விடுதலை செய்யப்படும் ரெட், தன் வேலை செய்யும் இடத்தில் ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கவும் அனுமதி கேட்கும் காட்சியும். படத்தில் எனக்கு பிடித்த வசனங்களில் சில...

"The funny thing is, on the outside, I was an honest man, straight as an arrow. I had to come to prison to be a crook."

"There are things in this world not carved out of gray stone. That there's a small place inside of us they can never lock away, and that place is called hope."

"You're right. It's down there, and I'm in here. I guess it comes down to a simple choice, really. Get busy living or get busy dying."

"Andy Dufresne , who crawled through the river of shit and came out clean on the other end"

ஒரு காட்சியில் ரெட்டிடம் இப்படி சொல்கிறான் Andy "Hope is never dangerous Red, Hope is always a good thing, hope keeps a man Alive". இந்தப்படம் சொல்வது ஒன்று தான் நம்பிக்கை, நம் நம்பிக்கையை யாரும் சிதைக்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் அதற்காக உழைத்தால், வெற்றி நிச்சயம். ஆம், நம் வாழ்க்கை என்னும் சக்கரம் நம்பிக்கை என்னும் அச்சாணியில் தானே சுற்றிக்கொண்டிருக்கிறது.

1 comment:

Ananya Mahadevan said...

இந்த சினிமாவபத்தி நிறையா கேள்விப்பட்டு இருக்கிறேன். இன்னும் பார்க்கல. உங்கள் பதிவை படித்த பிறகு சீகிரமே பார்ப்பேன் என்று நினைக்கிறேன்.