Tuesday 31 August 2010

கதம்பம்- 31/08/2010

கதம்பம் என்ற தலைப்பில் ஒவ்வொரு வாரமும் நிகழும் அரசியல் மாற்றம், விளையாட்டு (குறிப்பாக கிரிக்கெட்),  பார்த்த திரைப்படம் ,  படித்த புத்தகம் ஆகியவற்றை பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

தமிழக அரசியல்:
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது, கூட்டணிகள் மாறுமா? இல்லை தொடருமா? என பல மர்மங்கள் விலகத் தொடங்குகிறது. இப்போது இருக்கும் நிலையை இப்படி கூறலாம்.

காங்கிரஸ் தி.மு.க கூட்டணியில் இருக்கவே விரும்புகிறது, ஆனால்  அவர்கள் விரும்பும் தொகுதிகள், மற்றும் ஆட்சியில் பங்கு கிடைக்க கடைசி வரை இளங்கோவன், ப.சிதம்பரம் என்று யாராவது சீண்டிகொண்டே இருப்பார்கள் போல. 


அ.தி.மு.க - இவர்கள் நடத்தும் கூட்டங்களில் கூடும் கூட்டத்தை காட்டி முடிந்தவரை கட்சிகளை இழுக்க முயற்சிக்கிறது.

பா.ம.கதான் இப்போது நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக தெரிகிறது. "தி.மு.க அழைத்தால் பேச ஒரு குழு அமைக்கப் பட்டிருகிறது", "நாங்கள் இருக்கும்  கூட்டணியில் விஜயகாந்த் இருந்தால் எங்களுக்கு கவலை இல்லை", "காங்கிரஸ் தலைமையில் புது கூட்டணி அமைந்தால் சேருவோம்", "தேவைப்பட்டால் நாங்களே ஒரு கூட்டணிக்கு தலைமை தாங்குவோம்"," தனித்து 100 தொகுதிகளில் போட்டியிடுவோம்" என அனைத்து சாத்தியங்கள் குறித்தும் பேசியிருக்கிறார் மருத்துவர். இதெல்லாம் இல்லாமல் ஒரு புது மாதிரியாக முடிவு இருக்குமோ? பார்க்கலாம்.

தே.மு.தி.க முதல் முறையாக  கூட்டணி குறித்து பேச ஆரம்பித்திருகிறது,  புதுக் கூட்டணி ஆரம்பித்தால் கொஞ்சம் தொகுதிகள் வெற்றி பெற்று பெயரையும் காப்பாற்றி கொள்ளலாம், அ.தி.மு.க, தி.மு.க என்று யாருடன் கூட்டணி வைத்தாலும் விஜயகாந்தின் செல்'வாக்கு' குறையும் என்றே தோன்றுகிறது.

இவையனைத்தும் தற்போதைய நிலவரம், கா(க)ட்சிகள் எப்படி மாறுகின்றன என்று போக போக பார்க்கலாம்.

இந்த வார விளையாட்டு:
முத்தரப்பு போட்டியில் இந்தியா ஆடிய விதம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக பேட்டிங்கில், சச்சின் இடத்தை நிரப்பும் அறிகுறி ஏதும் தெரியவில்லை. ஹர்பஜனுக்கு பிறகு நல்ல சுழற்பந்து வீச்சாளர் என்று யாரும் இல்லை என்பது கூடுதல் வருத்தம்.அஷ்வினையும், திவாரியையும் பெஞ்சிலேயே வைத்திருந்தது ஒரு ஏமாற்றம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு மற்றொரு பள்ளத்தில் விழுந்திருக்கிறது, மறுபடியும் ஃபிக்சிங், இந்த முறை ஸ்பாட் ஃபிக்சிங் (Spot Fixing). PCB கொஞ்ச காலம் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டு இந்த ஃபிக்சிங் சர்ச்சைகளை fix செய்து பிறகு மறுபடியும் ஆட வரலாம் அதுதான் அவர்கள் கிரிக்கெட்டுக்கு செய்யும் பேருதவி, இல்லையேல் அவர்கள் ஆடும்/ஆடிய எந்த ஆட்டத்தையும் சந்தேகத்துடனே பார்க்க தூண்டும், அப்படி செய்வார்களா? பார்க்கலாம். இந்த சர்ச்சையில், முஹம்மத் ஆமீரும் சம்பந்த்தப்பட்டதாக வரும் செய்திகள் வருத்தம் அளிக்கிறது. அதுவும் கடந்த 6 மாதங்களாக என்னம்மா பந்து வீசுகிறார் ஆமீர்.

இந்த வார திரைப்படம்:
கடந்த ஞாயிறு அன்று புதிதாக தொடங்கப்பட்டிருக்கம் Express Avenueவில் உள்ள escapeல் "நான் மகான் அல்ல" நானும் என்  மனைவியும் பார்த்தோம். படம் பிடித்திருந்தது.

நிறைகள்:
கலகல முதல் பாதி, விறு விறு இரண்டாவது பாதி
நல்ல பாத்திர தேர்வு, அவர்களின் நிறைவான நடிப்பு.
திரைக்கதையின் வேகத்தை பாதிக்காத பாடல்கள், சிறந்த பின்னணி இசை.

குறைகள்:
சில மனதை நெருடும் வன்முறை காட்சிகள்
கிளைமாக்சின் நீளம் 

படம் முடிந்த பின்பு, அங்கிருக்கும் food courtக்கு  சென்றோம். இந்த மாதிரி பெரு வணிக இடங்களில் ஸ்மார்ட் கார்டில் முன்பே பணம் போட்டு கொண்டு, அந்த அட்டையை தான் உபயோகித்து எதுவும் வாங்க முடியும் (சில கடைகளை தவிர). இந்த அட்டையை நாம் பணமாக கொடுத்து வாங்கினால் போகும்போது அட்டையை கொடுத்துவிட்டு மீதிப் பணத்தை வாங்கிக் கொள்ளலாம், ஆனால் வங்கி (டெபிட்) அல்லது கடன்(கிரெடிட்) அட்டை உபயோகித்து இந்த அட்டையை வாங்கினால், போகும் போது மீதிப்பணத்தை திருப்பி தரமாட்டார்களாம், அனைத்து பணத்திற்க்கும் சாப்பிட்டே ஆக வேண்டும், எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த வார மென்பொருள்:
கடந்த வாரம் என் அலுவலக நண்பர் மூலம் BS.Player என்று ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தினார். படம் பார்ப்பதற்கான மென்பொருள், இதன் சிறப்பு, படம் இம் மென்பொருளில் ஓட ஆரம்பித்ததும், இணையத்தில் அப்படத்திற்கான subtitleகளை தேடிக் காட்டுகிறது, அதில் நமக்கு தேவையான subtitleகளை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதிக வேற்று மொழி படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு உபயோகமான மென்பொருள்.

சிதறிய முத்துக்கள்:
நேற்று Express Avenueவை திறந்து வைத்து பேசிய முதல்வர் கலைஞர், இவ்வணிக வளாகத்தை கட்டியிருக்கும் கோயங்கா குடும்பத்தினரை (இக்குடும்பத்தை சேர்ந்த ராம்நாத் கோயங்கா  தான் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் நிறுவுனர்)  பற்றி இப்படி குறிபிடுகிறார் "வசதியும் வாய்ப்பும் இருந்தாலுங்கூட, இதைச் செய்ய வேண்டுமே என்கிற எண்ணம் எல்லோருக்கும் வந்து விடாது. பொது நல நோக்கிலே யாருக்கு கவனம் இருக்கிறதோ, யாருக்கு பொது நலச் சிந்தனை இருக்கிறதோ அவர்களால் தான் இத்தகைய காரியங்களைச் செய்ய முடியும்."
ஏதோ இவர்கள் தொண்டு இல்லம் ஆரம்பித்த மாதிரி பேசியிருக்கிறார் முதலவர், ஆண்டவா.

No comments: