Thursday 3 September 2009

கிளிஞ்சல் 4 - ஆசிரியர் ராஜேந்திரன்

ஆசிரியர்கள், இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் கூட சிலர் இருக்கிறார்கள் ஆனால் ஆசிரியர்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப குறைவு, படிக்காதவர்களுக்கு கூட அவர்கள் செய்யும் தொழில் சம்பந்தமான ஆசிரியர்கள் இருப்பார்கள். இதுவரையான என் பயணத்தில் பல ஆசிரியர்களை கடந்து வந்திருக்கிறேன், அதில் எனக்கு பிடித்த ஆசிரியர்கள் சிலர் இருக்கிறார்கள். ஐந்தாவது வரை படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர், கணக்கு வாத்தியார் பரமேஸ்வரன், சரஸ்வதி மேடம், தமிழன்னை, விலங்கியல் ஆசிரியர் அர்த்தநாரி, வேதியியல் ஆசிரியர் சரவணன், டியூஷன் வேதியியல் ஆசிரியர் ராஜேந்திரன், கல்லூரி விரிவுரையாளர்கள் மகாலிங்கம், மகேஷ் மற்றும் குமார் போன்றோர்கள் மறக்க முடியாத ஆசிரியர்கள். இந்த வரிசையில் நான் புத்தகம் படிக்கவும், வலைப்பூவில் எழுதவும் ஆர்வத்தை தூண்டியவர் என்கிற முறையில் திரு. சுஜாதாவும் என் ஆசிரியரே. மேலே குறிப்பிட்ட பல ஆசிரியர்களையும் விட்டு நான் விலகி விட்டேன், ஒரு சிலருடன் தான் தொடர்பு இருக்கிறது. என்னுடைய ஆறாவது வகுப்பு முதல் இன்று வரை நான் விலகாமல் இருக்கும் ஒரே ஆசிரியர் என்னுடைய இயற்பியல் ஆசிரியர் திரு. ராஜேந்திரன், இந்த வார கிளிஞ்சல்.

நான் ஐந்தாவது வரை கவுந்தப்பாடி காந்தி கல்வி நிலையத்தில் படித்தேன், ஆறாவது முதல் பள்ளி மாற வேண்டிய நிலை, நான் ஆங்கில வழிக்கல்வியில் தான் படிப்பேன் என்று அடம் பண்ணியதால் நான் பெருந்துறை விவேகானந்த matriculation பள்ளியில் சேர்க்கப்பட்டேன், எங்கள் வீட்டிலிருந்து 15 கீ.மீ. தொலைவில் அமைந்திருந்தது இப்பள்ளி. நான் சேர்ந்ததில் இருந்த பள்ளி படிப்பை முடிக்கும் வரை இப்பள்ளியில் இருந்த ஆசிரியர்களில் ராஜேந்திரன் ஆசிரியரும் ஒருவர், இயற்பியல் ஆசிரியர். நான் படிப்பில் ஏழாவது வரை சுமார் தான், எட்டாவதில் இருந்துதான் ஓரளவு நன்றாக படித்தேன். ஆறு, ஏழு வகுப்புகளில் ஒரு ஆசிரியர் மாணவனாக தான் பழகினோம், எட்டவதில் இருந்து எங்கள் பிணைப்பு கொஞ்சம் அதிகமானது, நான் படிப்பில் சுமார் என்பதாலோ என்னவோ ஏழாவது வரை கொஞ்சம் பயத்துடன் ஆசிரியர்களை பார்த்துவந்தேன், எட்டவதில் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனக்கும் படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது, கொஞ்சம் அக்கறையுடன், நேசத்துடன் என் படிப்பை அணுகினேன், கொஞ்சம் படிக்கவும் செய்தேன், அதனால் ஆசிரியர்களும் நண்பர்களாக தெரிந்தனர். முதல் ரேங்க் வாங்கவில்லை என்றாலும் நான்காவது ஐந்தாவது ரேங்க் வாங்கும் அளவுக்கு படித்தேன். எட்டவதில் இருந்து ஆசிரியர்களுடன் நன்றாக பழக ஆரம்பித்தேன் குறிப்பாக ராஜேந்திரன் ஆசிரியருடன்.

நான் காலை ஏழு மணி 17ஆம் என் பேருந்தில் பள்ளிக்கு செல்வேன், நான் ஏறும் நிறுத்தத்தில் இருந்து 15 நிமிடத்தில் வரும் கருங்கரடு நிறுத்தத்தில் ஆசிரியர் ஏறுவார், நான் ஏறும்போது எப்படியும் அமர்வதற்கு இடம் இருக்கும் அவர் ஏறும் போது எப்போதும் இடம் இருக்காது. நான் பேருந்தில் ஏறிய சில நிமிடங்களில் தூங்க ஆரம்பித்துவிடுவேன் நான் இறங்கும் நிறுத்தத்தில் தான் விழிப்பேன். அந்த நிறுத்தத்தில் இருந்து பள்ளிக்கு 10 நிமிடம் நடக்க வேண்டும், நானும் அவரும் பேசிக்கொண்டே நடந்து செல்வோம். ஆசிரியர் நல்ல உயரம், அவர் வேகமாக நடப்பார் நானும் அவருக்கு இணையாக நடக்க முயற்சிப்பேன், சில நாட்கள் நான் கிட்ட தட்ட ஓடுவேன். இந்த நடை பயணத்தின் போது நாங்கள் பொதுவாக விளையாட்டு சம்பந்தமாக எதாவது பேசுவோம், குறிப்பாக கிரிக்கெட் அல்லது டென்னிஸ். கிரிக்கெட் அவருக்கு மிகவும் பிடிக்கும். விளையாடுவதில் ஆர்வமாக இருப்பார், பூ பந்து, கிரிக்கெட் விளையாட்டுகளில் எங்களுடன் விளையாடியிருக்கிறார்.பள்ளி முடிந்த பிறகு மாலை வேளைகளில் அவர் பெரும்பாலும் பூ பந்து விளையாடுவார்.

எட்டாவதில் முதல் மாதத்துக்கு பிறகு அவர் மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஆனார். முதல் மாதம் terror. எட்டாவதில் முதல் பாடம் Vernier caliper நடத்தும் போது வகுப்பில் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அனைவரும் அடி வாங்கினோம், அதன் பிறகு இரண்டாவது பாடம் நடத்தும் போது What is mass? என்ற கேள்விக்கு பயந்துகொண்டு நான் கூறிய பதில் அவர் காதில் விழுந்ததா இல்லையோ தெரியவில்லை அவர் இடது கையால் விட்ட அறை இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் பிறகு அவரிடம் நான் அடிவாங்கவில்லை, சமத்து மாணவனாகிவிட்டேன். ஒன்பதாவது வரைக்கும் எங்களுக்கு பாடம் எடுத்தார், பள்ளியில் +1, +2 ஆரம்பித்த பிறகு அவர் அவர்களுக்கு பாடம் நடத்த போய்விட்டதால், பத்தாவதுக்கு மட்டும் ஆனந்த் என்ற ஆசிரியர் எங்களுக்கு இயற்பியல் பாடம் நடத்தினார். ராஜேந்திரன் சார் நன்றாக பாடம் நடத்துவார், அவர் பாடம் நடத்தியதில் புரியாதது என்று எதுவும் இருக்காது, வகுப்பில் புரியவில்லை என்று தனியாக கேட்டாலும் அழகாக சொல்லித்தருவார். அரைகுறையாக, அவசரமாக பாடம் நடத்துவதெல்லாம் இருக்காது, நிதானமாக ஆழமாக நடத்துவார். +2 படிக்கும் போது இயற்பியலை என் விருப்பாடமாக கருதியதற்கு முக்கிய காரணம் அவர் தான்.

என் படிப்பின் மேல் கொஞ்சம் தனி கவனம் செலுத்தினார் அவர், காரணம் என் அப்பா. அவர்கள் எப்படி அறிமுகமாகிகொன்டார்கள் என்று நினைவில் இல்லை, ஆனால் இருவருக்கும் நல்ல பழக்கம் இருந்தது, இருக்கிறது. அப்பா என் படிப்பை பற்றி அவரிடம் விசாரிப்பது உண்டு, ஆசிரியரும் நான் நன்றாக படிப்பதாகவும், நல்ல மதிப்பெண் பெற்றுவிடுவேன் என்றும் கூறுவார். சில சமயங்களில் அப்பா என்னை வீட்டிற்கு அழைத்து செல்லும் போது ஆசிரியரும் எங்களுடன் வருவார். என் படிப்பை தவிர அவர்கள் விவசாயம் குறித்தும் பேசிக்கொள்வதுண்டு. நான் +2 படிக்கும் போது "நீ நல்ல மார்க்கு வாங்க வேண்டும் அண்ணாமலை, உங்கப்பா உன்மேல நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்" என்று கூறுவார், நான் படித்தற்கு இதெல்லாம் எதோ ஒரு வகையில் மறைமுக காரணமாக இருந்திருக்கலாம். +2 இயற்பியல் பாடத் தேர்வு முடிந்தன்று நான் வீட்டிற்கு செல்ல அண்ணாசாலை நிறுத்தத்தில் நின்றுகொண்டிருதேன் அப்போது சற்று தள்ளி நின்றிருந்த ஆசிரியர் "பரீட்சை நல்ல எழுதியிருக்கிற இல்ல? 185 மார்க்காவது வாங்கணும் அண்ணாமலை, இல்லாட்டி உங்கப்பா மூஞ்சியில முழிக்க முடியாது" என்றார் நான் "கண்டிப்பா நல்ல மார்க் வாங்குவேன் சார்" என்றேன். இந்த காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது, சொன்னபடியே நல்ல மார்க் வாங்கினேன்.

நான் பள்ளியை விட்டு வந்த ஒன்றிரண்டு வருடங்களில் ராஜேந்திரன் சார், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிவிட்டார். நான் பள்ளி படிப்பு முடித்து கல்லூரி சேர்ந்த பின்னரும், வருடம் ஒரு முறையாவது பள்ளிக்கு செல்வதுண்டு, அங்கிருக்கும் என் ஆசிரியர்களிடம் பேசிவிட்டு வருவதுண்டு, அதே போல் அவரையும் தலைமை ஆசிரியர் அறையில் சந்தித்து பேசிவிட்டு வருவதுண்டு. எனக்கு பாடம் நடத்திய பலர் இன்று அந்தப்பள்ளியில் இல்லை அவர்களில் சிலருக்கு அரசு வேலை கிடைத்து, சிலர் வேறு பள்ளிகளுக்கு மாறிவிட்டனர். ராஜேந்திரன் சாரும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்துவிட்டார். நான் ஒரு முறை அமெரிக்காவிலிருந்து அவரைத் தொலைபேசியில் அழைத்து பேசியிருந்தேன். பிறகொருமுறை சந்திக்கும் போது அந்த தொலைப்பேசி அழைப்பை குறிப்பிட்டு, தன்னுடைய மாணவன் ஒருவன் வளர்ந்து அமெரிக்காவிலிருந்து தனக்கு தொலைப்பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். என் வளர்ச்சியில் முக்கியப்பங்கு அவருக்கு இருக்கிறது அப்படிப்பட்ட ஆசிரியருக்கு என்னுடைய வணக்கங்களை எதாவது ஒரு முறையில் சொல்லிக்கொண்டிருகிறேன். நாங்கள் இப்போதும் சந்தித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் தான் இருக்கிறோம். இன்று காலை கூட அவரை அழைத்து ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினேன். ஒரு வருடம் இடைவெளி விட்டு தொலைப்பேசினாலும், சந்தித்து கொண்டாலும் எந்த தயக்கமும் இன்றி கடந்த முறை சந்திப்பில் விட்ட இடத்தில இருந்து பேச முடிவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.ஆசிரியர் என்பதைவிட அவரை ஒரு நண்பராகவே கருதுகிறேன்.

நான் இதுவரை என் வாழ்வில் அடைந்த முன்னேற்றத்தில் அவர் பங்கிருந்ததை போல, இன்னும் அடையப்போகும் முன்னேற்றத்திற்கும் அவருடைய வழிகாட்டலும் ஆசிர்வாதமும் எப்போதும் இருக்கும். இப்படி இவ்வுலகெங்கும் பல மாணவர்களுடைய வாழ்க்கையில் ஒளியேற்றிகொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

1 comment:

venkatesan said...

through this issue i wishing to the all students to get a teacher like you...