Monday 24 August 2009

கிளிஞ்சல் 3 - அந்தியூர்

அந்தியூர் என்ற ஊரை கேள்விப்படிருப்பீர்கள், ஆனால் நான் சொல்லப்போவது அந்தியூர் என்ற ஊரை பற்றியில்லை அந்தியூர் என்ற நபரை பற்றி. எனக்கு அந்தியூர் என்ற ஊர் அறிமுகம் ஆகும் முன் அந்தியூர் என்ற நபர் தான் அறிமுகமானார். அந்தியூருடைய பெயர் தங்கராசு. அவர் பெயர் தங்கராசு என்பது பல பேருக்கு தெரியாது, ஏன் எனக்கே இப்பதிவை எழுத ஆரம்பிக்கும் முன் அவர் பெயரை யோசிக்கும் பொது நினைவு வரவில்லை, பின் என் அம்மாவை கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவரின் சொந்த ஊர் அந்தியூர் பக்கத்திலிருக்கும் அம்மனாம்பாளையம், அந்த ஊரிலிருந்து எங்கள் ஊருக்கு அவரின் அப்பா குடும்பத்துடன் வந்து தங்கினார். அந்தியூர் பக்கத்திலிருந்து வந்ததால் சிறு வயதிலேயே தங்கராசு என்று அழைக்கப்படாமல் அந்தியூர்காரன் , அந்தியூர்காரன் என்றழைக்கப்பட்டார், பின்னர் அதுவே அந்தியூர் ஆனது. பின்னர் பெரும்பாலும் அவர் அந்தியூர் என்ற பெயரை தவிர வேறு பெயரில் அழைக்கப்படவில்லை.

அந்தியூரை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், உழைப்பாளி.
"வயலுக்கு தண்ணி கட்டனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"பாத்தி பிடிக்கனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"மஞ்சள் வெட்டனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"கரும்பு வெட்டனுமா அந்தியூரை கூப்பிடுங்க"
"ஐயோ் பாம்பு..." - "அந்தியூரை கூப்பிடுங்க"

எத்தனையோ நாள் இரவு எங்கள் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சியிருகிறார், வெட்டி வைத்த மஞ்சளுக்கு காவல் இருந்திருக்கிறார், இரவெல்லாம் நெல்லடித்திருகிறார். எங்கள் ஊரில் எதாவது பனை அல்லது தென்னை மரம் வெட்டப்பட்டால் அதிலிரிந்து குருத்து வெட்டி தந்திருக்கிறார், பனங்காய் வெட்டி தந்திருக்கிறார், எங்கள் வீட்டில் கோழி குழம்பு என்றால் கோழி பொசுக்குவது அவராகத்தான் இருக்கும்.அவர் செய்யாத தோட்ட வேலை எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆடி பெருக்கின் போது ஊஞ்சல் கட்டுவதாகட்டும், எங்கள் ஊர் பிள்ளையார் கோவில் விசேசத்தின் போது உதவி செய்வதாகட்டும் அவருக்கு நிகர் அவர் தான்.என்ன வேலை எத்தனை மணிக்கு சொன்னாலும் கொஞ்சமும் தயக்கமின்றி செய்வார். என் அக்காவின் திருமணம் வேறு ஊரில் நடந்த போது, கல்யாண வீடு என்று தெரிவதற்க்காக அவருடைய டேப் ரெகார்டரை எங்கள் வீடு திண்ணையில் வைத்து பாட்டு ஒலிபரப்பியிருக்கிறார்.

பார்ப்பதற்கு ஆரம்பகால விஜயகாந்த் போல இருப்பார்.கடின உழைபினாலேயே அவர் உடல் மிக வலுவாக இருக்கும், என் சிறுவயதில் அவர் புஜ பலத்தை காட்ட சொல்லி அதில் தொங்கியிருக்கிறேன், எங்கள் ஊர் அர்னால்ட் அவர் தான். அவர் முகத்தில் எப்போதும் சிறு முரட்டுத்தனம் குடியிருக்கும். எப்பவாவது சிரிப்பார். காட்டில் வேலை செய்யும் போது நேரம் வீணடிக்காமல் ஏதோ தன் சொந்த தோட்டத்தில் வேலை செய்வது போல அக்கறையாக வேலை செய்வார். எங்கள் தோட்டத்தில் அவர் செய்யாத வேலை இல்லை, எங்கள் தோட்டத்தில் விளைந்த பல வெள்ளாமைகளில் அவருடைய உழைப்பு கணிசமாக உண்டு.

நான் எப்போதும் அவரை அந்தியூர் அண்ணா என்று தான் அழைப்பேன். என்னை பெரும்பாலும் மலை என்று அழைப்பார். காலையும் மாலையும் தேநீர் குடிப்பதற்கு தினமும் எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் எங்கள் வீட்டிற்கு வராத நாட்கள் மிகக் குறைவு. என்னை பல முறை பள்ளியில் இருந்து அழைத்து வந்திருக்கிறார். என் பாட்டி கவலைக்கிடமாக இருந்த போது கூட அவர்தான் என்னை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். இப்படி பல வேலைகளில் பல உதவிகள். என் சிறு வயது முதல் கல்லூரி காலம் முடியும் வரை என் வாழ்வில் பல இடங்களில் பரவிகிடக்கிறார் அந்தியூர் அண்ணன். அவருடைய மனைவி பெயர் தங்கம்மாள், அவரும் எங்கள் தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார், இன்னமும் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள் செல்வம், முத்து. இவர்கள் பெரிதாக படிக்கவில்லை. இருவரும் பனியன் கம்பெனிகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

சில பொருட்கள், சம்பவங்கள் சிலரை ஞாபகப்படுத்தும், அந்த வகையில் இரண்டு விசையங்கள் அவரை ஞாபகப்படுத்தும் ஒன்று பலாப்பழம் மற்றொன்று ஆடி மாதம் கட்டும் தூரி (அதாவது ஊஞ்சல்). ஒவ்வொரு வருடமும் பலாப்பழ சீசனின் போது என் அப்பா வாங்கி வரும் பலாப்பழத்தை வெட்டி சுளைகளை எடுத்து தருவது அந்தியூர் அண்ணன் தான். பலாப்பழத்தை மற்ற பழங்களை போல அப்படியே வெட்டி சாப்பிட முடியாது, பலாப்பழத்தை வெட்டும் போது அதனுள் இருக்கும் நார்கள் அதிலுள்ள பசையால் கத்தியிலும், கையிலும் ஒட்டிக்கொள்ளும் பிறகு அதை சுத்தம் செய்ய கடினமாக இருக்கும், அதற்காகவே பலாப்பழத்தை வெட்டும்முன் கத்தி மற்றும் கைகளில் தேங்காய் எண்ணெய் பூசிக்கொண்டு வெட்டுவதுண்டு, அப்படி மிக அழகாக சுத்தமாக வெட்டித் தருவார் அவர். அதே போல தூரி, ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் தூரி கட்டி ஆடுவது பல இடங்களில் உள்ள பழக்கம், அப்படி நாங்கள் எங்கள் புளிய மரத்தில் தூரி கட்டி ஆடுவோம், அந்த தூரியை கட்டி தருவது அவர் தான். பல நேரங்களில் தூரி கட்டிவிட்டு வேகமாக ஆட்டிவிடுவார் கல்லூரி சென்ற காலங்களில் கூட தூரி ஆடியது உண்டு,. அவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் இரண்டு பனை மரங்களுக்கு இடையில் பெரிய தூரியெல்லாம் கட்டித் தருவார், அதில் ஆடுவதே பயமாக இருக்கும்.

அவருடைய கேட்கும் திறன் சில வருடங்களுக்கு முன் கொஞ்சம் குறைந்தது. கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள் அவர் எங்கள் ஊர்லிருந்து கவுந்தப்பாடிக்கு மிதிவண்டியில் செல்லும் போது பின்னாடி வந்த லாரி மோதியது, பலமான அடி, உடனடியாக பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்து சென்றும் அவர்கள் போலீஸ் கேஸ் அது இது என்று ஏற்ப்படுத்திய தாமதத்தில் அங்கேயே தன்னுடைய கடைசி மூச்சை சுவாசித்தார். இந்த விபத்து பற்றிய தகவல் எங்கள் வீடிற்கு தான் முதலில் தொலைப்பேசியில் தெரிவிக்கப்பட்டது, அவரின் உறவினர்கள் செல்லும் போது அவர் இறந்திருந்தார். இந்த சம்பவம் நடந்தன்று நான் உடல் நிலை சரியில்லாததால் விடுப்பில் வீட்டில் தான் இருந்தேன், அந்த செய்தி கேட்டு என்னால் நம்ப முடியவில்லை, அழ ஆரம்பித்துவிட்டேன், வேறென்ன செய்ய முடியும். காவல் துறை விசாரணைக்கு பிறகு அவருடைய உடல் எடுத்து வரப்பட்டது, உடல் நிலை சரி இல்லாததால் நான் சென்று பார்க்கவில்லை, அதுவும் நல்லதுதான் என்று தோன்றுகிறது பிறகெப்போது அவர் நினைவு வரும்போதெல்லாம் அவருடைய கம்பீரமான முகமே ஞாபகம் வருகிறது.

கடந்த முறை ஊருக்கு சென்ற போது என் அக்கா மகள் தூரி கட்டி தர சொல்லி அடம் பண்ணி கொண்டிருத்தால், ஆடி 18 அன்று வரை தூரி கட்டப்படாமலையே இருந்தது பிறகு அன்று மதியம் போலத் தான் தூரி கட்டப்பட்டது. அவள் அன்று மாலை வரை மட்டும் ஆடிவிட்டு பிறகு ஜெடெக்ஸ் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். அந்தியூர் அண்ணன் போன்றவர்களை இவள் வாழ்க்கையில் சந்திப்பாளா என்பது சந்தேகமே. அந்தியூர் அண்ணன் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என் மனதிலும், அவருக்கான இந்த அஞ்சலி பதிவிலும். உங்கள் ஊரிலும் இதுபோல் போல் ஒருவர் கண்டிப்பாக இருப்பார், தேடிப்பாருங்கள்.

3 comments:

Ragu said...

WOWWWW, Really touching, Disturbed and reminded lot of things.

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நல்ல பதிவு , மனிதர்களை மறக்காமலிருப்பது நல்ல குணம் வாழ்த்துக்கள் . பழைய நிஜங்களை நியாபகப்படுத்துகிறது. "அந்தியூரின் " புகைப்படத்தை இணைத்து விட்டு சொல்லுங்கள் . அப்போது பதிவு மேலும் மெருகேரும் .நன்றி

MSG said...
This comment has been removed by the author.